Skip to main content

உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி ஏற்றதன் காரணம் இதுவா?

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. உள்துறை அமைச்சர் பதவி முன்னால் பா.ஜ.க வின் தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு அளிக்கப்பட்டது. அமித்ஷா உள்துறை அமைச்சர் ஆனதில் இருந்து உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் அதிரடியாகவே உள்ளது. காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ததில் இருந்து தற்போது பா. சிதம்பரம் கைது வரை அனைத்திலும் அதிரடி காட்டியவர் அமித்ஷா. நீண்ட நாட்களாகவே ஏன் அமித் ஷா இந்த பொறுப்பிற்கு வந்தார் என்ற சந்தேகம் இருந்தது. 

 

bjp



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த தடை செய்தார். அப்போது அனைத்து இந்துத்துவ இயக்கங்களும் அவரை எதிர்த்து பேச முடியாமல் மௌனம் சாதித்தனர். ஆனால் அவர் இறந்த பிறகு பா.ஜ.க வின் அடிமை ஆட்சியான அ.தி.மு.க வின் ஆட்சி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்தது. பல்வேறு இடங்களில் இடத்திற்கு ஏற்றவாறு அனுமதி அளிப்பதும், மறுப்பதும் நீடித்து வந்த நிலையில் அக்டோபர் 08, 2019 அன்று புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த மாவட்ட கண்கானிப்பாளர் செல்வராஜிடம்l அனுமதி கோரப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க வின் இளைஞரணி செயலாளர் பாண்டியராஜ் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட காவல் கண்கானிப்பாளரை விமர்சித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். 

 

bjp



இந்த நிலையில் பா.ஜ.க வின் இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் "புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அமைதியாக ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். அதற்காக மாவட்ட எஸ்.பி செல்வராஜிடம் அனுமதி கோரியிருந்தோம். ஆனால் அவர் கடைசி நேரத்தில் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துவிட்டார். ஆகையால் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி-ஐ உடனடியாக பணியிடமாற்றம் செய்ய கோரிக்கை விடுத்தோம். சில அரசியல் காரணத்திற்காக இது போன்று மறுப்பது ஏற்புடையது அல்ல" என்றனர். இதில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்திருந்தார். மதுரையில் ஊர்வலம் நடத்தத் தயாராகும் தருவாயில் பா.ஜ.க-வின் மாநிலங்களவை எம்.பி. இல.கணேசன் கைது செய்யப்பட்டார்.  அது போன்ற சமயத்தில் கூட எந்த ஒரு கடிதமும் மத்திய அமைச்சர்களுக்கோ, பிரதமருக்கோ அனுப்பி வைக்கப்படவில்லை. அப்போது கடிதம் அனுப்பினால் தற்போது மோடி 50 மேற்பட்ட பிரபலங்கள் மீது வழக்கு தொடுத்தது போல் மீதும் வழக்கு பாய்ந்திருக்கும் என்ற பயம் காரணமா என்ற சந்தேகம் எழுகிறது. வெளியே தெரிந்த நிகழ்வு இது ஒன்று தான். இது போல எத்துனை கடிதம் அனுப்பப்பட்டது என்பது பா.ஜ.க-வினருக்குதான் வெளிச்சம். இது போல பாஜக, ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளுக்கு எந்த சிக்கலும் வராமல் இருக்கத்தான் அமித் ஷாவை உள்துறை அமைச்சராக பா.ஜ.க நியமித்துள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இது குறித்து மாவட்ட எஸ்.பியிடம் கேட்டபோது "இதை நான் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் என்ன ஆகப் போகிறது? வரும் 20ஆம் தேதி அன்று ஊர்வலத்தை நடத்தவும் அனுமதி அளித்துவிட்டேன்" என்றார். "நாங்கள் ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே உயர்நீதிமன்ற அனுமதியுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களை நடத்தினோம். மேலும் இது போன்ற நல்ல இயக்கங்களின் செயல்பாடுகளை நிறுத்தியதால் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். மேலும் இக்கடிதம் கட்சி சார்பாக அனுப்பப்பட்டது கிடையாது. அது ஒரு தனி நபர் முடிவு" என்றார் பா.ஜ.க-வின் மாநில பொது செயலாளர் வசந்த ராஜன். இது போன்று நடக்கும் நிகழ்வுகள் ஆட்சி அதிகாரத்தின் நம்பகத் தன்மையை கேள்விக் குறியாக மாற்றுகிறது. ஒரு வரை பணியிட மாற்றம் செய்ய சொல்லி கடிதம் வெளிப்படையாக எழுதுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


-அஹமத் அலி.

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.