Skip to main content

அதிமுகவுக்கு சவப்பெட்டி செய்து ஆணி அடித்த எடப்பாடி பழனிசாமி, பொன்விழா கொண்டாட என்ன இருக்கிறது..!! - அரசியல் விமர்சகர் காந்தராஜ்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

கதர

 

 

அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டங்கள் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். அதில் சந்தேகத்திற்கே இடமில்லை, அம்மா ஆட்சி விரைவில் அமையும்" என்று கூறியிருந்தார். அதே நேரத்தில் சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் நான்தான் என்ற பொருள்படும்படி கல்வெட்டைத் திறப்பது, அதிமுக கொடியைப் பயன்படுத்துவது என தனி ரூட்டில் சென்றுகொண்டிருக்கிறார். அதிமுகவில் நடப்பது என்ன, அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பன போன்ற கேள்விகளை மருத்துவரும், அரசியல் விமர்சகருமான காந்தராஜ் அவர்களிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

அதிமுகவின் பொன்விழா ஆண்டு கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொண்டாடப்பட்டது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? அதிமுகவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறீர்களா? 

 

ஓ.. எனக் கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது. எம்ஜிஆர் இந்த இயக்கத்தை எப்படி உருவாக்கினார். மக்கள் செல்வாக்கில் அதிமுகவை முதலிடத்திற்கு கொண்டு சென்றார். மக்கள் கூட்டம் என்று கூட சொல்லக் கூடாது. மக்கள் வெள்ளத்தை அதிமுகவுக்கு கொண்டு வந்தார். ஆனால் இந்த இயக்கம் தற்போது எப்படி இருக்கிறது. ஜெயலலிதா அதிமுகவை பாதி அழித்தார், எடப்பாடி பழனிசாமி சவப்பெட்டி வாங்கி தற்போது ஆணி அடித்துள்ளார். பொன்விழாவில் என்ன இருந்தது, ஒன்றுமில்லை. பொன் மட்டும்தான் அவர்களிடம் இருக்கிறது, விழாவைக் காணோம். 

 

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் அதிமுகவுக்கு எதிர்காலம் இனி இல்லை என்று தெரிவித்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

அவர் உண்மையைத்தான் கூறியிருக்கிறார். இனி எப்படி அதிமுகவுக்கு எதிர்காலம் இருக்கப்போகிறது. அதற்கான வாய்ப்புகள் கண்ணுக்குத் தெரிந்தவரை ஏதாவது இருக்கிறதா என்றால், அப்படி எதுவும் இல்லை. தமிழகத்தில் நடைபெறுகின்ற எந்தப் பிரச்சனைகளுக்காவது எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளாரா? நீங்கள் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் நேராக அண்ணாமலையிடம்தானே செல்கிறீர்கள். அண்ணாமலை நீண்டகாலமாக அரசியலில் இருக்கிறாரா என்ன? இப்போதுதானே 4 பேர் அந்தக் கட்சியிலிருந்து சட்டமன்றத்திற்குச் சென்றுள்ளார்கள்.  செந்தில் பாலாஜி மீது எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிதானே கூற வேண்டும், வழக்கு தொடுக்க வேண்டும். ஆனால் அண்ணாமலைதானே அனைத்திற்கும் பதில் சொல்கிறார், கருத்து தெரிவிக்கிறார். நிலைமை அப்படியிருந்தால் அதிமுகவுக்கு எங்கே எதிர்காலம் இருக்கப் போகிறது என்பதே என்னைப் போன்றோரின் கேள்வியாக இருக்கிறது. 

 

அதிமுகவை இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒழித்துக்கட்டிவிட்டார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்து நீண்டநாட்களாக பாஜக சாயலில் அனைவரும் செயல்பட்டு வருகிறார்கள். அதிமுகவின் எம்.பி. ரவீந்திரநாத் லெட்டர் பேடில் யார் படம் இருக்கிறது, எம்ஜிஆர், ஜெயலலிதா படமா இருக்கிறது, மோடி படம் இருக்கிறது, இவர்கள்தான் அதிமுகவை வாழவைப்பவர்களா? அதிமுகவுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இல்லாத அதிமுகவுக்கு என்ன பொன்விழா வேண்டி கிடக்கிறது. நான்கு மாதத்திற்கு முன்புவரை இவர்கள் ஆளுங்கட்சியாக இருந்தவர்கள். உள்ளாட்சித் தேர்தலில் என்ன வெற்றி பெற்றார்கள், மிக கேவலமான தோல்வியைப் பெற்றுள்ளார்கள். 60 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறுகிறீர்கள், அந்த எம்எல்ஏக்கள் பின்னணியில் தற்போது மக்கள் இருக்கிறார்களா? வென்ற அனைத்து எம்எல்ஏக்களும் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இருந்து வெற்றிபெற்றார்களா? கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் என்று குறிப்பிட்ட பகுதியில் வென்றவர்கள்தானே இவர்கள் அனைவரும். பிறகு எப்படி அதிமுகவுக்கு இன்றளவும் செல்வாக்கு இருப்பதாக நம்புவது? 

 

எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு எப்போதோ சவப்பெட்டி செய்து ஆணி அடித்துவிட்டார். இந்த ஜெயக்குமார் போன்றவர்கள் பார்த்துப் பேச வேண்டும். தங்களுக்கென்று கொள்கை இருக்கு, நாங்கள் என்ன குழந்தைகளா என்று கேள்வி கேட்பது அமித்ஷாவுக்கு தெரிந்தால் ஜெயக்குமார் அவ்வளவுதான். திமுக ரெய்டை கூட சமாளித்துவிடலாம், ஆனால் இவர்கள் கையில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என பல அயிட்டங்களை வைத்துள்ளார்கள், எனவே ஜெயக்குமார் கட்சிக்கு விரோதமாக, பாஜகவுக்கு எதிராக பேசக்கூடாது, அவர் நல்லதுக்காக! சசிகலா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட யாரும் அதிமுக தலைவர்கள் இல்லை. இவர்கள் அனைவருக்கும் தலைவர் அமித்ஷா, அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி இங்கு நடப்பார்கள். முதலில் பன்னீர்செல்வத்தை பயன்படுத்திப் பார்த்தார்கள், பிறகு எடப்பாடி பழனிசாமியை பயன்படுத்தினார்கள். ஆனாலும் ஒன்றும் தேறவில்லை என்பதால் தற்போது சசிகலாவை பயன்படுத்தி பாஜகவுக்கு லாபம் கிடைக்குமா என்று கணக்கு போடுகிறார்கள். என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.