Skip to main content

அமைச்சர் பதவிக்கு போட்டியிடுவது யார்? யார்?

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

 

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி. வழக்கு ஒன்றில் இவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மணிகண்டனும் அண்மையில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 

 

eps




இரண்டு அமைச்சர்களுக்கு பதிலாக புதிதாக இரண்டு பேரை நியமிக்க எடப்பாடி பழனிசாமி எண்ணி வருகிறார். தனது வெளிநாட்டு பயணத்திற்கு முன்பே புதிய அமைச்சர்களை நியமிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தனது கோஷ்டியைச் சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளராம். ஆனால் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லையாம்.
 

தோப்பு வெங்கடாசலம், குமரகுரு, ராஜன் செல்லப்பா, செம்மலை உள்ளிட்டோர் அமைச்சர் பதவிக்கான போட்டியில் உள்ளார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 


 

முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்புகள் எதுவும் வேண்டாம் என்று ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியிடம் கூறி அதுகுறித்து கடிதம் கொடுத்திருந்தார். இதுபற்றி அப்போது விசாரித்தபோது, அமைச்சர் பதவியை அவர் எதிர்பார்க்கிறார் என்று கூறப்பட்டது. கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று குரல் எழுப்பிய ராஜன்செல்லப்பா, எடப்பாடி பழனிசாமி தனக்கு கண்டிப்பாக அமைச்சர் பதவியை வழங்குவார் என்ற நம்பிக்கையில் உள்ளார். அமைச்சராவதற்கான அனைத்து தகுதிகளும் தனக்கு உள்ளது என்று செம்மலை தரப்பு நினைக்கிறதாம். ஆனால் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுருவுக்கு அமைச்சர் பதவி வழங்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம். 
 

இந்த நிலையில் அமைச்சர் பதவிக்கு போட்டி நடப்பதால், வெளிநாட்டு பயணத்திற்கு முன்பே புதிய அமைச்சர்களை தேர்வு செய்து பதவியேற்க வைத்துவிட்டால், பதவி கிடைக்காதவர்கள், தான் வெளிநாட்டில் இருக்கும்போது ஏதாவது சிக்கல் செய்துவிடுவார்களோ என்ற பயமும் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. ஆகையால் அமைச்சரவை விரிவாக்கம் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் முடிந்த பின்னர் இருக்கும் என்கிறார்கள் அதிமுகவினர். 
 

 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.