Skip to main content

மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் இணைக்க வாய்ப்பு உண்டா? யார் பி டீம்? - விளாசிய கனிமொழி

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

Kanimozhi

 

‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் தி.மு.க.வுக்காக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி மதுரையில் பரப்புரை மேற்கொண்டார். பொதுமக்களிடம், குறிப்பாக பெண்களிடம் அவரது வருகை எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், ஊடகத்தினரின் கேள்விகளை எதிர்கொள்வதிலும் தன் தந்தையைப் போல எளிமையாகவும் லாவகமாகவும் செயல்பட்டார்.

 

உங்கள் பரப்புரை சுற்றுப்பயணம் எப்படி இருக்கிறது?

 

அ.தி.மு.க. அரசின் மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. ஆகையால் அவர்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மதுரையில் பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசியபோது இதைத்தான் உணர முடிந்தது. கடந்த பத்தாண்டுகளாக எந்தவித நல்ல திட்டங்களையும் இவர்கள் கொண்டுவரவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ‘விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம்' என கடந்த ஜனவரி மாதம் முதலே ஸ்டாலின் கூறிவருகிறார். எடப்பாடி பழனிசாமி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திட்டத்தை ஆதரித்துப் பேசிவிட்டு, இப்போது வேறு வழியின்றி அவசர அவசரமாக அறிவிக்கிறார்

 

‘தி.மு.க.வின் பி.டீம் சசிகலா' என்று முதல்வர் கூறுவது பற்றி..?

 

அ.தி.மு.க.வினர்தான் ‘சின்னம்மா', ‘அம்மா' என்றெல்லாம் பாராட்டிப் பேசினார்கள். இன்று ‘தி.மு.க. வின் பி டீம்' என்று கூறுவது நகைப்பாக உள்ளது. ‘பா.ஜ.க.வின் பி.டீம்தான் அ.தி.மு.க.' இது உலகம் அறிந்த விசயம். தி.மு.க. என்றும் நேரடி அரசியல்தான் செய்யும்.

 

இந்தத் தேர்தலில் எதை முன்வைத்து மக்களிடம் பேசுவீர்கள்?

 

இந்த ஆட்சியின் அவலங்களை மக்களிடம் சொல்கின்ற அதே நேரத்தில், கடந்த தி.மு.க. ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட பல நல்ல திட்டங்களை நாங்கள் சொல்லியே மக்களைச் சந்திக்கிறோம். 110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறார்கள், ஆனால் அதனை செயல்படுத்துகிறார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தின் தென்மாவட்ட வளர்ச்சிக்கு உரிய தொழில் வாய்ப்புகளை நிச்சயம் உருவாக்கும்.

 


"ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பேன்” என ஸ்டாலின் சொல்வதற்கு சமூக வலைதளத்தின் தரப்பில் விமர்சனம் எழுகிறதே?

 

இதேபோன்று கலைஞர், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி தருவேன் என்று கூறியபோது நிறையபேர் விமர்சனம் செய்தார்கள். நிறைவேற்றினாரா இல்லையா..? அதுபோல் தி.மு.க. தலைவரும் பிரச்சினைகளைத் தீர்ப்பார்

 

மகளிர் அணி சார்பில் களத்திற்கு வந்துள்ளீர்கள். பெண்களிடம் எதை முன்வைக்கப் போகிறீர்கள்?

 

பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த அநீதிகளுக்கு இன்றுவரை நியாயம் கிடைக்கவில்லை. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள், குறிப்பாக பெண்கள் பிரச்சினைகள் அ.தி.மு.க. அரசால் தீர்க்கப்படவில்லை. காவல்துறையில் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிருக்குப் பல்வேறு திட்டங்கள் சார்ந்த அறிவிப்பு வெளியாகும். எப்பவும் போல தேர்தல் அறிக்கையும் மு.க.ஸ்டாலினும்தான் கதாநாயகர்களாக இருப்பார்கள்

 

தி.மு.க.வின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து உங்கள் பதில்?

 

தலைவர் கலைஞர் மேற்கொண்ட நடவடிக்கை. இதுகுறித்து தலைவர் மு.க.ஸ்டாலின்தான் உரிய முடிவெடுப்பார்.

 

தற்போது நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில், தி.மு.க. மாநில அரசோடு மத்திய அரசையும் சேர்த்து விமர்சித்துப் பரப்புரை செய்கிறதே?

 

இந்த எடப்பாடி பழனிசாமி அரசு முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் ‘பி' டீமாகவே செயல்படுகிறது. மாநில நலனைவிட பதவி மோகமும் பணப்பித்தும் பிடித்து ஆட்டுகிறது. அதற்காக பா.ஜ.க.விடம் மண்டியிட்டு சேவகம் செய்கிறார்கள். பா.ஜ.க.வும், தான் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக்கொள்கிறது. மோடி அரசு பதவியேற்றப் பின் பொது மக்கள், விவசாயிகள், ஊடகத் துறையினர், பத்திரிகைத் துறையினர் என அனைவரும் முடக்கப்படும் நிலையிலேயே உள்ளனர். மோடி அரசு பதவி ஏற்குமுன் இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருந்தது; தற்போது ஜனநாயகம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

தி.மு.க. சார்பில் மதுரையில் கலைஞருக்கு சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருக்கிறாரே?

 

கலைஞர் இறப்பின்போது மெரினாவில் இடம் கொடுப்பதற்கு எத்தனை முட்டுக்கட்டைகள் தமிழக அரசு போட்டது? தி.மு.க.வும் எவ்வளவு சட்டப் போராட்டங்கள் நடத்தி வென்றது என்பதைத் தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்; தி.மு.க.வும் மறக்காது.

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.