Skip to main content

"கொஞ்சம் அசந்தா திருக்குறளை கண்டுபிடித்ததே நாங்கதான் என்பார்கள்... இந்தியில் என்ன இருக்கு பெருமையா பேச..." - காந்தராஜ் பேட்டி

Published on 23/11/2022 | Edited on 24/11/2022

 

ரகத

 

உ.பி-யில் காசி தமிழ்ச் சங்கமம் என்ற நிகழ்ச்சி மிகப் பிரபலமாகப் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர், தமிழ் இந்தியாவில் நீண்டகாலம் பேசி வருகின்ற மொழி, அனைவரும் தமிழைக் கற்க முயல வேண்டும், எதிர்காலத்தில் தமிழை வளர்க்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். திருக்குறளை 13 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்துள்ளோம் என்று தெரிவித்திருந்தார். பிரதமரின் இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில் இதுதொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,

 

தமிழுக்காகப் பிரதமர் தன்னால் ஆன அனைத்தையும் செய்து வருகிறார். உலகம் முழுவதும் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழி குறித்து வியந்து பேசி வருகிறார். திருக்குறளை 13 மொழிகளில் மோடி அரசு மொழிபெயர்ப்பு செய்துள்ளது, ஆனால் அதை எதைப்பற்றியும் நீங்கள் பேச விரும்பவில்லை. எங்களைக் குறை கூறுவதையே தொடர்ந்து செய்து வருகிறீர்கள் என்று பாஜகவினர் கூறுகிறார்களே? 

 

இந்தத் தமிழை இவ்வளவு காலம் வெளியே வர விடாமல் செய்தது யார், இந்த ஆர்எஸ்எஸ் இயக்கம் தானே? அவுங்க செய்த பாவத்தை அவுங்களே தீர்க்கிறார்கள். திருக்குறளை 13 மொழிகளில் இவர்தான் மொழிபெயர்த்தாரா? கால்டுவெல் அந்த காலத்திலேயே மொழிபெயர்த்துவிட்டுப் போய்விட்டார். பைபிளுக்குப் பிறகு உலக அளவில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். நீங்க இப்போ வந்து புதுசா கதை விட்டுட்டு இருக்கீங்க. தமிழை வளர்த்தோம், பாடுபட்டோம் என்கிறார்களே தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டியதுதானே? மக்களை ஏமாற்ற வேண்டும் அதற்கு எதையாவது உருட்ட வேண்டும். இது பாஜக இன்று நேற்றல்ல காலங்காலமாகத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

 

ஆனால் இது அனைத்தையும் மற்ற மாநிலங்களில் இதுவரை செய்தார்கள். தற்போது தமிழகத்திலும் செய்யலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்துள்ளது. அதற்கான முயற்சிகளை பல்வேறு வழிகளில் முயன்று பார்க்கிறார்கள். அதில் ஒன்றுதான் தற்போது தமிழைப் பிடித்துக்கொண்டு பாஜக தலைவர்கள்  தொங்கி வருகிறார்கள். ஆனால் இவர்கள் வேஷம் நீண்ட நாளைக்கு எடுபடாது. உலகத்தின் பல்வேறு நாடுகளில் திருக்குறள் அந்த மொழிகளில் வெளியாகியுள்ளது. சீனாவில் திருக்குறள் இருக்கிறது, கொரியா நாடாளுமன்றத்தில் திருக்குறள் பதிக்கப்பட்டுள்ளது.

 

வெளிநாடுகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுப் பல நாடுகளில் புழக்கத்தில் உள்ளது. என்னமோ இவர்கள் இப்போது வந்து நான் மொழிபெயர்க்கிறேன், இதை பெயர்க்கிறேன் என்று கம்பு சுற்றுகிறார்கள். இவர்கள் என்னவோ திருக்குறளைக் கண்டுபிடித்தது போல் பேசி வருகிறார்கள். நாம் கொஞ்சம் அசந்து போனால் நாங்கள்தான் திருக்குறளையே கண்டுபிடித்தோம் என்று கூட கூறிவிடுவார்கள். ஆகையால் இவர்களிடம் நாம் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

 

ஏற்கனவே திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து அரசியல் செய்யப் பார்த்தவர்கள் தான் இவர்கள். எனவே இவர்கள் எதையும் செய்ய முயல்வார்கள். இவர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. ஏனென்றால் இவர்களின் வரலாறு அப்படி. ஹூப்ரு மொழியில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கதை சொன்னாலும் பாஜக பொருந்தச் சொல்ல வேண்டும். தமிழை விட்டால் அவர்கள் பேசுவதற்கு வேறு மொழியே கிடையாதே, இந்தியில் பேசுவதற்கு அவர்களிடம் என்ன இருக்கிறது. தமிழ் படிச்சா வேலை கொடுப்போமென்று சொல்லு, அதைவிட்டுட்டு எம் புருஷனும் கச்சேரிக்கு போறான்னு நீங்களே தனியா நிகழ்ச்சி நடத்தி சும்மா கதை விடக்கூடாது" என்றார்.

 

 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.