Skip to main content

சட்டமன்றத்தில் எதைத்தான் பேசுவது???

Published on 25/06/2018 | Edited on 25/06/2018

தமிழக சட்டப்பேரவையில் 1994 ஆம் ஆண்டுவாக்கில் அன்றைக்கு ஆளுநராக இருந்த சென்னாரெட்டி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் ஜெயலலிதா அபாண்டமாக பேசினார். அதுகுறித்து விவாதம் நடத்தி பின்னர் ஆளுநருக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

 

stalin protest



அதே சட்டப்பேரவையில் அதே ஆளும் அதிமுக அரசாங்கத்தின் உரிமையில் தலையிடும் ஆளுநரை கண்டிக்க முதல்வருக்கோ, ஆளுநருக்கோ திராணியில்லை. ஆளுநர் சட்டப்படிதான் சோதனைகளில் ஈடுபடுகிறார் என்று முதல்வரும் அமைச்சர்களும் வரவேற்கிறார்கள். ஆட்சியைத் தக்கவைக்க எந்த லெவலுக்கும் இறங்கிச் செல்லும் அடிமைகளாக அவர்கள் மாறிவிட்டார்கள்.

ஆனால், ஆளுநரின் அத்துமீறலை மாநிலத்தின் அனைத்துக் கட்சிகளும் கடுமையாக கண்டித்துள்ளன. ஆனால், மாநிலசுயாட்சியை உயிராகக் கொண்டுள்ள திமுக ஆளுநரின் ஆய்வுகளை எதிர்த்து அவர் போகும் மாவட்டங்கள் அனைத்திலும் கருப்புக்கொடி போராட்டங்களை நடத்துகிறது.

 

 

இந்தப் போராட்டங்களை இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த ஆளுநர், திடீரென்று திமுகவுக்கு எதிராக பாய்ந்துள்ளார். அதன்விளைவாக நாமக்கல் மாவட்டத்தில் கருப்புக்கொடி காட்டிய திமுகவினரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைக் கண்டித்து ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

 

இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் ஆளுநர் ஒரு அறிக்கையை வெளியிடச் செய்துள்ளார். அதில் ஆளுநரின் பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் வழக்கு பதிவுசெய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

banwarilal


 

இதை திமுக செயல்தலைவர் வெற்று மிரட்டல் என்றும், மாநிலசுயாட்சியை பாதுகாக்க ஆயுள் முழுவதும்கூட சிறையில் இருக்கத் தயார் என்றும் கூறி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆளுநரின் இந்தப் போக்கு குறித்து பேரவையில் பேச அனுமதி கேட்டபோது அவை விதிகளை மேற்கோள் காட்டி, ஸ்டாலினுக்கு பேசுவதற்கு பேரவைத்தலைவர் அனுமதி மறுத்தார்.

 

 

 

அப்போது, ஜெயலலிதா ஆளுநர் சென்னாரெட்டி குறித்து அபாண்டமாக பேசியதையெல்லாம் முன் உதாரணமாக எடுத்துக்கூறினார் ஸ்டாலின். அது அந்தக் காலம் இப்போது அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டார் பேரவைத்தலைவர் தனபால்.

 

இந்த ஆட்சியில் அவர்களுக்குப் பிடிக்காத எதையும் பேரவையில் பேசுவதற்கு அனுமதி மறுப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடியைப் பற்றி பேசலாம். ஆனால் துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தையை பயன்படுத்தினால் அந்த வார்த்தை நீக்கப்படும் என்கிறார். குட்கா வழக்குப் பற்றிப் பேசக்கூடாது என்கிறார். எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்கக்கூடாது என்கிறார். இப்படியாக எதிர்க்கட்சியினர் எதையெல்லாம் பேசணும், எதை பேசக்கூடாது என்று முடிவெடுக்கிறவராக பேரவைத்தலைவர் செயல்படுகிறார். இதெல்லாம் எங்கே கொண்டுபோய் முடியுமோ என்று கவலை தெரிவிக்கிறார்கள் நடுநிலையாளர்கள்.


 

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.