Skip to main content

3 கோடி வேலை எங்கே...? அதிர்ச்சி தரும் சர்வே தகவல்கள்

Published on 08/10/2018 | Edited on 08/10/2018

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் 2 கோடி வேலை வாய்ப்புகள் வருடந்தோறும் உருவாக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தது பா.ஜ.க. ஆனால், நடைமுறையில் அது நிறைவேற்றபடவில்லை என்பதை பல புள்ளிவிவரங்களும், சர்வே முடிவுகளும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. அதை உறுதிபடுத்தும் விதமாக சமீபத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்ட அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் சர்வே உள்ளது.   
 

unemp

 


இந்திய நாட்டின் பொருளாதாரம் அதிகரித்துவரும் அளவுக்கு, வேலைவாய்ப்பு அதிகரிக்கவில்லை. தற்போது உள்ள நிலையில் 92 சதவீத பெண்கள் மற்றும் ஆண்களில் 82 சதவீதம் பேர்  மாதத்திற்கு ரூ.10,000–க்கும் குறைவான வருமானம் பெற்று வருகின்றனர். இந்தியாவில் 67 சதவீத குடும்பங்கள் 10,000 ரூபாய்க்கும் குறைவான  வருமானமே பெறுகின்றனர். இது ஏழாவது மத்திய ஊதிய குழு பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஊதியமான ரூ. 18,000-ஐ விட குறைவானது என்பது போன்ற முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது சர்வே.  

 

1970–களில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் வரை இருந்தது. அந்தக் காலகட்டங்களில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் 2 சதவீதமாக இருந்தது. அதாவது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும்,  வேலைவாய்ப்பு வளர்ச்சியிலும் பிரதிபலித்தது. ஆனால் இன்று உள்நாட்டு உற்பத்தி 10% உயர்ந்த போதிலும், வேலைவாய்ப்பு வளர்ச்சி 1% மட்டுமே உயர்ந்துள்ளதாக சர்வே முடிவுகள் எடுத்துகாட்டுகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்குமான இடைவெளி அதிகரித்துவருகின்றன. 
 

 

இந்தியாவில் இன்று பூதாகரமாக மாறிவரும் மற்றொரு பிரச்சனை தகுதி குறைந்த வேலை மற்றும் குறைந்த ஊதியம். பெரும்பாலான மக்கள் தங்ளுடைய தகுதிக்கும் குறைவான வேலைகளை செய்துவருகின்றனர். மேலும் உழைப்புக்கான சரியான ஊதியமும் பல தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை என்பதையும் சர்வே முடிவுகள் வெளிபடுத்தியுள்ளன. 

 

un


 
உயர்கல்வி படித்த இளைஞர்களின் வேலையின்மை 16 சதவீதமாக உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்களின் வேலையின்மை 16.3% மற்றும் முதுகலை பட்டதாரிகளின் வேலையின்மை விகிதம் 14.2% ஆக உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது வட இந்திய மாநிலங்களில் வேலையின்மை விகிதம் கடுமையாக உள்ளது.

 

ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சி அறிக்கை (UNHDR) தற்போது நடத்திய சர்வே முடிவுகளின் படி, இந்தியாவில் 78 சதவீதம் பேர், அவர்களுக்குத் தகுந்த வேலையில் இல்லை. அதாவது 10–இல் 8 பேர் நல்ல வேலையில் இல்லை என்ற அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. இது உலகின் சராசரியான  43%-ஐ விட மிக அதிகம். இந்த சதவீதம் சீனாவில் 33% ஆக உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 17 மில்லியன் பேர் தொழில் அல்லது வேலைவாய்ப்பு நோக்கி நகர்கின்றனர். ஆனால், அதில் 5.5 மில்லியன் பேருக்கு மட்டுமே தொழில் அல்லது வேலைவாய்ப்பு அமைகிறது. 

 

டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி மற்றும் ஸ்டேன்ட் அப் இந்தியா போன்ற பல திட்டங்களை அறிவித்து நடைமுறைபடுத்தியது மத்திய அரசு. ஆனால், இந்த திட்டங்கள் மக்களின் வேலைவாய்ப்புக்கான தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதை சர்வே தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற நடைவடிக்கைகள் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. 

 

134 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் அனைத்து மக்களுக்கும் நல்ல வேலைவாய்ப்பு அளிப்பது கடினமான ஒன்றுதான். ஆனால் இன்றும் 3 கோடி மக்கள் வேலை தேடி கொண்டிருக்க காரணம் ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளின் தவறான கொள்கை முடிவுகள். 2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்த வேலைவாய்ப்பு பிரச்சனை பெரிய அளவு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 

 

Next Story

சசிகலா வாகனம் குறித்த கருத்து... அதிமுக எம்.பி, விளக்கம்..!

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

Comment on Sasikala vehicle ... AIADMK MP, explanation ..!

 

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், அதிமுக ஆட்சியின்போது நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் தண்டணை அனுபவித்தார். பின்னர் அங்கு கரோனா தொற்று ஏற்பட்டு விக்டோரியா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு வெளியே வந்த சசிகலா, சென்னைக்கு வருவதற்கு முன் பெங்களூரு தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் தங்கியுள்ளார்.

 

சசிகலா, மருத்துவமனையில் இருந்து அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் ரிசார்ட்டுக்குச் சென்றார். அப்போது அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சசிகலா அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் சென்றதற்கு அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிமுக வட்டாரத்திலும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல் சசிகலாவை வரவேற்றும் ஆதரித்தும் தென்மாவட்டத்தில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
 

Comment on Sasikala vehicle ... AIADMK MP, explanation ..!

 

இந்நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் குமரி அதிமுக முன்னாள் மா.செ.வுமான விஜயகுமார், தனது ட்விட்டர் பக்கத்தில் சசிகலா அதிமுக கொடி கட்டி சென்ற வாகனத்தைப் பதிவிட்டிருந்தார். இதற்கு பலர் லைக்கும் போட்டிருந்தனர். இதுவும் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயகுமாருக்கு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அதிமுக மா.செ பதவிகள் அப்போது சசிகலாவின் தயவில்தான் கிடைத்தது. அதனால்தான் அவர் அந்த வாகனத்தைப் பதிவிட்டதாக எதிரணியினர் குற்றம் சாட்டினார்கள்.

 

இதுகுறித்து விஜயகுமாரிடம் கேட்டபோது, “ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அந்த வாகனத்தைப் பயன்படுத்தினார். அவர் மறைவுக்குப் பிறகு இப்போது அதிமுக கொடியுடன் அந்த வாகனத்தைப் பார்க்க முடிந்ததால்தான், ட்விட்டரில் அதைப் பதிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

Next Story

"வேலையில்லா இளைஞர்களைக் காலிப் பணியிடங்களில் அமர்த்து!" - டி.ஒய்.எஃப்.ஐ போராட்டம்!

Published on 19/11/2020 | Edited on 20/11/2020

 

 

dyfi protest

 

ரயில்வே துறை, மின்சார வாரியம் என அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்குப் படித்தும் வேலை இல்லாமல் காத்திருப்போருக்கு, வேலை கொடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI)  சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைத்து, தமிழகம் முழுக்க இன்று (19-11-2020) மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஈரோட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டி.ஒய்.எஃப்.ஐ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கூறும்போது, மின் வாரியத்தில் 50,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளது. இதில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும்.

 

மின் வாரியத்தில் தேர்வு செய்த 10,000 கேங்மேன் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். அதேபோல், 2,500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உதவியாளர் (TA) பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மின் வாரியம் அறிவித்த 2,900 கள உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 1,300 கணக்கீட்டாளர் பணியிடத்தை, உடனே நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.