Skip to main content

இதேநிலை நீடித்தால் அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளும்... பொங்கலூர் மணிகண்டன் பேட்டி..!

Published on 30/09/2020 | Edited on 01/10/2020

 

 PONGALUR MANIKANDAN - eps - ops

 

கூட்டணிக் கட்சிகள் அ.தி.மு.க தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக, அரசியல் விமர்சகர் பொங்கலூர் மணிகண்டன் கூறியுள்ளார்.

 

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக, அ.தி.மு.க.வில் எழுந்துள்ள பிரச்சனை குறித்து பொங்கலூர் மணிகண்டன் கூறுகையில், 

 

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், கடந்த செப்.,28ல் செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒன்றுபட்ட சிந்தனையோடு, ஒற்றுமையாய்ப் பணியாற்றி, தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம் எனத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். 

 

தீர்மானம் நிறைவேற்றிய சிறிது நேரத்தில், முதல்வர் வேட்பாளர் குறித்து கடும் விவாதம் நடந்துள்ளது. தற்போதைய நிலையில் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. மற்ற இடங்களிலும் ஆதரவை பெற்றுள்ளார் எடப்பாடி. ஓ.பன்னீசெல்வமும் அவர் பகுதியில் ஆதரவை திரட்டியுள்ளார். அவர் தர்மயுத்தம் நடத்தியபோது இருந்த ஆதரவு இப்போது இல்லை. 

 

இருந்தாலும் இவர்களுக்குள் தற்போது நடக்கும் இந்த மோதல் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும். தி.மு.க மிகவும் எளிமையாக ஆட்சிக்கு வந்துவிடும். தி.மு.க நல்லதொரு வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை இவர்கள் உருவாக்கியுள்ளனர். 

 

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் ஆகிய இருவருக்கும் நடக்கும் பஞ்சாயத்து அ.தி.மு.க.வினருக்கு மட்டுமல்ல, ஓட்டு போடும் சாமானிய மக்கள் வரைக்கும் சென்றுள்ளது. பதவிக்காக அடித்துக் கொள்கிறார்கள் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்த சலசலப்பு தேர்தலில் மிகப்பெரிய அளவில் எதிரொலிக்கும். அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் அ.தி.மு.க தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளது. இதேநிலை நீடித்தால் அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளும் படுதோல்வியைச் சந்திக்கும். 

 

Ad

 

அ.தி.மு.க தைரியமாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால், இப்போது உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பதுமட்டுமல்ல, சசிகலாவும் இணைய வேண்டும். பா.ஜ.க கூட்டணியில் இருந்தும் வெளியே வர வேண்டும். பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இருந்தால் நிச்சயம் தோல்விதான்.

 

பா.ஜ.க கூட்டணியில் இருப்பதை தாங்கள் விரும்பவில்லை என்று சில அ.தி.மு.க அமைச்சர்களே என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசும்போது சொல்கின்றனர். இவ்வாறு கூறினார்.       

 

 

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட அந்தப் பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.