Skip to main content

ஊடகங்கள் மீதான வழக்குகள் ரத்து: "எந்தெந்த வழக்குகளுக்கு பொருந்தும்..?" - அரசு குற்றவியல் வழக்கறிஞர் விளக்கம்

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

which cases on media houses will be dismissed under tn govt order

 

திமுக ஆட்சிக்கு வந்தால் பத்திரிகைகள், ஊடகங்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியின்போது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படும் என ஏற்கனவே திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் மீது கடந்த அதிமுக அரசால் போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து, அதற்கான உத்தரவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (29.07.2021) பிறப்பித்திருந்தார். 

 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், "2012 முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை, அவதூறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. அவற்றுள்‌ தி இந்து நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 4 வழக்குகளும்‌, டைம்ஸ்‌ ஆஃப்‌ இந்தியா நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 5 வழக்குகளும்‌, எக்கனாமிக்‌ டைம்ஸ்‌ நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 1 வழக்கும்‌, தினமலர்‌ நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 12 வழக்குகளும்‌, ஆனந்த விகடன்‌ வார இதழின்‌ ஆசிரியர்‌ மீது 9 வழக்குகளும்‌, ஜுனியர்‌ விகடன்‌ இதழின்‌ ஆசிரியர்‌ மீது 11 வழக்குகளும்‌, நக்கீரன்‌ இதழின்‌ ஆசிரியர்‌ மீது 23 வழக்குகளும்‌ முரசொலி நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 17 வழக்குகளும்‌ தினகரன்‌ நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 4 வழக்குகளும்‌ போடப்பட்டிருந்தன. மேலும்‌, புதிய தலைமுறை தொலைக்காட்சி, நியூஸ்‌ 7 தொலைக்காட்சி, சத்யம்‌ தொலைக்காட்சி, கேப்டன்‌ தொலைக்காட்‌சி, என்‌.டி. டி.வி தொலைக்காட்சி, டைம்ஸ்‌ நவ் தொலைக்காட்சி மற்றும்‌ கலைஞர்‌ தொலைக்காட்சி ஆகியவற்றின்‌ ஆசிரியர்கள்‌ மீது தலா ஒரு வழக்கு வீதம்‌ 7 அவதூறு வழக்குகள்‌ போடப்பட்டிருந்தன.

 

திராவிட முன்னேற்றக்‌ கழகத்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ “பத்திரிகையாளர்கள்‌ மீது பழிவாங்கும்‌ நோக்கத்தில்‌ போடப்பட்ட அவதூறு வழக்குகள்‌ அனைத்தும்‌ திரும்பப்‌ பெறப்படும்‌” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும்‌ வகையில்‌, பத்திரிகையாளர்கள்‌ மீது போடப்பட்ட 90 வழக்குகளைத்‌ திரும்பப்‌ பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று ஆணையிட்டுள்ளார்கள்‌'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

damodharan
                                                                                              வழக்கறிஞர் ஆ. தாமோதரன்

 

இந்நிலையில், திமுக அரசின் இந்த அறிவிப்பால் எந்தெந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆ. தாமோதரனிடம் கேட்டபோது,  "தமிழக அரசின் உத்தரவின் பேரில் தொடரப்படும் அவதூறு வழக்குகள் முதற்கட்டமாக, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்யப்படும். அந்த  வழக்குகள் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருக்கும்... 'அமர்வு  நீதிமன்றத்தில்  நிலுவையில் இருக்கும் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்று சில பத்திரிகைகள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி தடை கேட்கும் அல்லது வழக்கை ரத்து செய்யக் கோரிக்கை விடுக்கும். 

 

சென்னை உயர் நீதிமன்றம் வழக்கிற்குத் தடை விதித்தாலும், ரத்து செய்தாலும் கடந்தகால அரசு அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆனால், அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டதன் மூலம், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்ட வழக்குகள், அதுதொடர்பாக கடந்த அரசு மேல்முறையீடு செய்ய இருந்த வழக்குகள் என  அனைத்து வழக்குகளுக்குமே இந்த உத்தரவு பொருந்துவதால் அவை அனைத்தும் ரத்தாகும்" என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்