Skip to main content

அன்னத்திற்கு மதிப்பளியுங்கள்! ஒரு மெஸ் முதலாளியின் கட்டுப்பாடு! 

Published on 04/08/2018 | Edited on 27/08/2018
Reportkanayairam unavagam


அன்னம், சாப்பாடு, மனிதன் உயிர் உடல் வாழ மிக மிக அவசியம் என்பதை அனைவரும் அறிவோம். பொதுவாக உணவு சாப்பிடும் முன்பு பலர் 'அன்னபூரணி தாயே' என்று வணங்கிவிட்டு சாப்பிடுவார்கள். பலர் பிரார்த்தனை செய்த பிறகே உணவை உண்பார்கள். காலம் மாறிப்போச்சு. மனிதர்களுக்கு எதிலும் அவசரம். அதேபோல் சாப்பாட்டிலும் அவசரம். நின்று கொண்டே சாப்பிடுகிறார்கள், சிலர் நடந்து கொண்டும் சாப்பிடுவார்கள். பஸ், ரயில், கார் பயணத்தின்போதும் வாகனங்களிலேயே சாப்பிடும் பழக்கங்கள் உள்ளது.

 

கிராமங்களில் உணவு தானியங்களை சேமிக்கும் களம் போன்ற இடங்களில் செருப்புப் போட்டு நடக்க மாட்டார்கள். தானியத்தைக் காலால் மிதிக்க மாட்டார்கள். ஆனால் இப்போது சாலைகளில் எல்லாம் தாறுமாறாகப் போட்டு காய வைப்பது, உலர்த்துவது, சேமிப்பது சாலையில்போகும் வாகனங்கள் அதன் மீது ஏறிச் செல்வது, செருப்பு கால்களோடு நடப்பவர்கள் அதன் மீது நடப்பதை கண்களால் நாம் பார்க்கிறோம்.
 

 

 

உணவு தானியத்தை இறைவனுக்கு ஒப்பாக கருதிய காலம் மாறிப்போனது. அது மட்டுமா? உணவுப் பொருளை சேமித்து அதை பத்திரப்படுத்தும்போது சானத்தினால் ஆன இரு பிள்ளையார்கள் பிடித்து வைத்து இடையில் அருகம்புல் சொருகி சந்தனம், குங்குமத்தினால் பொட்டு வைத்து அதை தானியத்தின் மீது வைத்து வணங்கிய பிறகே அள்ளி பத்திரப்படுத்துவார்கள். இப்போதெல்லாம் தானியங்களை நிலத்தில் இயந்திரங்களால் அறுவடையாகும்போதே வீட்டுக்குக் கூட கொண்டுவராமல் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்று விடுகிறார்கள்.
 

இப்படிப்பட்ட காலத்திலும் உணவுக்கு மதிப்பளித்து வருகிறார் உளூந்தூர்பேட்டை டவுனில் மெஸ் நடத்தி வரும் பெரியவர் ஒருவர். இவரது மெஸ்சில் மதிய சாப்பாட்டின்போது அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், அரசியல்வாதிகள் என பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் வீட்டு சாப்பாடு போன்று கலப்படமில்லாத உணவு தானிய முறையில் தயாரிப்பதால்தான்.
 

 

 

அப்படிப்பட்ட இவரது மெஸ்சிஸ் சாப்பிட எவ்வளவு பெரிய ஆட்கள் போனாலும் அவர்கள் காலில் அணிந்துள்ள செருப்பை (காலணிகளை) வாசலில் கழட்டி விட்டுத்தான் உள்ளே போய் டேபிளில் அமர்ந்து சாப்பிட வேண்டும். சிலர் மறதியாக செருப்போடு போய் உட்கார்ந்தாலும் அவர்களிடம் பக்குவமாக சொல்லி செருப்பு போடாமல் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதை எடுத்து சொல்லுவார்.
 

'பெரிய பெரிய ஓட்டல்களில் எல்லாம் செருப்போடு அமர்ந்து சாப்பிடுகிறார்களே, நீங்கள் மட்டும் கண்டிஷன் போடுகிறீர்கள்' என்று ஏடாகூடமாக சிலர் கேட்பார்கள். அதற்கு அந்த பெரியவர், சாப்பாடு... அன்னம்... அது தெய்வத்திற்கு சமம். வீடுகளில் உட்கார்ந்து சாப்பிடும்போது செருப்பு போட்டுக்கொண்டு உட்கார்ந்து சாப்பிடுகிறோமா? இல்லையே. வீட்டில் அன்னத்திற்கு தெரிந்தோ, தெரியாமலோ கொடுக்கும் மரியாதையை ஓட்டலுக்குப் போனாலும் கொடுக்க வேண்டும். காலம் மாறலாம், விஞ்ஞானம் வளரலாம். தொழிற்சாலைகள் பெருகலாம். அதை உருவாக்கும் மனிதர்கள் அனைவரும் உயிர் வாழ அன்னத்தைதானே சாப்பிடுகிறோம் என பக்குவமாக பேசும்போது அவர் மீது மட்டுமல்ல, சாப்பாட்டின் மீதே மிகப்பெரிய மரியாதை வந்துவிடும்.

 

kanayairam unavagam


 

இந்த ஓட்டல் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை மிளகு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ளது. இதன் உரிமையாளரான 68 வயது கண்ணாயிரம் சொல்கிறார், "எனது தந்தை கோவிந்தன் இந்த ஓட்டலை ஆரம்பித்தார். 1965ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறோம். அப்போது சாப்பாடு 2 ரூபாய் 50 பைசா. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தினால் இப்போது சாப்பாடு 50 ரூபாய். எடுப்பு சாப்பாடு 60 ரூபாய். வீட்டு முறை உணவகம் மட்டுமல்ல, என் குடும்பத்தினர்களை கொண்டே தயார் செய்கிறேன். சம்பள ஆள் இல்லை. உணவுகள் தயாரானதும் தெய்வங்கள் முன்பு வைத்து படையல் செய்ததும், உணவு பரிமாறப்படும். சாதம், சாம்பார், ரசம், மோர், ஒரு பொறியல், இரண்டு மசால் வடை, இவைகளோடு சாப்பாடு கொடுக்கப்படுகிறது. உணவு அருந்த வருபவர்களிடம் செருப்பை வெளியே கழட்டிவிட வேண்டும் என்று சொல்லும்போது, யாரும் அதற்கு மறுப்பு தெரிவிப்பதில்லை. இங்கு சாதாரண ஏழை எளிய மக்கள், விவசாயிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், அதிகாரிகள் என பலரும் சாப்பிட வருவார்கள்" என்றார். 
 

கலப்படமில்லாத உணவுகள் சாப்பிட விரும்புபவர்கள் உளுந்தூர்பேட்டைக்கு வரும்போது ஒருமுறை சாப்பிட்டுத்தான் பாருங்களேன்.



 

Next Story

மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவி; எதிர்பாராத விதமாக நடந்த சோகம்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Airborne tragedy in gaza by america

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. 

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 57,614 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. அதனை அவரே செய்தி சேகரிப்பின் நேரலையில் கூறியது பலரையும் கலங்க வைத்தது. 

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்த போர் குறித்து ஐ.நா கூறுகையில், ‘இஸ்ரேல் - காசா இடையே நடைபெறும் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, பட்டினியால் ஏற்படும் உயிரிழப்புகள் நடப்பது கொடுமையாக இருக்கிறது. காசா பகுதியில் 4இல் ஒருவர் பசியால் வாடுகிறார்கள்’ என்று கூறி கவலை தெரிவித்தது. இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, காசா மக்களுக்கு வான்வழி உணவு மற்றும் உதவி பொருட்கள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. 

Airborne tragedy in gaza by america

அந்த வகையில், நேற்று (09-03-24) காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷாதி என்ற இடத்தில் உள்ள மக்களுக்கு பாராசூட் மூலம் உணவுப் பொருட்களை அமெரிக்கா விநியோகம் செய்து கொண்டிருந்தது. அப்போது, ஒரு பாராசூட் விரியாமல் திடீரென பழுதானது. இதனால் அந்த பாராசூட், உணவுப் பொருட்களுடன் மக்கள் கூடியிருந்த பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் பரிதாபமாக 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து காசா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து, காசா செய்தித் தொடர்புத்துறை கூறுகையில், ‘இந்த திட்டத்தை பற்றி முன்கூட்டியே எச்சரித்தும் அமெரிக்க அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகள் என்ற பெயரில் எங்கள் மக்களை மேலும் கொல்லாதீர்கள்’ என்று தெரிவித்துள்ளது. 

Next Story

சென்னை - புனே ரயில் பயணம்; 40 பயணிகளுக்கு உடல்நலக் குறைவு

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Chennai - Pune Train Travel; 40 passengers fell ill

 

சென்னை - புனே ரயிலில் பயணம் செய்த பயணிகளில் 40 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையிலிருந்து புனேவுக்கு பாரத் கவுரவ் என்ற சுற்றுலா ரயில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது ரயிலில் பயணித்த பயணிகளுக்கு ரயில்வே சார்பில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. அதன்படி ரயிலில் வழங்கப்பட்ட இரவு உணவை சாப்பிட்ட 40 பயணிகளுக்கு ஒரே நேரத்தில் ஒவ்வாமை பாதிப்பு காரணமாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

 

ஒரே நேரத்தில் 40 பேருக்கும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரயில் பூனே சென்றவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.