Skip to main content

"லோக் ஆயுக்தாவில் மேலும் சில விஷயங்களை கொண்டு வருவோம்..." : வழக்கறிஞர் கே.பாலு பேட்டி 

Published on 10/07/2018 | Edited on 10/07/2018
balu


தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா மசோதா திருப்தியளிக்கிறதா? நீதிமன்றம் கெடு விதித்த 10ஆம் தேதிக்கு முந்தைய நாள் அவசர அவசரமாக இதை செய்திருக்கிறார்களே, இவ்வளவு தாமதம் ஏன்? இதன் செயல்பாடு வேகமாக இருக்குமா? இதில் என்னென்ன குறைகள்? அரசு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களும், பணியாளர் நியமனமும் இந்த லோக் ஆயுக்தாவின் கட்டுப்பாட்டில் வராது என்று குறிப்பிடப்பட்டுள்ளதே? வலிமை மிக்கதாக இது உருவாக என்னென்ன விஷயங்கள் சேர்க்க வேண்டும்? ஆகிய கேள்விகளுக்கு நக்கீரன் இணையதளத்திற்கு பதில் அளித்துள்ளார் பா.ம.க. செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு.

லோக் ஆயுக்தா கொண்டுவர வேண்டும் என்று பாமக உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் ஏன் லோக் ஆயுக்தா கொண்டுவரப்படவில்லை என்று கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அந்த அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கெடுவும் விதித்தது. லோக் ஆயுக்தாவை தமிழக அரசு தானாக கொண்டுவரவில்லை. நிறைவேற்றியாக வேண்டும் என்ற நிர்பந்தத்துடன்தான் லோக் ஆயுக்தாவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

 

 


அதிலும் இந்த லோக் ஆயுக்தாவை கொண்டு வந்தது, உண்மையிலேயே ஊழலை ஒழிப்பதற்காகவும், ஊழல் தொடர்புடைய அமைச்சர்கள், அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான ஒரு நல்ல நோக்கத்திற்கான முயற்சியாக இது தெரியவில்லை. தமிழக முதலமைச்சரும் லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்புக்குள் வருவார் என்று சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. முதலமைச்சரும் ஓர் அமைச்சராகக் கருதப்படுவார் என்று 2(1)(ஐ)-பிரிவில் கூறப்பட்டிருப்பதன் அடிப்படையில் மட்டுமே முதலமைச்சர் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் படி லோக் ஆயுக்தாவைக் கோர முடியும். இந்தக்  குழப்பத்தை முதலமைச்சர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

லோக் ஆயுக்தா விசாரணை ஆணைய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யக்கூடிய அமைப்பில் முதல் அமைச்சர், சட்டமன்ற தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என இவர்கள் மூன்று பேர் உள்ளனர். தமிழகத்தில் தகவல் உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை இத்தகைய குழுவே தேர்ந்தெடுக்கிறது. இதற்கான கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்க முடியாத சூழலை உருவாக்கி, ஆளுங்கட்சிக்கு சாதகமானவர்களை தேர்வு செய்வதே வழக்கமாக உள்ளது. மூன்று பேரில் இரண்டு பேர் எடுக்கும் முடிவே இறுதியாக உள்ளது. அதே நிலைமைதான் லோக் ஆயுக்தா விசாரணை ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நியமனத்திலும் தொடரும். ஆளுங்கட்சியை ஆதரிப்பவர்களை நியமிப்பார்கள். இது மிக மிக தவறானது. 

ஆகவே லோக் ஆயுக்தா விசாரணை ஆணைய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யக்கூடிய குழுவில் ஐந்து பேர் இருக்க வேண்டும். நடுநிலையான, நேர்மையான, அரசியல் விருப்பு வெறுப்புகளை தாண்டி விசாரிக்கக்கூடிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த சட்டம் அதற்கு வழிவகுக்கவில்லை.

 

 


அரசு அலுவலங்களில் நடைபெறும் டெண்டர், உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்படக்கூடிய ஊழல்களை விசாரிப்பதற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. அரசு அலுவலகத்தில் நடைபெறும் ஊழல்கள், அரசு அதிகாரிகள் செய்யக்கூடிய ஊழல் புகார்களை லோக் அயுக்தா நேரடியாக விசாரிக்க முடியாது. தமிழக அரசின் ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையரிடம் இது குறித்து புகார் அளித்து, அதில் முகாந்திரம் இருப்பதாக அவர் கருதினால் மட்டுமே அப்புகார் லோக் ஆயுக்தாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சொல்வது தவறானது. இங்கு இருக்கக்கூடிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையர் இந்த அரசாங்கம் என்ன சொல்கிறதோ, அதை செய்பவராகத்தான் இருப்பார். பொய் புகார் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம், ஒராண்டு சிறை தண்டனை என்பது, ஊழல் தொடர்பாக புகார் கொடுக்க முன்வருபவர்களை மிரட்டும் வேலையாக இருக்கிறது. இப்படி சொன்னால் புகார் கொடுக்க யார் முன் வருவார்கள்?.

இதன் தலைவராக யார் இருக்க வேண்டும் என்றால், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி. அந்த நிலையில் இருப்பவர்கள்தான் இதற்கு தலைவராக இருக்க வேண்டும். ஆனால் இதில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி இருக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆளும்கட்சிக்கு ஆதரவான ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை ஆளும் கட்சியினர் தேர்ந்தெடுத்துக்கொள்வார்களே...

தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையம் என்பது நிர்பந்தத்திற்காக கொண்டுவரப்பட்டிருக்கிறது. நாங்களும் கொண்டு வந்துவிட்டோம் என்று சொல்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் நினைப்பது என்னவென்றால், லோக் ஆயுத்தா என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்தில் நான் சொன்ன விஷயங்களை உரிய சட்ட திருத்தங்கள் மூலமாகவும், நீதிமன்ற தீர்ப்புகள் மூலமாகவும் உள்ளே புகுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. வரும் காலத்தில் இந்த சட்டம் கடுமையாக்கப்படும். இந்த சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது.

 

 


அந்த வகையில் இந்த சட்டம் தமிழகத்தில் மிக மிக அவசியமானது. ஏனென்றால் இந்தியாவிலேயே அதிகமாக ஊழல் செய்யும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஊழல், இலவசம், மது ஆகியவைதான் தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கிறது. நிர்பந்தத்தினால் இந்த லோக் ஆயுத்தா வந்திருந்தாலும்கூட, ஊழல் செய்தவர்கள் இதன் முன்பு நிறுத்தப்படுவார்கள். லோக் ஆயுத்தாவில் விரைந்து வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும். இன்னொன்று முக்கியமானது, நடுநிலையாக செயல்படுகிறது என்ற அபிப்ராயத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.

லோக் ஆயுக்தா, ஆளும் கட்சியினுடைய துணை அமைப்பாக இருந்துவிடக்கூடாது. அப்படி இருந்தால் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்வோம். நாங்கள் சொல்லக்கூடிய விஷயங்கள் சட்டத்தில் இல்லை என்று சொன்னாலும், நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக உள்ளே கொண்டு வருவோம். ஊழல் செய்பவர்கள் யாரும் இதில் இருந்து தப்பிக்க முடியாது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.