Skip to main content

என்ன செய்யப் போகிறது பாமக?

Published on 28/01/2021 | Edited on 29/01/2021

 

What is pmk going to do in upcoming election

 

'தேர்தல் திருவிழா 2021' மிக விரைவில் கொடியேற்றிக் கொண்டாடப்பட இருக்கிறது.

 

அதற்குள், அனல் பறக்கும் அதிரடி பேச்சுகள், கனல் தெறிக்கும் கட்சிக் கூட்டங்கள் என அரசியல் ஃபீவர் அனைவரையும் தொற்றிக்கொண்டுள்ளது. 'கூட்டணிக் கணக்குகள்?', 'மூன்றாவது அணி?' எனத் தேர்தலுக்குத் தேர்தல் பேசப்படும் அத்தனை ஹேஷ்யங்களும் இப்போதும் இடம்பெறுகின்றன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் கட்சித் தாவல் நடந்துவருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் முக்கியக் கட்சிகளுள் ஒன்றான பாமகவின் நிலைப்பாடு இந்தத் தேர்தலில் என்னவாக இருக்கும் எனப் பலரும் நகம் கடித்துக் கொண்டு காத்திருக்கின்றனர்.

 

கடந்த 2016 தேர்தலில் 'மாற்றம்! முன்னேற்றம்! அன்புமணி!' எனும் டேக் லைனுடன் களம் கண்டது பாமக. எதிர்பார்த்த 'முதல் கையெழுத்து' போடமுடியாவிட்டாலும் முக்கியக் கட்சி என்னும் அடையாளத்தை 5.3% வாக்குகள் பெற்று தக்கவைத்துக் கொண்டது. இதனால், தேர்தலுக்குத் தேர்தல் பாமக பற்றிய எதிர்பார்ப்புகள் எகிறிக்கொண்டே உள்ளது. 2019, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து ஆளுநரிடம் 'ஊழல் புகார்' வாசித்தது பாமக.

 

What is pmk going to do in upcoming election

 

'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததும் அதே பா.ம.க.தான். இதையொட்டி, தைலாபுரத்திற்கு அதிமுக தலைவர்கள் படையெடுத்துச் சென்றனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று இரண்டு கட்சித் தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களிடம் அறிவித்தனர். இருப்பினும் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றும், பாமகவின் கோட்டை என்று சொல்லப்பட்ட தர்மபுரியில், அன்புமணியே தோல்வியைத் தழுவினார்.

 

கடந்த தேர்தல்களில் சரிவைச் சந்தித்துள்ள பாமக வருகிற சட்டமன்றத் தேர்தலில் தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. போன தேர்தலில் 'மாற்றம் முன்னேற்றம்' என்றால், இந்தத் தேர்தலில் 'உள் இட ஒதுக்கீட்டை' கையில் ஏந்தியுள்ளது. இதனால், உள் இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கின. இதன்பிறகு நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில், 'அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் என்ற தன்னுடைய நீண்ட நாள் கனவு கனவாகவே போகுமா?' என ராமதாஸ் உருக்கமாகப் பேசினார். இதனால், பாமக தனித்துக் களமிறங்கத் தயாராகிவிட்டதாகச் செய்திகள் பரவியது. 

 

ஆனாலும் பாமக அதிமுக இடையே புகைச்சல் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்றும் பாமக கூடுதல் தொகுதிகள் கேட்கிறது, அதிமுக தயக்கம் காட்டுகிறது என்றும் செய்திகள் றெக்கை கட்டியது. மேலும், உள் இட ஒதுக்கீடு சமாச்சாரத்தில் ராமதாஸ் உறுதியாக இருக்க, அதிமுக சமரசம் செய்ய முயன்று வருவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி நடைபெற இருந்த பாமகவின் நிர்வாகக்குழு கூட்டம், வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்தல் கூட்டணி குறித்த முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக பாமகவினர் கூறுகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக, "வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன். இல்லையெனில், வரும் 31ம் தேதி நடக்கும் நிர்வாகக் குழுவில் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும்" என கெடு விதித்துள்ளார் ராமதாஸ். இதனால் அதிமுகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

cnc

 

இன்னொருபுறம், சமீபத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் 'வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை திமுக ஏற்றுக்கொண்டால், கூட்டணி குறித்து ராமதாஸ் முடிவு செய்வார்' என்றார் ஜி.கே.மணி. இதனால், திமுக-பாமக கூட்டணிக்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டது. பிறகு, ஜனவரி 25-ஆம் தேதி வெளியான முரசொலி இதழில், 'திமுகவை குறிவைக்கும் இலவு காத்த கிளி! மருத்துவர் ஐயாவின் பகல் கனவு' எனும் கட்டுரை, திமுக-பாமக கூட்டணி ஊகங்களைத் தவிடுபொடியாக்கியது.

 

திமுக கூட்டணியில் பாமக இணைவது பற்றி முரசொலி பதில் சொல்லிவிட்டது. அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து வரும் 31-ஆம் தேதி ஆலோசிக்க இருப்பதாக ராமதாசே கூறிவிட்டார். இந்நிலையில், பாமக, மீண்டும் தனித்துக் களமிறங்கப் போகிறதா அல்லது மூன்றாம் அணியைக் கட்டும் முயற்சியில் இறங்கப் போகிறதா எனப் பல்வேறு கேள்விகள் அரசியல் அரங்கில் எழுப்பப்படுகிறது.

 

என்ன செய்யப் போகிறது பாமக? 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.