Skip to main content

சாராயத்தோடு செக்ரட்டேரியட்டுக்குப் போன கதை! - ஆட்டோ சங்கர் #6  

Published on 01/06/2018 | Edited on 01/06/2018
auto sankar 6 title



சாராய வியாபாரம் ஆரம்பிச்சு சீக்கிரத்திலேயே வியாபாரத்தோட நெளிவு, சுளிவுகளைத்  தெரிஞ்சுகிட்டேன். நாவலூர், விருகம்பாக்கம், திருநீர்மலை இப்படி அத்தனை ஏரியாக்கள்ளயும் இருக்கிற சாராயங்களையும் தரம் பிரிக்கிற அளவு வெவரமாயிட்டேன்.

முதல்ல எல்லாம் பஸ்ஸிலே போய்தான் சாராய கேனை எடுத்துக்கிட்டு வருவேன். பஸ்ஸிலே என் பக்கத்திலே கேனை   வச்சுக்கமாட்டேன். பின்புறமா அதை வச்சுட்டு நான் டிரைவர் வரைக்கும் நகர்ந்திடுவேன். வழியிலே செக்கிங் வந்தா   சரக்கை அம்போன்னு விட்டுட்டு இறங்கி ஓடிரலாமே! தூரத்திலே அவங்க நிற்கறப்பவே மோப்பம் பிடிச்சு இறங்கிடுவேன்....

மின்னல் வேகத்திலே வியாபாரம் வளர்ந்துச்சு! இந்த மாதிரி வியாபாரங்களே இப்படித்தானே... வளர்ந்தா மின்னல்   வேகத்திலே இருக்கும். விழுந்தாலும் இடி விழுந்தது கணக்கா விழும்! பஸ்ஸிலே போய் கொண்டு வந்தா போதாதுன்ற அளவு சரக்கு டிமாண்ட் ஆச்சு. வேனைப் புடிச்சேன்... பிறகு லாரி! பஸ், லாரி, ஆட்டோன்னு பல வாகனங்களில் சரக்குகளைக் கொண்டுவந்தேன்னு ஒற்றை வரியிலே சொல்லிட்டாலும் அப்ப நான் சந்திச்ச அனுபவங்களும் போராட்டங்களும் பயங்கரமானது.

 

 

ஒரு தடவை திருநீர் மலைல இருந்து சரக்கை எடுத்துக்கிட்டு வேன்லே வர்றப்ப மதுவிலக்கு போலீஸ் ஜீப்புலே   துரத்திக்கிட்டு வந்துடுச்சு. இங்கிலீஷ் படத்திலே வரமாதிரி பயங்கர சேஸிங்! குறுக்கு வழியிலே தப்பிக்கிறதுக்கும் காரை சாமர்த்தியமா விரட்டி ஓட்றதுக்கும் சரியான வேன் டிரைவரைத்தான் எப்பவும் பக்கத்திலே வச்சிருப்பேன்! ஆனா, அன்னிக்கு அவங்களுக்கு நல்ல நேரம். ஹைவேஸ்ல எக்கச்சக்கமா மாட்டிக்கிட்டோம். டிரைவர் இறங்கி ஓடியே போயிட்டான்... நான் இறங்குறதுக்குள்ளே வந்து மொய்ச்சுட்டாங்க

மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர், பின்னாடி மிகப்பெரிய போலீஸ் அதிகாரியா சென்னையிலேதான் இருந்தாரு... என்னை நெருங்கி வந்து... "ஏண்டா... சரகத்துக்கு மட்டும்தான் மால் வெட்டுவியா? நாங்களெல்லாம் என்ன பழத்தை வச்சுகிட்டுப்போறதா?''ன்னு கேட்டார். அவர் யாருன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க. ஒருத்தர் பாக்கியில்லாம எல்லா பெரிய   மனுஷங்களையும்... பெரிய மனுஷங்களோட சின்ன மனசுகளையும் இனி வரப்போற அத்தியாயங்களில் சொல்றேன்!

 

secretariat


அந்த அதிகாரியோடு பேரம் பேசினேன். அப்பாடா! இனிமே இந்த வழியிலே ஆபத்திருக்காது. ஏழு எட்டு வருஷ கிரிமினல் வாழ்க்கையிலே எத்தனையோ போலீஸ் ஆபீஸர்களைப் பார்த்துட்டேன்... நான் போட்ட எலும்புத் துண்டுகளை தின்றவங்களும் நான் குற்றவாளியாகக் காரணமானவங்களும் பெரிய பெரிய பதவிகளுக்கு ப்ரமோஷன் கிடைச்சுப்போனாங்க... ஆனா நான்? என்னை மட்டும் "சிவலோகப்பதவி'க்கு அனுப்பிட்டாங்க!

எல்லா போலீசுக்கும் இந்த முகம்தான்னு சொல்ல மாட்டேன். நேர்மையா வேலை செய்தவர்களும் உண்டு... அவங்க ரொம்ப அபூர்வம்ன்றது மட்டுமில்லை... எந்த பதவி உயர்வும் கிடைக்காதவங்கன்றதும் எனக்குத் தெரியும். நான் நேர்மையை பத்தி நம்பிக்கை இழந்ததெல்லாம் இந்த இடத்திலேதான்.

சாராய வியாபாரத்துக்காக ஒதுங்கியிருந்த புறம்போக்கு நிலத்தை -ஜெயந்தி தியேட்டர் பின்புறம்- எனக்கே எடுத்துக்கிட்டேன்! போலீஸ்தான் துணை இருக்கே. அந்த இடத்துக்கு 'பெரியார் நகர்'னு பேர் சூட்டினேன். 216 பிளாட்டுகளா பிரிச்சு, சுற்றி குடிசைகள் போட்டேன்.

 

 


"எப்படியாவது இந்த இடத்துக்குப் பட்டா வாங்கிடு சங்கர்''ன்னு சுகுமார் யோசனை சொன்னார்.

நேரமில்லாததாலே அதைக் கவனிக்காமலே இருந்தேன். ஒருநாள் ஆட்டோவிலே சரக்கை எடுத்துக்கிட்டு வர்றப்ப கார்ப்பரேஷன்லேருந்து ஆட்களெல்லாம் வந்திருக்கிறதா சொன்னாங்க. பெரியார் நகரைச் சுத்தி கூட்டம் கூட்டமா ஜனம். புறம்போக்கை ஆக்கிரமிச்சிருக்கிறதாலே அப்புறப்படுத்த அதிகாரிங்களெல்லாம் வந்திருந்தாங்க

எனக்கு பரபரப்பாயிடுச்சி! தொழில் நடத்த இடம் வேணுமே... சட்டுனு ஆட்டோவை எடுத்துக்கிட்டு 'கோட்டை'க்குப் போனேன், அவரைப் பார்க்க... செகரட்டேரியட்டை நெருங்குறப்பதான் தெரிந்தது... ஆட்டோவுக்குள்ளே இருந்த 'சரக்கை' இறக்காமலே கொண்டுவந்திருக்கேன்னு. அவ்வளவு சாராயத்தோட கோட்டைக்குப்போன மொத ஆள் நானாகத்தான் இருக்கும். கோட்டையிலே போய் யாரை பார்த்தேன் தெரியுமா?           
 

முந்தைய பகுதி:

சப் இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்த சாராய வியாபாரம்... ஆட்டோ சங்கர் #5   

 


    

Next Story

ஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்! ஆட்டோ சங்கர் #23

Published on 07/12/2018 | Edited on 09/12/2018

தேவியுடன் சேர்ந்து கூத்தடித்தேன். என்னிடம் பெண் கேட்டு வரும் ஸ்திரிலோலர்களில் அதிக திடம் அதிக சக்திவாய்ந்த ஆசாமிகளை அனுப்பி வைத்தேன்! அவளுக்கும் பரம திருப்தி. அந்த வாட்டசாட்டன்களிடமிருந்து நமக்கும் வசூல்! ஒரு கல்லில் ரெண்டு மாங்காய். சென்னையிலிருந்த இளம் நீக்ரோக்கள் நெல்சன் மண்டேலாவை விட அதிகம் நேசித்தது அந்த பெண்மணியைத்தான்!

 

auto sankar



பெரியார் நகரில் புதுசாக வீடு கட்டி, கிரகப்பிரவேசத்துக்கு அத்தனை முக்கிய போலீஸ் அதிகாரிகளும் ஆஜர் ஆகியிருந்தனர். ரிப்பன் வெட்டி வீட்டைத் திறந்து வைத்தது டி.எஸ்.பி.தங்கய்யாதான்! நம்ப அம்மையார் குத்து விளக்கு ஏற்றி வைக்க ஏகதடபுடல்.   சங்கரது சாராய வியாபாரத்தை விளக்கேற்றி தொடங்கி வைத்தது போலவே கிரகப்பிரவேசத்துக்கும் தவறாமல் கலந்து கொண்டனர் போலீஸார்!

அவர்களைச் சொல்லி தவறே இல்லை. காவல்துறை என்று பெயரே தவிர, யாருக்குக் காவல் என்று சொல்லவில்லையே? சாராய வியாபாரிகளுக்கும், மாமாக்களுக்கும் நாம்தான் காவல் காக்க வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்! நன்றி மறக்காத காவல் துறையினர்!

கிரகப்பிரவேச நிகழ்ச்சிகள் எல்லாமும் வீடியோவில் பதிவாயிற்று. எனக்கு ஒரு கலர் கனவு இருந்தது! என்றைக்காவது   சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழைய வேண்டும் என்ற ராஜ கனவு! அதற்கான அவ்வளவு தகுதிகளும்(!) கைவசம் என்றாலும் நேரம்தான் வாய்க்கவில்லை.

 

auto sankar house celebration



எப்படியும் தேர்தல் சமயத்தில் உபயோகப்படும் என்றே எல்லா 'பெரிய மனிதர்களோடும்' பழகினேன்! பெரிய மனிதர்களின் அழுக்கு அந்தரங்கங்களுக்கு- கறுப்பு சிந்தனைகளுக்கு- பயன்பட்டது என் நீலப்பட்டறை! பிற்பாடு தேர்தல் சமயம் அரசியல் வட்டாரத்தில் என் செல்வாக்கைக் காட்டுவதற்காகவே பூரா வி.ஐ.பி.களையும் அதிகாரிகளையும் விழாவுக்குக்   கூப்பிட்டேன். வீடியோவில் அவர்களை விழ வைத்தேன். தேர்தல் வருமுன் நான் மட்டும் விழாமல் இருந்திருந்தால் தேர்தல் வெற்றி விழாவும் நடத்தியிருப்பேன்!

அம்மையாரிடம் விளையாடி விட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தேன். வாசலில் ஜீப் ஒன்று டயர் தேய வந்து நின்றது.   கான்ஸ்டபிள்கள்  ரெண்டு பேர் இறங்கி வந்தனர். புருவத்தில் கேள்வி முடிச்சு! 'பெரிய அய்யா' உடனே அவனைக் கூட்டி வர   சொன்னாராம். தெரிவித்தார்கள்! எனக்குத் தூக்கி வாரிப் போட்டது! 

'பெரிய அய்யா' என்பது அந்த அம்மையாரின் கணவர்! இதுவரை அவரை நேருக்கு நேர் சந்தித்ததில்லை; காவல்துறையில் அந்த ஒருவரை மட்டும் நெருங்கவேயில்லை நான்! அவர் மனைவியுடன் பழகி வரும்போது அவரை சிநேகிக்க சங்கடமாயிருந்தது. ஒரு விதமான இடைவெளியை அடைகாத்து வந்தேன், கூச்சம் காரணமாக. அவரிடம் ஆக வேண்டிய காரியங்களை அவள் மூலமாகவே கவனித்துக் கொண்டிருந்தேன்.

இப்போது அவர் கூப்பிட்டார் என்றதும் அதிர்ச்சி! எதற்குக் கூப்பிட்டிருப்பார்! அவர் மனைவியிடம் உள்ள உறவு தெரிந்திருக்குமோ? அதை விசாரிக்கப் போகிறாரோ? மனசுள் பயமுயலொன்று குறுகுறுவென ஓடிற்று. முதுகுத் தண்டில் ஐஸ் நதி வருடினது மாதிரி ஜில்லிட்டது.

முந்தைய பகுதி :

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22 

ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்... மறைக்கப்பட இருந்த  பெரும் உண்மைகளை சிறை வரை சென்று மீட்ட கதை... விறுவிறுப்பான முழு புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்... 

 

books.nakkheeran.in

 

 

 

Next Story

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22 

Published on 17/11/2018 | Edited on 09/12/2018
auto sankar 22



ஆட்டோவா, ஆகாய விமானமா என சந்தேகப்படும்படியான, நம்ப முடியாத வேகத்தில் வண்டி பறந்தது.

"கடைக்கு பலத்த சேதமா...?''

"ஆமாண்ணே...! யாரோ நாலு பேர் புகுந்து. இந்த மிஷின்லே ஏதோ ஃபிராடு இருக்குது... எப்பவுமே காசு விழறதில்லை... ஏமாத்தவா செய்யறீங்க'ன்னுஅடிச்சு நொறுக்கறாங்களாம்... நாமும் வேணா ஒரு நாலைந்து சேர்த்துப்போமா... சந்தடி சாக்கிலே கடையைத் தரை மட்டமாக்கிடலாம்!?''

"உளறாதே, பேசாம போ!''

சண்டையில் அமளி துமளிப்பட்டது கடை... அந்த நாலுவாட்ட சாட்டன்களும் பிரதேசத்தை உண்டு, இல்லை பண்ணிக்   கொண்டிருந்தனர். முதலாளியம்மா பதட்டமாகி ஃபோனுக்குப் பாய ஸ்டூல் ஒன்று பறந்து வந்து தொலைபேசியில் மோத சிதறித்   தெறித்தது. அம்மையார் அலறித் தீர்த்தார்.

இன்னொருவன் கல்லா பெட்டியில் கைவைக்க முயன்ற நிமிஷம், கடைமுன்னர் பெரிய சப்தத்துடன் போய் நின்றது அவசர ஆட்டோ., சரேலென வெளிப்பட்டேன். ஒரு நிமிடம் சண்டையை நிதானமாய் கவனித்தேன். வெறுப்புடன் காரித் துப்பினேன்! தம்பி மோகனிடம் "நான் மட்டும் உள்ளே போய் கவனிச்சுக்கறேன்... நீ ஆட்டோவிலேயே இரு!'' சொல்லிவிட்டு உள்ளே பாய்ந்து சண்டை ஜோதியில் சேர்ந்து கொண்டேன். அவர்கள் நான்கு பேரோடும் ஒற்றை ஆளாகச் சமாளித்தேன்.

வாசகர்களே, நீங்கள் யாருடைய ரசிகர்? ரஜினி? கமல்? விஜயகாந்த்? சத்யராஜ்? அல்லது வாத்தியார்? உங்கள் அபிமான நடிகர்   யாரோ அவரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்! திரையில் அவர் எப்படி எதிரிகளை சமாüப்பாரோ அப்படி ஒரு ஸ்டைல்! சாகஸம்! கெட்டிக்காரத்தனம்!

ஒரு ஆளாக நின்று கொண்டு எதிரிகளைப் பந்தாடினேன். ரௌடிகள் நான்கு பேரும் உதட்டில் எட்டிப் பார்த்த ரத்தத்துடன் துடித்தனர். வலி தாங்காமல் பெற்றவளைக் கூப்பிட்டுக் கொண்டே கீழே சாய்ந்தனர். கடையை விட்டு வெளியே பாய்ந்து மறைந்தனர். அம்மையார் கண்களில் ஆச்சரியம் பிரகாசம் காட்டிற்று. என்னை பரவசம் பொங்கப் பார்த்தார்.

 

auto sankar 22-1



'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் திருடனை விரட்டின எம்.ஜி.யாரின் பலம் பார்த்து பிரமித்த சரோஜாதேவி கூட அப்படித்தானே   பார்த்தார்?!' அது சரோஜாதேவி, இவர்... ஏதோ ஒரு தேவி! அம்மணி என்னைப் பார்த்து தோழமையுடன் சிரித்தார்.

"ரொம்ப நன்றி...! நல்ல நேரத்தில் வந்து கை கொடுத்தீங்க!''

உதட்டில் புன்னகை உருவாக்கிக் காட்டினேன்.

"அதனால என்னங்க... உங்களுக்கு எப்ப, என்ன உதவி தேவைப்பட்டாலும் எனக்குப் ஃபோன் பண்ணுங்க'' -விசிட்டிங் கார்டை அவர் கையில் திணித்தேன். என் உதவி அவருக்கும் அவர் உதவி எனக்கும், அப்புறம் அடிக்கடித் தேவைப்பட்டது. அந்த பெண்மணிக்கு அடிக்கடி ஃபோன் செய்து என்னைக் கூப்பிடத் தெரிந்தது. பரஸ்பரம் தொழிலுதவி செய்யத் தெரிந்தது; போலீஸ் வட்டாரத்தில் என்னை மேலும் நெருக்கமாக்க தெரிந்தது.

வீடியோ கடையில் நடந்த மோத-ல் சண்டை போட்டவர்கள் என்னுடைய ஆட்கள்... அந்த சண்டையே ஒரு "செட்அப்' என்பது மட்டும் தெரியாது! 

 

bookstore ad



சூரியனும், சந்திரனும் கூட அப்போதெல்லாம் நான் சொன்னபடி கேட்டது என்றே சொல்லலாம்! சூரிய, சந்திரர் மட்டுமா? ஒரு சில   நட்சத்திரங்களும் கூட! சினிமா நட்சத்திரங்கள்! நடிகைகள்! என் ஓட்டு எப்போதும் சூரியனுக்குத்தான்! கட்சி உறுப்பினராகவும் அந்த வட்டாரத்தில் ஒரு பொறுப்போடும் இருந்தேன். ஆனால் அப்போது ஆட்சியிலிருந்தது அந்தக் கட்சியில்லை!

அதனாலென்ன... அந்தக் கட்சியில் அரசியல்வாதிகளுடன் நெருக்கமென்றால், ஆளும் கட்சியில் அதிகாரிகளிடம் செல்வாக்கு!அதுவும் அந்த உயர் அதிகாரி! 'ஐயா'வின் மனைவியின் நட்பு என்னை அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக்கிற்று! செருப்புக்கு பாட்டாவும் இரும்புக்கு டாட்டாவும் இருந்தது மாதிரி சாராயத்துக்கு சங்கர் என பேரெடுக்க முடிந்தது, தேவியின் தயவால்!

எனக்கு இதில் இன்னொரு சந்தோஷம் கூட உண்டு! சட்டத்தின் நீள அகலமான கதவுகள் எனக்காக திறந்துவிடப்பட்டதே... இதற்கு எந்தக் கமிஷனும் கேட்கவில்லை தேவி! ஆனால் வேறு ஒன்று கேட்டார்... எனக்கு அது சம்மதமானது; சந்தோஷமானதும்!  

முந்தைய பகுதி:

என் கடைக்கு எதிர் கடை போட்ட பெண்மணி! - ஆட்டோ சங்கர் #21 

அடுத்த பகுதி :

ஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்! ஆட்டோ சங்கர் #23