Skip to main content

குஜராத்; முதல்வன் பட பாணியில் முதல்வர் வேட்பாளர்; யார் இந்த இசுதான் காத்வி?

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

who is AAP Isudan Gadhvi Gujarat cm candidate

 

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி நேற்று முன்தினம்(3.11.2022) அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவும் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி தனது முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது. டெல்லியில் ஆட்சி செய்யும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாபில் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.  குஜராத் தேர்தலிலும் அதே முனைப்பில் செயல்பட்டு வரும் ஆம் ஆத்மி, தனது முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி குஜராத் மாநில தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராகப் பத்திரிகையாளர்  இசுதான் காத்வி  அறிவிக்கப்பட்டுள்ளார். 

 

யார் இந்த இசுதான் காத்வி?

 

1982 ஆம் ஆண்டு குஜராத்தில் துவாரகா மாவட்டத்தில் உள்ள பிப்லியா கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த இசுதான் காத்வி, கடந்த 2005 ஆம் ஆண்டு இதழியல் படிப்பில் பட்டம் பெற்றார். அதன்பிறகு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யோஜனா' என்ற நிகழ்ச்சியின் மூலம் பத்திரிகையாளராகத் தனது பயணத்தைத் தொடங்கிய இவர், அடுத்ததாக ‘ஈ டி.வி குஜராத்தி’ என்ற ஊடகத்தில் செய்தியாளராகப் பணியாற்றினார். அப்போது டாங் மற்றும் கப்ரதா பகுதிகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டதில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். இதன் வீரியத்தை உணர்ந்த குஜராத் அரசாங்கம் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டது. 

 

who is AAP Isudan Gadhvi Gujarat cm candidate

 

மக்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளில், ஒரு பத்திரிகையாளராக நேர்மையான செய்திகளைக் கொடுத்து வந்த இசுதான் காத்வி,  கடந்த 2015 ஆம் ஆண்டு விடிவி ஊடகத்தில் செய்தி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். அப்போது அந்தத் தொலைக்காட்சியில், மகாமந்தன் என்ற பெயரில் இவர் நடத்திய அரசியல் நிகழ்ச்சி குஜராத் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சி, டி.ஆர்.பி அதிகமாக வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.  இந்த நிகழ்ச்சிகளில், ஆளும் கட்சியான பாஜகவை தொடர்ந்து விமர்சித்து கேள்வி எழுப்பி வந்திருக்கிறார். அத்துடன் ஆளும் கட்சியின் மூலம் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் மக்களின் குரலாக நின்று பேசியிருக்கிறார். 

 

விலகலும்.. இணைவும்..

 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி விடிவி செய்தி ஊடகத்தின் பணியை ராஜினாமா செய்த  இசுதான் காத்வி, அதே மாதம் 14 ஆம் தேதியே தன்னை அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைத்துக் கொண்டார். அதன் பிறகு கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே அவருக்குத் தேசிய இணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து மக்களின் பிரச்சனைக்காகக் குரல் கொடுத்து வருகிறார். 

 

who is AAP Isudan Gadhvi Gujarat cm candidate

 

இந்த நிலையில்தான்,  இசுதான் காத்வி  ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்றக் கட்சிகளைப் போல் இல்லாமல், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரை மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தித் தேர்ந்தெடுத்துள்ளனர். பொதுவாக, இந்தியாவில் இருக்கும் மற்றக் கட்சிகள் தங்களது முதல்வர் வேட்பாளராகக் கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நபரோ அல்லது கட்சியின் தலைவரோ ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால் இதற்கு நேர்மாறாக ஆம் ஆத்மி கட்சி தனது கட்சி முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் முடிவை மக்களிடமே கொடுத்தது. 

 

முதல்வர் வேட்பாளருக்கு விருப்பம் தெரிவித்தவர்களில் இருந்து குஜராத் மாநிலத்தின் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்த வேண்டுமென மக்கள் முடிவெடுக்க, பொதுவாக அக்கட்சி ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பு மெயில், வாட்ஸ்ஆப் மற்றும் சமூகவலைதளங்கள் மூலம் நடத்தப்பட்டது. அப்படி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சியினர் மட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் பொதுவானவர்களும் கலந்து கொள்ளலாம் என அக்கட்சி அறிவித்தது. அதன்படி நடத்தி முடிக்கப்பட்ட வாக்கெடுப்பில்,  இசுதான் காத்வி  75% வாக்குகள் பெற்றார். அதனைத் தொடர்ந்து, அவரை குஜராத் முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி நேற்று அறிவித்தது. இதனை குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதால் குஜராத் தேர்தலில் கடுமையானப் போட்டியாளராக இருப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 

 

வேட்பாளரும்.. விமர்சனமும்..

 

ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப்பில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம்வந்த பகவந்த் மானை அம்மாநில முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றது. அதேபோல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளின் மூலம், பிரபலமான இசுதான் காத்வியை குஜராத்  முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது  பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  அதேவேளையில், ஆம் ஆத்மி கட்சி தொலைக்காட்சி பிரபலங்களை முன்னிறுத்துவதாக மற்ற கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

who is AAP Isudan Gadhvi Gujarat cm candidate

 

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில், கதாநாயகன் பத்திரிகையாளராக இருந்து, பின்பு தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆவர். அதே பாணியில் பத்திரிகையாளராக இருந்து முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இசுதான் காத்வி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.