Skip to main content

“அப்போதெல்லாம் வக்கீலுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள்!!” - திமுக வக்கீல் எம்எல்ஏ கலகல பேட்டி!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

ி

 

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் ஒருமாதத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை அந்தந்த அமைச்சர்கள் தொடர்ந்து அறிவித்துவருகிறார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் தங்களின் முதல் உரையை அவையில் பதிவு செய்துவருகிறார்கள். அந்த வகையில் முதல்முறையாக எழும்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக உறுப்பினர் பரந்தாமன் சட்டப்பேரவையில், அத்தொகுதியின் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் கூறியதோடு மட்டுமல்லாமல், தொகுதியின் பெயரையே மாற்ற வேண்டும் எனக் கூறி அதிர்ச்சி அளித்தார். என்ன காரணம், எதற்காக பெயர் மாற்றம் என்பது குறித்தான பல்வேறு கேள்விகளை அவரிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


பள்ளி பருவத்திலேயே நீங்கள் அரசியலுக்கு வந்துவிட்டீர்கள். அப்போது நீங்கள் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவோம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்போம் என்று நினைத்திருக்கிறீர்களா? இந்த வாய்ப்பை நீங்கள் எதிர்பார்த்தீர்களா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

 

மாணவர் பருவத்தில் இருந்தே எனக்கு அரசியல் ஆர்வம் இருந்தது உண்மை. குறிப்பாக கலைஞர் அவர்களின் பேச்சு, முரசொலி வாசிப்பு முதலியன அந்த ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தின. எனவே தலைவரின் பேச்சும், எழுத்தும் நான் அரசியலுக்கு வர மிக முக்கிய காரணமாக இருந்தது என்பதே உண்மை.

 

அரசியலில் பல்வேறு கட்டங்களாக உயர்ந்து தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளீர்கள். அரசியலில் கட்சி பொறுப்புகளைக் கடந்து தற்போது சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பை பெற்றுள்ளீர்கள், அதை எப்படி பார்க்கிறீர்கள்? முதன்முதலாக சபைக்குச் சென்றபோது எந்த மாதிரியான உணர்வில் இருந்தீர்கள்? 

 

இரண்டும் கலந்த ஒரு மனநிலையில்தான் இருந்தேன். அதை விவரிப்பது என்பதைக் காட்டிலும், அப்போது வழிந்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டேன் என்பதே இந்தக் கேள்விக்கு மிகச் சரியான பதிலாக இருக்கும். மிகவும் அப்போது உணர்ச்சிப்பூர்வமாக இருந்தேன். எதற்காக நாம் உழைத்தோமோ, அதை அங்கீகரித்து தலைவர் நமக்கு வாய்ப்பு கொடுத்து சட்டப்பேரவைக்கு அழைத்துச் செல்வது என்பது மிகவும் சந்தோஷமான ஒரு நிகழ்வு. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதையும் தாண்டி இனி நிறைய உழைக்க வேண்டியுள்ளது என்ற பொறுப்பு தற்போது கூடுதலாக வந்துள்ளது. 

 

சட்டமன்றத்தில் நீங்கள் பேசியபோது எழும்பூர் என்ற பெயரை எழுமூர் என்று மாற்ற வேண்டும் என்று பேசியிருக்கிறீர்கள், என்ன காரணம், அதற்கான வரலாற்றுப்பூர்வமான ஆதாரம் இருக்கிறதா? 

 

சோழர் காலத்தில் எழுமூர் என்றழைக்கப்பட்ட அந்தப் பெயர், தற்போது எழும்பூர் அல்லது ஆங்கிலத்தில் எக்மோர் என்றழைக்கப்படுகிறது. எழுமூர் என்ற பெயர் காலப்போக்கில் பேச்சில் திரிந்து எழும்பூர் என்று மாறிப்போய்விட்டது. எனவே எழும்பூர் என்ற பெயர் இலக்கணப்படி வைத்த பெயர் அன்று. 900 ஆண்டுகால வரலாறு உடைய எழுமூர் என்ற அந்தப் பெயரை மீண்டும் வைக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தேன். இந்த அரசு செய்யவில்லை என்றால் யார் செய்யப் போகிறார்கள். நிச்சயம் நல்ல மாற்றம் வரும்.  

 

பல்வேறு விஷயங்களை சட்டமன்றத்தில் பேசியிருந்த நீங்கள், வழக்கறிஞராக இருந்ததால் பல்வேறு சிக்கல்களை சந்தித்ததாக நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். அது பற்றி கூற இயலுமா? 

 

வழக்கறிஞர்களுக்குப் பெண் கொடுக்க யோசிப்பார்கள், அதை நானே என்னுடைய சொந்த வாழ்க்கையில் சந்தித்துள்ளேன். பல வரன்கள் தட்டிச் சென்றன. பிறகு திருமணம் செய்துகொண்டேன். அதைப்போல வீடு கிடைப்பதில் பிரச்சனை இருப்பதை தற்போது நானே நேரில் பார்த்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின், தொகுதியிலேயே தங்க வேண்டும் என்று முடிவெடுத்த நான், அதற்காக வீடு பார்த்தேன். பல வீடுகள் இறுதி செய்யப்பட்டு, கடைசியில் தள்ளிப்போனது. அவர்கள் யாரும் நான் வழக்கறிஞர், அரசியல்வாதி என்று தனிப்பட்ட காரணங்களைக் கூறாமல் வேறு எதாவது ஒரு காரணத்தைக் கூறி நிராகரிப்பார்கள். தற்போது நான் இருக்கும் ஃபிளாட் ஓனர் வக்கீல்தான். அவருக்கு அந்த தொழில் மீது புரிதல் இருந்ததால் வீடு கொடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எனவே நாம் நடந்துகொள்வது என்பது மிக முக்கியமான ஒன்று. நம் செயல்பாடு சரியாக இருந்தால் யாரும் நம்மை வேண்டா வெறுப்பாக பார்க்க மாட்டார்கள். 

 

சட்டமன்றத்தில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பெரியார் பிறந்தநாள் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். நாட்டில் சமூகநீதிக்கு உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கையில், எதற்காக இப்போது பெரியாரை இந்த திராவிடக் கட்சிகள் தூக்கிப்பிடித்து வருகிறார்கள் என்று கூறுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

 

இந்தியாவில் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோமாயின், அந்த அரசியலமைப்புச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்னும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று கூறி அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற யார் காரணம்? அவர் சார்ந்த திராவிட கழகம்தானே?  அப்புறம் அவரை ஏன் கொண்டாடுகிறீர்கள் என்றால் என்ன பதில் சொல்வது. இந்தக் கேள்வியைக் கேட்பவர்கள் அனைவருக்கும் தெரியும் பெரியார் யார் என்று. இருந்தும் விடாப்பிடியாக வம்பிழுக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள். இதனால் பெரியார் ஒன்றும் சிறுமைப்பட போவதில்லை. அவர் அதையும் தாண்டியவர். காலகாலத்திற்கும் நிலைத்து நிற்பவர். 

 

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.