Skip to main content

ஆட்சி இருக்கையை எங்கு தவற விடுகிறது பா.ம.க.?

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

Where does the PMK miss the ruling seat?

 

ஒரு அரசு நிகழ்ச்சி, ஒரு அரசியல் நிகழ்ச்சி. சில மணிநேர இடைவெளியில் நடந்த இந்த இரண்டும், இருவேறு விதமான கருத்துகளையும், இரு தலைவர்களின் வெவ்வேறு இலக்குகளையும் நமக்கு புலப்படுத்திக் காட்டுகிறது.

 

கோவையில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு மட்டுமல்ல, ஓட்டுப் போடாத மக்களுக்கும் சேர்ந்து பணியாற்றுவதுதான் என் லட்சியம்; என் அரசு கடைசிவரை இதை கடைப்பிடிக்கும்” என்று பேசினார்.

 

திண்டிவனத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் திண்டிவனம், செஞ்சி, மயிலம், வானுார் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், “செஞ்சி நமது கோட்டை.. ஆனால் கோட்டைவிட்டு உட்கார்ந்திருக்கிறோம். தேர்தலில் போட்டியிடக் கூட ஆள் இல்லை என்கிறீர்கள். வேட்பாளர்கள் இருந்தாலும், அவர்களுக்கு வேலை செய்யாமல் எதிர்க் கட்சிக்கு வேலை செய்கிறீர்கள். வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்யுங்கள். சமூகவலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளுங்கள்” என்று பேசினார். அதிலும், சில இடங்களில் கடும் காட்டமாகவும் பேசியிருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் சொற்களின் உச்சரிப்பும், குரல் அழுத்தமும், கட்சிதான் அனைத்தும் என காத்திருக்கும் தொண்டர்களுக்கு மனதின் ஓரத்தில் ஒரு நெருடலை உருவாக்கலாம். அந்த வகையில்தான் அப்பேச்சு அமைந்திருந்தது.

 

அதேபோல், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “துரோகிகள் கட்சியை விட்டு வெளியேறிவிடுங்கள். மானம், சூடு, சொரணை உள்ள வன்னியன் மாறி ஓட்டுப் போடுவானா? என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் போய் அன்புமணி ராமதாஸ் உட்கார வேண்டும்” என பேசினார்.

 

இப்படி மூன்று தசாப்தங்களாக அரசு அரியணையை எட்டிப்பிடிக்க முயன்றுவரும் பாமகவை, அதன் இலக்கை அடையவிடாமல் தடுப்பது என்ன..? பாமக கவனிக்க தவறியதும், கவனிக்க மறுப்பதும் என்ன..? "கட்சியில் வேட்பாளர்கள் கூட இல்லையா" என நிர்வாகிகளிடம் தலைவர் காட்டமாக கேட்குமளவுக்கு அக்கட்சியை கொண்டு சென்றது எது..? 

 

பாமகவின் மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனங்களில் ஒன்று அது ஒரு சமூகத்திற்கான கட்சி என்பது. ஆனால், அதே கட்சிதான் ஏழுமலை எனும் தலித்தை கட்சியின் பொதுச் செயலாளராகவும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் ஆக்கியது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் சிலைகளை நிறுவியதற்கு காரணமாக இருந்தார். இப்படி தங்கள் மீதான சாதிய ரீதியிலான பிம்பங்களை உடைத்தெறிய அக்கட்சி தொடர்ந்து முனைந்து கொண்டேதான் இருந்திருக்கிறது. ஆனாலும், பொது ஜனத்திற்கான கட்சி என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள பாமக எடுத்த முயற்சிகளையும் கடந்து, அது சமூகத்தின் ஒரு சாராருக்கான கட்சிதானோ என்ற சந்தேகத்தை அவ்வப்போது நிகழும் சில அழுத்தமான சம்பவங்கள் மக்களுக்கு எழுப்பிக்கொண்டேதான் இருந்து வந்திருக்கிறது எனலாம்.  

 

பெரியாரின் இயக்க அரசியலிலிருந்து, வாக்கு அரசியலுக்கு அண்ணா தனது பாதையை மாற்றியபோது ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று முழங்கினார். தி.க.விற்கும், தி.மு.க.விற்குமான ஒரு பெரும் வித்தியாசம் அது. ஒரு தலைமையின் கீழ் நாங்கள் இயங்குகிறோம், இந்தத் தலைமை எங்களை வழிநடத்தட்டுமென மக்களும், அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் முடிவு எடுக்கும்போது, அந்த இயக்கமும், அதனை வழிநடத்தும் தலைமையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூகத்திற்காகவும் இயங்க வேண்டும் என்பது அவசியமாகிறது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று அது செயல்படுதல் வேண்டும்.

 

வாக்கு அரசியலுக்கு வந்த திமுகவும், அதிமுகவும் அதனைத் தான் செய்தன. அதுவே ஆளும் இருக்கைக்கான பாதையை அக்கட்சிகளுக்கு அமைத்துக்கொடுத்தது. ஒரு விஷயமோ, ஒரு கூட்டமோ இறுதிவரையில் மாறாமல், அது நமக்கானதாகவே இருக்கும் எனக் கருதி செயலாற்றுவது என்பது மாற்றத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாத மனநிலையையே வெளிப்படுத்துவதாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

 

கட்சியைத் துவக்கி 30 ஆண்டுகள் கடந்து தொடர்ந்து செயலாற்றி வரும் எந்த ஒரு தலைவருக்கும் இருக்கும் அடிப்படையான ஆதங்கம்தான் தலைமை இடத்திற்கு வர முடியவில்லையே என்பது. ஆனால், ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டுமே குறிவைத்து நகர்ந்து செல்லும்போது அது மற்ற சாரார் மனதில் ஒருவித பாதுகாப்பின்மையை உருவாக்கும். இங்குதான் அண்ணா தனது கட்சிக்காரர்களை தம்பிகளாக்கி, தம்பிகளுக்கு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ரகசியத்தை கற்றுக்கொடுத்து ஆட்சி அதிகாரத்தை திமுக வசமாக்குகிறார். அதன் நீட்சியையே இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வெளிப்படுத்துகிறார் எனலாம்.

 

குறிப்பாக ராமதாஸ், “தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி நாம் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால், தேர்தலில் போட்டியிட ஆள் இல்லை என கட்சியினர் சொல்கின்றனர்” என்று சொல்லி வேதனைப்படுகிறார். ஆனால், மாற்றம் வேண்டி பல இளைஞர்கள் காத்துக்கொண்டிருக்கும்போது, அவர்கள் ஏன் பாமகவின் பக்கம் வர மறுக்கிறார்கள், அவர்களை எப்படி தங்கள் பக்கம் ஈர்ப்பது என பாமக சிந்தித்து பார்க்க வேண்டியது அவர்களுக்கு காலத்தின் கட்டாயமாகியுள்ளது. 

 

பாமக துவங்கிய காலத்தில் பெரும் மக்கள் திரளை அந்தக் கட்சியின் பக்கம் ஈர்த்தது, அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் போராட்டமும், கள அரசியலும்தான். ஆனால், இன்று அன்புமணியின் கள போராட்டமும், அரசியலும் கேள்விக்குள்ளாக்கும் தருணத்தில் இருக்கிறது. 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியிலிருந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின் நடந்த மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரின் மாநிலங்களவை செயல்பாடுகளும், வருகை பதிவும் அவரின் அரசியல் தீவிரத்தை பெரும் விமர்சனத்துக்குள்ளாக்கி வருகிறது.

 

நம் பள்ளியில், கல்லூரியில், பணியிடத்தில் நமது இருக்கையின் மறு இருக்கையில் இருப்பவன் சக மனிதன் என இந்தத் தலைமுறையின் பெரும் பங்கினர் மாறிவர. அதனை முழுதாக ஏற்காமல், ‘நாடகக் காதல்’, ‘மானம், சூடு, சொரணை உள்ள வன்னியன் மாறி ஓட்டுப் போடுவானா’ என்பன போன்ற சொல்லாடல்களை கட்சியின் மையமாக வைத்து நகர்த்த நினைப்பதும், 1987ல் நடந்த இட ஒதுக்கீடு போராட்டம், மதுவுக்கு எதிரான போராட்டம், 2020ம் ஆண்டு நடந்த இட ஒதுக்கீடு போராட்டமின்றி, மற்ற மக்கள் பிரச்சனைக்காக வீதிகளில் இறங்கி நின்று அது எந்த அளவிற்கு சென்றுள்ளது, அது எங்கு தடைப்பட்டுள்ளது என்பனவற்றை ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் சுயபரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய நேரம் இது எனலாம்.

 

 

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.