Skip to main content

விவசாயிகளுக்கு ஈ.டி. சம்மன் அனுப்பிய விவகாரத்தில் நடந்தது என்ன? 

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
What happened in matter of sending the ED summons to farmers
விவசாயிகள்

சேலம் அருகே, அப்பாவி விவசாயிகள் இருவருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பிய விவகாரத்தில் அண்ணாமலை, மலை மலையாக பொய்களை கொட்டியிருப்பது அம்பலமாகி இருக்கிறது. 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ஆர்.என்.பாளையம் வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன் (72). இவருடைய தம்பி, கிருஷ்ணன் (65). விவசாயிகள். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, உள்ளூரில் சொந்தமாக 6.50 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவர்களுடைய நிலத்திற்கு அருகில், சேலம் கிழக்கு மாவட்ட பாஜக செயலாளர் குணசேகரன் (42) என்பவருக்கும் விவசாய நிலம் உள்ளது. இவர், கண்ணையன் சகோதரர்களிடம் அவர்களின் நிலத்தை அடிமாட்டு விலைக்குக் கேட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக குடைச்சல் கொடுத்து வந்துள்ளார். 

இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் குணசேகரன், அவர்களுடைய விவசாய நிலத்திற்கு வேலை செய்ய வரும் பெண்களை மிரட்டுவது, கிழக்கு பிடுங்க வரும் புரோக்கர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி, சென்னையில் உள்ள மத்திய அரசின் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து அவர்களுக்கு ஒரு அழைப்பாணை கடிதம் வந்துள்ளது. 

What happened in matter of sending the ED summons to farmers
குணசேகரன்

இதுகுறித்த விவரம் தெரியாத அவர்கள், கடிதத்தை எடுத்துக்கொண்டு உள்ளூரைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் கண்ணன் மற்றும் வழக்கறிஞர்கள் அரங்க.செல்லதுரை, தலித் பிரவீணா ஆகியோரிடம் சென்று காட்டியுள்ளனர். அவர்கள் மூலம்தான், அமலாக்கத்துறை அழைப்பாணையின் முழு விவரமும் வெளி உலகுக்குத் தெரிய வந்தது. பண மோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ ஆக்ட்) பிரிவு 50 (2) மற்றும் 50 (3) ஆகியவற்றின் கீழ், 5.7.2023ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அழைப்பாணை கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. நிலம் வாங்கியதற்கான பணம் எப்படி கிடைத்தது? அதற்கான ஆதாரங்கள் தொடர்பான ஆவணங்களை விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

தமிழக அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை 1000 ரூபாய் மற்றும் ரேஷன் அரிசியை சாப்பிட்டு வரும் மிகச்சாதாரண விவசாயிகளுக்கு பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அழைப்பாணை வந்ததால் அவர்கள் அரண்டு போனார்கள். மேலும், அந்த அழைப்பாணை கடிதத்தின் மேலுறையிலேயே, விவசாயிகளின் பெயருக்கு அருகில், அவர்களின் மதம், சாதியின் பெயரையும் அப்பட்டமாக எழுதப்பட்டு இருந்தது. அழைப்பாணை கடிதம், மேலுறைகளில் இப்படி ஒருவரின் பெயருடன் சாதி, மதத்தை பட்டவர்த்தனமாக குறிப்பிடுவது இதுவரை நடைமுறையில் இல்லாத ஒன்று என்பதால் அமலாக்கத்துறையின் இந்த நடைமுறை வழக்கறிஞர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது. ஆனால், அமலாக்கத்துறை விசாரணையின்போது விவசாயிகளை அழைத்துச்சென்ற இரு வழக்கறிஞர்களையும், அவர்கள் சார்பில் ஆஜராக அனுமதிக்கவில்லை. 

What happened in matter of sending the ED summons to farmers
தலித் பிரவீணா

இந்த சம்பவம் நடந்து 6 மாதம் கழிந்த நிலையில், தற்போது இதன் பின்னணியில் பாஜக நிர்வாகி குணசேகரனுக்கு தொடர்பு இருப்பதும், அவரின் தவறான தகவலால்தான் அமலாக்கத்துறை இதுபோன்ற அழைப்பாணை கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக பாஜக நிர்வாகி குணசேகரனிடம் விசாரித்தோம். ''அமலாக்கத்துறை நடவடிக்கைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சில ஆண்டுக்கு முன்பு கண்ணையனும், கிருஷ்ணனும் காட்டு எருமைகளை கொன்று தங்கள் நிலத்தில் புதைத்து விட்டதாக வனத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அப்படி ஒரு அழைப்பாணைக் கடிதத்தை அனுப்பி இருக்கலாம்'' என்றார் குணசேகரன். 

அத்துடன், ''ஏன் சார்... நான் ஒரு கட்சியின் சாதாரண மாவட்டச் செயலாளர். நான் சொன்னால், அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பி விடுமா? ஊடகங்கள் சிந்திக்க வேண்டாமா?” என கிண்டல் தொனியிலும் எதிர் வினா எழுப்பினார்.  

இது ஒருபுறம் இருக்க, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சேலத்தில் நடை பயணத்தில் இருந்தபோதும், பின்னர் மதுரையிலும் ஊடகத்தினரிடம் அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பிய விவகாரம் குறித்து பேசியிருந்தார். ''கண்ணையன் சகோதரர்கள், ஒரு காலத்தில் காட்டெருமைகளை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளிகளாக இருந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். அமலாக்கத்துறைக்கு வனத்துறை தொடர்பான குற்ற வழக்குகளை எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேநேரம், அமலாக்கத்துறை அளித்துள்ள நோட்டீஸில் சாதி பெயர் உள்ளதை பாஜக ஏற்கவில்லை. ஆனால், அமலாக்கத்துறைக்கு அனுப்பியுள்ள எப்.ஐ.ஆரில் சாதி பெயர் உள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் அப்படி குறிப்பிட்டு இருக்கலாம். மேலும், சேலம் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகி பத்தாம் வகுப்புதான் படித்திருக்கிறார். அமலாக்கத்துறைக்கு அவருக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது. அவர் எப்படி அமலாக்கத்துறையிடம் சொல்லி சோதனை நடத்தச் சொல்லி இருப்பார்?'' என தெரிவித்தார். 

What happened in matter of sending the ED summons to farmers
அரங்க.செல்லதுரை


நம்மிடம் பாஜக நிர்வாகி குணசேகரன் கூறியதை, அப்படியே அண்ணாமலை என்ற முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும் செய்தியாளர்கள் சந்திப்பில் சொல்லியுள்ளார். 

ஏற்கனவே அண்ணாமலை, கர்நாடகா மாநிலத்தில் காவல்துறை எஸ்பி ஆக பணியாற்றியபோது, 2 லட்சம் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளதாக கூறியது சர்ச்சை ஆனது. தன் வாழ்நாளில் இதுவரை 20 ஆயிரம் புத்தகங்கள் படித்துள்ளதாகவும், மோடி ஆட்சியில் குண்டு வெடிப்பே நிகழவில்லை எனவும், ஜெயலலிதா தேர்தலில் டெபாசிட் இழந்தார் என்றும், முத்துராமலிங்கத் தேவர் அண்ணாவை மன்னிப்பு கேட்க வைத்தார் என்றும், வல்வில் ஓரியை சுதந்திர போராட்ட தியாகி என்று பேசியவர் தானே அண்ணாமலை என பேச்சுகளும் இருக்கின்றன. 

What happened in matter of sending the ED summons to farmers
அண்ணாமலை

வனத்துறை தரப்பில் இருந்து அமலாக்கத்துறைக்கு ஏதேனும் கண்ணையன் சகோதரர்கள் மீதான வழக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டதா? என்பது குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூர் சரக வனத்துறை அதிகாரி அல்லிராஜிடம் கேட்டோம். ''விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோர் தங்கள் தோட்டத்தில் மின்சார வேலி போட்டிருந்தனர். இந்த வேலியில் சிக்கி இரண்டு காட்டெருமைகள் இறந்துவிட்டதாக அவர்கள் மீது கடந்த 2017ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

காட்டெருமைகள் ஷெட்யூல்-1 பிரிவில் வைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீது பிணையில் விடக்கூடாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு ஆவணங்கள் எதுவும் எங்கள் தரப்பில் இருந்து அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அதேபோல், நாங்கள் எப்.ஐ.ஆரில் சாதி பெயர்களையும் பதிவு செய்வதில்லை. 

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பலர், ஒரே பெயரில் இருக்கும்பட்சத்தில் அவர்களை துல்லியமாக குறிப்பிட ஊர், தெரு, சாதி, மதம் உள்ளிட்ட விவரங்களை அரிதாக பதிவு செய்வோம். ஆனாலும் கண்ணையன் சகோதரர்கள் வழக்கில் அப்படி எதையும் நாங்கள் குறிப்பிடவில்லை. அழைப்பாணையிலும் சாதி விவரங்களை குறிப்பிட மாட்டோம். மற்றபடி, வனத்துறை வழக்குகளை அமலாக்கத்துறை எடுத்து விசாரிக்கலாமா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது'' என்றார் வனத்துறை அதிகாரி அல்லிராஜ். 

வனத்துறை வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருப்பதாகக் கொண்டாலும், 2017ல் நடந்த சம்பவம் குறித்து இப்போது ஏன் விசாரிக்க வேண்டும்? என்ற கேள்வியும் எழுகிறது. அது தொடர்பான விவரங்கள் எதுவும் அழைப்பாணையில் குறிப்பிடப்படவில்லை.  ஆக, பாஜக பிரமுகரும், அமலாக்கத்துறையும் கூட்டு சேர்ந்து கொண்டு சேர்வராயன் மலை அடிவாரத்தில் செழிப்பான பூமியாக இருக்கும் ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிப்பதற்காகவே இந்த கூத்துகள் நடந்துள்ளதாக பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. 

இதுகுறித்து முழுமையாக விசாரிக்காமலேயே, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வழக்கம்போல் அமலாக்கத்துறையின் அழைப்பாணை விவகாரத்திலும் பேசியிருப்பதாக பா.ஜ. கட்சியினரே சொல்கிறார்கள். 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.