Skip to main content

Explainer : என்ன நடக்கிறது லட்சத்தீவில்..? பாஜகவின் அரசியலும், மக்களின் எழுச்சியும்!!

Published on 27/05/2021 | Edited on 27/05/2021

 

whats happening in lakshdweep

 

அரபிக் கடலின் மத்தியில் சிதறிக்கிடக்கும் குட்டி தீவுக்கூட்டம்தான் லட்சத்தீவு (லக்‌ஷத்வீப் என்றால் மலையாளத்தில் லட்சக்கணக்கான தீவுகள் என்று அர்த்தம்). மொத்தம் 36 தீவுகளைக் கொண்ட இந்த லட்சத்தீவில் தற்போது 35 தீவுகள்தான் உள்ளன. ஒரு குட்டி தீவான பாராலி, சில காலங்களுக்கு முன்னர் கடல் அரிப்பின் காரணமாகக் கடலுக்குள் மூழ்கிவிட்டது. கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த குட்டி தீவுக்கூட்டத்தில் மனித குடியேற்றம் நடைபெற்றது குறித்து பல கதைகளும் வரலாறுகளும் ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது. ஆனால், ரோம சாம்ராஜ்யத்துடன் அப்போதைய தென்னிந்திய மன்னர்கள் வணிகம் செய்வதற்கு இந்த தீவு பெரும் பங்காற்றியுள்ளது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. 

 

இந்தியாவின் மிகச் சிறிய நிலப்பரப்பு கொண்ட யூனியன் பிரதேசமாக இருக்கும் லட்சத்தீவுக்கு என்று இயற்கையாகவும் அத்தீவுகளில் வாழும் மக்களாலும் பல தனிச் சிறப்புகள் இருக்கின்றன. இந்த தீவுக்கூட்டத்தில் பத்து தீவுகளில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்தியுள்ளனர். 65,000 பேரை மக்கள் தொகையாகக் கொண்ட இந்த தீவுக்கூட்டத்தில் 98 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள், அதிலும் பெரும்பாலானோர் பேசுகின்ற மொழி மலையாளமாக இருக்கிறது. தொடக்கக் காலங்களிலிருந்தே லட்சத்தீவுக்கும் கேரளாவுக்கும் இடையேயான உறவென்பது வலுவானதாகவே கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. மலையாள மொழி மட்டுமின்றி ஆங்கிலமும் அதிகளவில் பேசப்படுகிறது. அதனுடன் திவேகி, ஜெசெரி உள்ளிட்ட வட்டார மொழிகளும் பேசப்படுகிறது. பெரும்பாலான மக்கள் மீன்பிடி தொழிலையும் மீன் பதப்படுத்தும் தொழிலையும், சுற்றுலாவையும் நம்பிதான் இங்கு இருக்கின்றனர். இயற்கை எழில்கொஞ்சும் இந்த ஒன்றியத்தில் குற்றச்செயல்கள் என்பவை பெரும்பாலும் காணக்கிடைக்காதவையே. 

 

நமது பள்ளிக்காலங்களில், இந்திய வரைப்படத்தில் அரபிக்கடலின் மத்தியில் சிறு சிறு புள்ளிகளாக நாம் பார்த்துப் பழகிய இந்த லட்சத்தீவு, கடலின் இயற்கை சமநிலையைக் காக்கும் எண்ணற்ற பவளத் தீவுகளையும் கொண்டிருக்கிறது. தீவின் தனிச்சிறப்புகளான இப்படிப்பட்ட இயற்கை வளங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, இங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் உண்டு. அது வெளிநாட்டவராக இருந்தாலும் சரி, உள்நாட்டவராக இருந்தாலும் சரி. இங்கு செல்வதற்கே அரசாங்கத்திடம் அனுமதி பெற்ற பின்புதான் சுற்றுலா செல்ல முடியும். அப்படி பொக்கிஷம் போலப் பாதுகாக்கப்பட்ட லட்சத்தீவை, அண்மைக்காலமாக வளர்ச்சி என்கிற பெயரில் மத்திய அரசு சீரழிக்கப் பார்ப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள். 

 

யூனியன் பிரதேசமான லட்சத்தீவு பகுதி, மத்திய அரசால் நியமிக்கப்படும் நிர்வாக அதிகாரியினால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த நிர்வாக அதிகாரி பொறுப்புக்கு வழக்கமாக ஐஏஎஸ்/ஐபிஎஸ் அதிகாரிகள் தான் நியமிக்கப்படுவர். ஆனால், இம்முறை ஓர் அரசியல்வாதி இப்பகுதியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதே இந்த பிரச்சனையின் தொடக்கப்புள்ளி. லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக இருந்த ஐபிஎஸ் தினேஷ்வர் சர்மா திடீரென உயிரிழக்க, அவருக்குப் பதிலாக பிரஃபுல் கோடா படேல் என்பவரை இப்பொறுப்பில் நியமித்தது மத்திய அரசு. 2010ஆம் ஆண்டு குஜராத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி இருக்கும்போது அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தவர் பிரஃபுல் கோடா படேல். இவர்தான் தற்போது லட்சத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சனைகளுக்கு மூலகாரணமாகப் பார்க்கப்படுபவர்.  

 

whats happening in lakshdweep

 

மத்திய அரசு பிரஃபுல் படேலுக்கு லட்சத்தீவின் நிர்வாக அதிகாரி பொறுப்பினை வழங்குகிறது. பதவிக்கு வந்தவுடனேயே கோவிட் தடுப்புக்கு வைத்திருந்த விதிமுறைகளில் கைவைத்தார் அவர். அதாவது கடந்த வருடம் இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்க, லட்சத்தீவில் முதல் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதே இவர் பதவியேற்ற  2020 டிசம்பருக்கு பின்புதான். அதுவரை லட்சத்தீவுக்குள் செல்ல 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்ட பின் ஆர்டி பிசிஆர் சோதனை எடுத்து, அதில் நெகட்டிவ் வர வேண்டும். ஆனால், இவர் பதவிக்கு வந்த பின் லட்சத்தீவுக்குள் நுழைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரேயொரு ஆர்டி பிசிஆர் சோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழ் பெற்றால் போதுமானது என விதிமுறையை தளர்வுப்படுத்தினார். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் டிசம்பரில் இந்த விதிமுறைகளை தளர்வுப்படுத்த, ஜனவரி முதல் லட்சத்தீவில் கரோனா தோற்று அதிகரிக்கத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து மே 24க்குள் கிட்டத்தட்ட 6000க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றுகள் அங்கு ஏற்பட்டுள்ளன. 

 

இந்த ஒரு நிர்வாகத் திறனற்ற செயல் மட்டுமே, "அவர் பதவி விலக வேண்டும், லட்சத்தீவை காப்பாற்ற வேண்டும்" என்று மக்களை கோஷமெழுப்ப வைக்கவில்லை. அவர் லட்சத்தீவை மேம்படுத்தப் போகிறோம் என்று அந்த மக்களுக்குக் கொடுத்த அடுத்தடுத்த ஷாக்கள் தான் இவற்றிற்கான காரணம். மேம்படுத்துதல் என்றால் மக்கள் ஏன் தடுக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டாம். பிரஃபுல் கொண்டுவந்துள்ள லட்சத்தீவு மேம்பாட்டு வரைவுத் திட்டத்தில் மக்களின் வாழ்வை அசைத்துப்பார்க்கும் வகையிலான பல திட்டங்களுள்ளன; அரசுக்குத் தேவை என்றால் யார் வைத்திருக்கும் நிலங்களையும் கையப்படுத்தலாம் என்பது உட்பட. கிட்டத்தட்ட அங்கிருக்கும் நிலங்கள் அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்குச் சொந்தமானது. இதுமட்டுமல்லாமல் அங்கிருக்கும் அலுவலகங்களில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களைப் பலரை திடீரென வேலையைவிட்டுத் தூக்கிவிட்டு, குஜராத்தைச் சேர்ந்த பலருக்குப் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. கேரளாவுக்கும் இந்த தீவுக்கும் நிறையத் தொடர்பு உண்டு என்று மேலே சொல்லியிருந்தோம், அந்த தொடர்புகளுள் ஒன்று ஃபீப்; அதையும் தடை செய்ய பிரஃபுல் படேல் நடவடிக்கை எடுத்திருக்கிறார். 

 

பள்ளி, அங்கன்வாடிகளில் கொடுக்கப்பட்ட அசைவ உணவு நிறுத்தப்பட்டுள்ளது. மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களின்  படகுகள், வலைகள், படகுகளைப் பராமரிக்கத் தேவைப்படும் பொருட்கள் போன்றவற்றைக் கடல் பாதுகாப்புப் படையினர் சூறையாடியுள்ளனர். சுற்றுலா செல்வதற்கே அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இருந்த லட்சத்தீவை சுற்றுலா தளமாக மாற்றத் திட்டமிட்டு, அதற்காக மது பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு லட்சத்தீவில் மதுவுக்கு அனுமதி இல்லை. அதேபோல, குற்றம் ரேட் மிகவும் சொற்பமாக இருக்கும் இந்த யூனியன் பிரதேசத்தில் குண்டர் சட்டத்தை அறிமுகப்படுத்தி சிஏஏ-வுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் குரல் கொடுப்பவர்களை அடக்கத் திட்டமிட்டு வருகிறார்கள். கேரள பெய்பூர் துறைமுகத்துடன் வணிக தொடர்பு வைத்திருந்த லட்சத்தீவை தற்போது மடைமாற்றி பாஜக ஆளும் கர்நாடகாவின் மங்களூருக்கு திருப்பிவிட்டுள்ளது இந்த புதிய நிர்வாகம். அதேபோல, இரண்டு குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் யாரும் இந்த தீவில் நடைபெறும் கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

 

இதுபோன்ற ஒவ்வொரு காரணமும் லட்சத்தீவின் இயற்கையில் தொடங்கி பண்பாடு, கலாச்சாரம் வரையில் அனைத்தையும் அழிக்க அஸ்திவாரமாக போடப்பட்டுள்ளது. "மத்திய அரசு ஒவ்வொரு சமூகத்தையும் இனத்தையும் சரிக்குச் சமமாக நடத்துகிறோம் என்கிறது. அதே அரசுதான் இதுபோன்று செயல்பாடுகளால் மக்களை வஞ்சிக்கிறது" எனக்கூறும் இப்பகுதி மக்களுக்கு, தற்போது அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இப்படி, இவர்கள் ஒவ்வொருவரின் ஆதரவும், தங்கள் கலாச்சாரத்தையும், இயற்கையையும் காப்பதற்கான அம்மக்களின் அரசியல் போராட்டத்திற்கு தினந்தினம் உயிரூட்டிக்கொண்டிருக்கிறது. 

 

 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.