Skip to main content

ஊடகங்கள் மீதான வழக்குகள் ரத்து: "எந்தெந்த வழக்குகளுக்கு பொருந்தும்..?" - அரசு குற்றவியல் வழக்கறிஞர் விளக்கம்

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

which cases on media houses will be dismissed under tn govt order

 

திமுக ஆட்சிக்கு வந்தால் பத்திரிகைகள், ஊடகங்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியின்போது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படும் என ஏற்கனவே திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் மீது கடந்த அதிமுக அரசால் போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து, அதற்கான உத்தரவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (29.07.2021) பிறப்பித்திருந்தார். 

 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், "2012 முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை, அவதூறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. அவற்றுள்‌ தி இந்து நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 4 வழக்குகளும்‌, டைம்ஸ்‌ ஆஃப்‌ இந்தியா நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 5 வழக்குகளும்‌, எக்கனாமிக்‌ டைம்ஸ்‌ நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 1 வழக்கும்‌, தினமலர்‌ நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 12 வழக்குகளும்‌, ஆனந்த விகடன்‌ வார இதழின்‌ ஆசிரியர்‌ மீது 9 வழக்குகளும்‌, ஜுனியர்‌ விகடன்‌ இதழின்‌ ஆசிரியர்‌ மீது 11 வழக்குகளும்‌, நக்கீரன்‌ இதழின்‌ ஆசிரியர்‌ மீது 23 வழக்குகளும்‌ முரசொலி நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 17 வழக்குகளும்‌ தினகரன்‌ நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 4 வழக்குகளும்‌ போடப்பட்டிருந்தன. மேலும்‌, புதிய தலைமுறை தொலைக்காட்சி, நியூஸ்‌ 7 தொலைக்காட்சி, சத்யம்‌ தொலைக்காட்சி, கேப்டன்‌ தொலைக்காட்‌சி, என்‌.டி. டி.வி தொலைக்காட்சி, டைம்ஸ்‌ நவ் தொலைக்காட்சி மற்றும்‌ கலைஞர்‌ தொலைக்காட்சி ஆகியவற்றின்‌ ஆசிரியர்கள்‌ மீது தலா ஒரு வழக்கு வீதம்‌ 7 அவதூறு வழக்குகள்‌ போடப்பட்டிருந்தன.

 

திராவிட முன்னேற்றக்‌ கழகத்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ “பத்திரிகையாளர்கள்‌ மீது பழிவாங்கும்‌ நோக்கத்தில்‌ போடப்பட்ட அவதூறு வழக்குகள்‌ அனைத்தும்‌ திரும்பப்‌ பெறப்படும்‌” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும்‌ வகையில்‌, பத்திரிகையாளர்கள்‌ மீது போடப்பட்ட 90 வழக்குகளைத்‌ திரும்பப்‌ பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று ஆணையிட்டுள்ளார்கள்‌'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

damodharan
                                                                                              வழக்கறிஞர் ஆ. தாமோதரன்

 

இந்நிலையில், திமுக அரசின் இந்த அறிவிப்பால் எந்தெந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆ. தாமோதரனிடம் கேட்டபோது,  "தமிழக அரசின் உத்தரவின் பேரில் தொடரப்படும் அவதூறு வழக்குகள் முதற்கட்டமாக, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்யப்படும். அந்த  வழக்குகள் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருக்கும்... 'அமர்வு  நீதிமன்றத்தில்  நிலுவையில் இருக்கும் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்று சில பத்திரிகைகள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி தடை கேட்கும் அல்லது வழக்கை ரத்து செய்யக் கோரிக்கை விடுக்கும். 

 

சென்னை உயர் நீதிமன்றம் வழக்கிற்குத் தடை விதித்தாலும், ரத்து செய்தாலும் கடந்தகால அரசு அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆனால், அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டதன் மூலம், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்ட வழக்குகள், அதுதொடர்பாக கடந்த அரசு மேல்முறையீடு செய்ய இருந்த வழக்குகள் என  அனைத்து வழக்குகளுக்குமே இந்த உத்தரவு பொருந்துவதால் அவை அனைத்தும் ரத்தாகும்" என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது