ops sengottaiyan Photograph: (admk)
2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் அனுபவங்கள் மற்றும் அரசியல் பார்வைகளை பிரபலங்கள் பகிர்ந்து வரும் நக்கீரன் டிவியின் புதிய நிகழ்ச்சி 'சூடா ஸ்ட்ராங்கா'. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவை சேர்ந்த மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான செம்மலை கலந்துகொண்டு பல்வேறு அரசியல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
படையப்பா படம் ரீ ரிலீஸ் ஆகியிருக்கு. அதில் மணிவண்ணன், ரஜினி மற்றும் சிவாஜியை வீட்டை விட்டு வெளியே அனுப்புவது போல ஓபிஎஸ், செங்கோட்டையனை கட்சியில் இருந்து வெளியே அனுப்பிவிட்டாரா எடப்பாடி?
''அப்படி இல்லை. நாங்களாக அனுப்பவில்லை. அவர்கள் செயல்பாடுகள் மூலமாக அவர்களே தேடிக்கொண்ட முடிவு என்றுதான் நாம் சொல்ல முடியும். எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடியரை பொறுத்தவரையும் யாரையும் வெளியில் அனுப்பும் குணம்கொண்டவர் அல்ல. அவர் அப்படிப்பட்டவரும் அல்ல. ஆனால் அந்த மாதிரி சூழ்நிலையை அவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள். அதனால் தான் நாங்கள் பேசும்போது கூட அவர்கள் பிரிந்து சென்றாலும் எங்களுடைய இயக்கத்திற்கு மாறாக நடந்தது, அல்லது எங்கள் இயக்க கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதனால் பிரிந்து போனவர்கள் என்பதை விட இயக்கத்தால் நீக்கப்பட்டவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
எங்களுடைய தலைமையோ அல்லது எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடியாரோ அவர்களை வெளியேற்றவில்லை. வெளியேறுகிற அந்த சூழ்நிலையை ஏற்படுத்தி கொண்டு அவர்களாக அந்த முடிவை தேடிக்கொண்டார்கள். அதுதான் உண்மை. எங்கள் கட்சியை பொறுத்தவரையிலும் எங்க பொதுச்செயலாளரைப் பொறுத்தவரைக்கும் எம்ஜிஆர் காலத்தில இருந்து ஜெயலலிதா காலத்தில இருந்து யாரையும் இழக்க வேண்டும் என எங்கள் தலைவர்கள் நினைச்சதே கிடையாது. எல்லோரையும் அரவணைத்து போக வேண்டும் என்ற பண்புடையவர்கள். அப்படி பண்பட்ட தலைவர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும். அதே வழியிலதான் எங்க எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியை சீண்டுவது அல்லது அவரைப் பற்றி கமெண்ட் கொடுக்கும் போது எங்கள் கட்சி கட்டுப்பாட்ட மீறி அல்லது கொள்கைக்கு மாறாக, குறிக்கோளுக்கு மாறாக செயல்படும்போது நீக்கப்படுகிறார்கள். இது எடப்பாடி பழனிசாமி எடுக்கிற முடிவு அல்ல அது பொதுக்குழு கூடி முடிவெடுத்து இந்த மாதிரி நபர்களை இயக்கத்தில வைத்து கொண்டிருந்தால் இயக்கத்துக்கு நல்லதல்ல என முடிவெடுக்கும் போது அவங்க நீக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்.
எஸ்.டி.சோமசுந்தரம் எம்ஜிஆரையே குற்றம் சாட்டியவர். அதேபோல் ஆர்எம்.வீரப்பன் ஜெயலலிதாவை எதிர்த்து பேசுனவர்தான். ஆனால் அவர்கள் பேச்சில் ஒரு நாகரீகம் இருந்தது. அதாவது தாக்குதல் என்றாலும் கூட அந்த தாக்குதல் தாங்கிக் கொள்ளக்கூடிய தாக்குதலாகா இருந்தது. ஆனால் நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. இப்போது எங்கள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் அல்லது நீக்கப்பட்டவர்கள் பேசும் பேச்சு தரம்தாழ்த்து இருக்கிறது. உதாரணத்துக்கு 'துரோகி' அந்த வார்த்தை கடுமையான வார்த்தை. சரி அதுகூட கொஞ்சம் கடுமையான வார்த்தை என்றாலும் கூட அதைப் பொறுத்துக்கலாம்.
'அரக்கன்' எங்கள் பொதுச்செயலாளரை பார்த்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர், அதுவும் அவர் தனியாக ஒரு இயக்கத்தை தொடங்கி நடத்திக்கொண்டிருப்பவர். ஒரு வரலாற்று சிறப்புமிக்க இயக்கம் அந்த இயக்கத்தினுடைய தொண்டர்களால் பொதுச்செயலாளர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட எடப்பாடி பழனிசாமியை பார்த்து 'அரக்கன்' என்று சொல்லுவதும், 2026 தேர்தலிலே 'சூர சம்ஸ்காரம் செய்வேன் அரக்கனை ஒழிப்பேன்' என்று சொல்வதையெல்லாம் எம்ஜிஆர் வேண்டுமானால் அந்த மன்னிக்கக்கூடிய அந்த குணம், மனம், உள்ளம் எங்களை போன்ற இருக்கும் என்று நீங்களும் எதிர்பார்க்க மாட்டீர்கள். எனவே அந்த தலைவர்களோடு நாங்கள் எங்களை ஒப்பிட்டுக் கொள்ள முடியாது.
Follow Us