Skip to main content

“சாவு வீடுகளில் சங்கு ஊத மாட்டோம்!”-மாற்றத்தை நோக்கி மருத்துவர் சமுதாயம்!

Published on 23/09/2018 | Edited on 23/09/2018


நண்பர் ஒருவரின் தந்தை இறந்துவிட, நெல்லை மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் சென்றோம். இறப்புச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது, “சங்கு எங்கலே.. ஊதுலே..” என்று மருத்துவர் சமுதாயத்தைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியிடம் ‘சவுண்ட்’ விட்டார் ஒருவர். அதற்கு அவர் “செத்த வீட்டுல நாங்க இப்ப சங்கு ஊதுறது இல்ல..” என்று சொல்ல, வாக்குவாதம் ஆனது.  ஆனாலும், தான் சங்கு கொண்டு வரவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்த, ஆளாளுக்கு வசை பாடினார்கள். பலர் முன்னிலையில் அவர் கூனிக்குறுகி நின்றார். 

 

conch blow

 

பின்னுக்குத் தள்ளப்பட்டோம்!

காயம் ஏற்பட்ட பகுதியில் மருத்துவம் செய்யும்போது, அந்த இடத்தில் உள்ள மயிரை மழிக்க வேண்டும் என்பதால், அந்தக் காலத்தில் மருத்துவர்கள் அனைவரும் சவரம் செய்வதையும் தெரிந்து வைத்திருந்தனர். இத்தொழிலில் ஈடுபட்டு வந்த ஆண்கள் மருத்துவர்கள் என்றும் பெண்கள் மருத்துவச்சிகள் என்றும் அழைக்கப்பட்டனர். மருத்துவத்தை அந்தக்காலப் பெண்கள் வெகு சிறப்பாகப் பார்த்து வந்ததால், ‘பாட்டி வைத்தியம்’ என்ற சொல் இன்றுவரையிலும் பிரபலமாக விளங்குகிறது. பன்னிரண்டு நூற்றாண்டுக்கும் மேலாக, மருத்துவத் தொழிலைப் பார்த்துவந்த ஆதி மருத்துவர்கள், அரசாங்கத்தின் சட்டதிட்டம் காரணமாக, அத்தொழிலைத் தொடர முடியாமல் போனது. அதனால், மற்றொரு தொழிலான சவரத் தொழிலை வேறு வழியின்றி தொடர வேண்டியதாயிற்று.  

 

காலப்போக்கில், சவத்துக்கு சவரம் செய்வது, சவத்தைக் குளிப்பாட்டி விடுவது, சவ ஊர்வலத்தில் சங்கு ஊதுவது, சவ அடக்கத்தில் உதவுவது போன்றவை, மருத்துவ சமுதாயத்தினருக்கு ‘விதிக்கப்பட்ட’ சமூகக் கடமைகள் ஆயின.  அதனால்,  மரணச் சடங்குகளில் சங்கு ஊதும் நடைமுறை வந்தது.  இறந்தவர் வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைப்பதற்காக, மருத்துவ சமுதாயத்தினர் சங்கு ஊதினர். 

 

conch blow

 

ஊதி ஊதி உயிரைவிட்டோம்!

மரணச் சடங்குகளின்போது சங்கு ஊதாதற்கான காரணத்தை நம்மிடம் விளக்கினார் திருநெல்வேலி மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் முன்னாள் பொருளாளர் சந்திரன். 

“சாவு வீட்டில் எங்கள் சமுதாயத்தினரை “ஊது.. ஊது..” என்று ஆளாளுக்கு விரட்டுவார்கள். மூச்சை இழுத்து ஊத வேண்டும். அப்போதுதான் ஊதி முடித்திருப்போம். புதிதாக சாவு வீட்டுக்கு வருபவர் “என்ன சும்மா உட்கார்ந்திருக்க.. ஊது.. இன்னும் நெறய ஆளுங்க வரணும்.” என்பார். நாங்களும் ஊதுவோம். ஆனாலும், தம் கட்டி சங்கு ஊதும் எங்களை இளைப்பாற விடாமல், ஆளாளுக்குத் தொந்தரவு தந்தபடியே இருப்பார்கள்.  “மேலே இருக்கிற சிவனுக்கு நீ ஊதுற சங்கு சத்தம் கேட்கணும். அப்பத்தான், செத்தவருக்கு மோட்சம் கிடைக்கும்.” என்று இஷ்டத்துக்குப் பேசுவார்கள்.  இப்படித்தான்,  இங்கே தென்காசி பக்கத்தில் காசிமேஜர்புரத்தில் ஒரு இழவு வீட்டில், மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவரை விடாமல் ஊதச் சொன்னார்கள். அவர் சங்கு ஊதும்போதே மயங்கி விழுந்து இறந்துபோனார். இது நடந்து ஒரு வருடமாகிவிட்டது. அன்றிலிருந்து, சாவு வீட்டில் நாங்கள் யாரும்  சங்கு ஊதுவதில்லை. சங்கமே போட்ட தீர்மானம் இது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மருத்துவ சமுதாயத்தினருக்குத்தான் இந்தக் கட்டுப்பாடு. மற்ற மாவட்டங்களிலும் பெரும்பாலான ஊர்களில், இப்போது  சங்கு ஊதும் வழக்கம் இல்லாமல் போய்விட்டது. 

 

conch blow

 

சங்கு ஊத தெம்பு இல்லை! 

கோவில்களிலும் சங்கு ஊதுகின்றனர். சங்கு ஊதுவது சுப சகுனமாகவே பார்க்கப்படுகிறது. சங்கு ஊதுவதால், உடலுக்கு ஏழுவிதமான நன்மைகள் கிடைக்கின்றன.  “தினமும் இரண்டு நிமிடம் சங்கு ஊதினால், எல்லா நோய்களும் நம்மை விட்டு ஓடிப்போய்விடும்.” என்று இந்திய அறிவியல் மாநாட்டிலேயே பேசினார்கள். ஆனாலும், புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற தீய பழக்கங்களால், பலரும் உடலைக் கெடுத்து வைத்திருக்கின்றனர். அதனால், முன்னோர்கள் அளவுக்கு சங்கு ஊதும் ஆரோக்கியம் இன்றைய தலைமுறையினரிடம் இல்லை. சாவு வீடுகளில் சங்கு ஊத வற்புறுத்தும்போது, கட்டாயத்தின் பேரில் ஊதி, மாரடைப்பு ஏற்பட்டு அவர்கள் உயிரை விட நேரிடுகிறது. 

 

conch blow

 

மாறிவரும் நடைமுறை!

“மருத்துவ சமுதாயத்தினர் என்னென்ன செய்ய வேண்டியிருந்தது தெரியுமா?” என்று அச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் உடைந்த குரலில் பேசினார். “பூப்பு எய்தும் சடங்கு, சாவு போன்றவற்றை ஊர் மக்களிடம் போய்ச் சொல்ல வேண்டும்.  பூப்பெய்திய பெண்ணைக் குளிப்பாட்ட வேண்டும். மகப்பேறு சமயங்களில் பெண்களுக்கு உதவ வேண்டும். எல்லாவற்றையும்விட கொடுமையானது மாப்பிள்ளைச் சவரம் என்ற வழக்கம். திருமணத்துக்கு முதல்நாள், மணமகனின் பிறப்பு உறுப்பு பகுதியில் முடி நீக்க வேண்டும். அப்போது, மணமகனுக்கு ஆண்மை தொடர்புள்ள நோய் எதுவும் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து பெண் வீட்டாரிடம் சொல்ல வேண்டும். ஆண், பெண் இருபாலருக்கும் மாதம் ஒருமுறை மறைவிட மழித்தல் என்ற பழக்கமும் இருந்து வந்தது. எங்களை இழிவுபடுத்திய பழைய நடைமுறை பலவும் இப்போது இல்லை.” என்று பெருமூச்சு விட்டார். 

 

ஆணோ, பெண்ணோ,  தன் உடலைத் தொட அனுமதிப்பது டாக்டரையும், சவரத் தொழிலாளியையும்தான். இச்சேவை இரண்டையும் ஒருகாலத்தில் மருத்துவ சமுதாயத்தினரே செய்து வந்தனர். நோயிலிருந்து நம் முன்னோர்களைக் காத்த அச்சமுதாய மக்களை, மரியாதையுடன் அணுகுவதே, நாம் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும். 

Next Story

‘தமிழர்கள் பயன்படுத்திய எழுத்தாணிகளும்; அதன் வகைமைகளும்’ - முனைவர் சு. தாமரைப்பாண்டியன் 

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

தமிழர்கள் தங்களின் தொன்மையான அறிவு மரபுகளைப் பல்வேறு எழுதப்படு பொருள்களில் எழுதி வைத்துப் பாதுகாத்து வந்துள்ளனர். தமிழர்கள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், யானைத் தந்தம், செம்பு, வெள்ளி, தங்கம், கல் முதலியவற்றில் தங்கள் பண்பாட்டையும், வரலாற்றையும் எழுதி வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். இதில் ஓலையில் எழுதி வைக்கும் வழக்கம் மிகுதியாக இருந்துள்ளது. ஓலையில் எழுத எழுதுபொருளாக எழுத்தாணியை தமிழர்கள் மிக நீண்ட காலம் பயன்படுத்தி வந்துள்ளனர். தமிழர்கள் ஓலையில் எழுத இரும்பு, வெள்ளி, தங்கம் முதலியவற்றால் ஆன எழுத்தாணிகளைப் பயன்படுத்தியுள்ளனர். 

 

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க முதன்மையான ஓலைச்சுவடி அறிஞராகத் திகழ்ந்து வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் ஓலைச்சுவடிகளைத் தேடித் தொகுக்கும் பணியில் ஈடுபட்டபொழுது சில அரிய எழுத்தாணிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

அது குறித்து அவர் கூறியதாவது: தமிழர்களின் அறிவுசார் கண்டடைவுகள் பெரும்பாலும் ஓலையிலேயே எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஓலையில் எழுதும் மரபு சங்க காலத்திலேயே இருந்துள்ளது. தூது சென்ற பார்ப்பான் ஒருவன் கையில் எழுதுவதற்கு பயன்படுத்தும் வெள்ளோலையினை வைத்திருந்ததாக அகநானூறு (பா. 337:7 - 8 ) குறிப்பிடுகிறது. இதன் மூலம் ஓலை மிக நீண்ட காலத்திற்கு முன்பே எழுதப்படு பொருளாக இருந்து வந்துள்ளது புலனாகிறது.

 

மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெருங்கதை, தமிழ் விடு தூது முதலிய பல நூல்களில் ஓலையில் தமிழர்கள் எழுதி வந்தது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எழுதப்பட்ட ஓலைகளின் தொகுப்பு ஓலைச்சுவடி என்று அழைக்கப்பட்டது. ஓலைகள் அதன் எழுதப்படு பொருண்மை அடிப்படையிலும், எழுதப்படு பொருள் அடிப்படையிலும் மந்திர ஓலை, சபையோலை, அறையோலை, இறையோலை, தூது ஓலை, பட்டோலை, ஆவண ஓலை, வெள்ளோலை, பொன்னோலை, படியோலை என்று பலவாறு அழைக்கப்பட்டன. ஓலைகள் பாதுகாக்கும் இடம் ஆவணக் களரி என்று அழைக்கப்பட்டன.

 

தமிழர்கள் தங்கள் அறிவு மரபுகளை ஓலையில் எழுத எழுத்தாணிகளைப் பயன்படுத்தினர். எழுத்தாணி கொண்டு ஓலையில் எழுதுதல் என்பது சிரமமான காரியம் ஆகும். இதனை, ‘ஏடு கிழியாதா எழுத்தாணி ஒடியாதா / வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா’ எனும் பாடல் வரிகள் தெளிவாகச் சுட்டுகின்றன.

 

எழுத்தாணி மிக நீண்ட காலமாக தமிழர்களிடம் வழக்கில் இருந்து வந்துள்ளது. பொன்னால் செய்த எழுத்தாணி இருந்தமையினை சீவக சிந்தாமணி நூல் வழி அறிய முடிகிறது. எழுத்தாணிகளை தமிழறிஞர்கள் தேடி அலைந்தமையினை ‘ஓலை தேடி எழுத்தாணி தேடி’ என்ற தனிப்பாடல் தெளிவாகக் குறிப்பிடுகிறது. எழுத்தாணியானது அதன் பயன்பாட்டு அடிப்படையில் மூன்று வித அமைப்பாக  உள்ளமையினை அறிய முடிகின்றது.

 

குண்டெழுத்தாணி


 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

அதிக நீளம் இல்லாமல் எழுத்தாணியின் கொண்டைப் பகுதி கனமாகவும் குண்டாகவும் அமைந்து காணப்படும் எழுத்தாணி குண்டெழுத்தாணி எனப்படும். குண்டெழுத்தாணியின் முனைப் பகுதியின் கூர்மை குறைவாகக் காணப்படும். குழந்தைகள் எண்ணும் எழுத்தும் எழுதிப் பழக குண்டெழுத்தாணியைப் பயன்படுத்துவார்கள். எழுத்துகள் பெரிதாக இருக்கும்.

 

கூரெழுத்தாணி


எழுத்தாணியின் முனைப்பகுதி கூர்மையாக இருக்கும். இவ்வெழுத்தாணியினை நன்கு கற்றுத் தேர்ந்த கல்வியாளர்கள் பயன்படுத்துவர். எழுத்துகள் சிறியதாக இருக்கும். ஓலையின் ஒரு பத்தியில் 18 வரிகள் வரை எழுதுவதற்குரியதாக அமைந்திருக்கும்.

 

வாரெழுத்தாணி

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

இவ்வெழுத்தாணி சற்று நீளமாக இருக்கும். எழுத்தாணியின் மேற்பகுதியியில் கொண்டைக்குப் பதிலாகச் சிறிய கத்தி அமைந்திருக்கும். கீழ்ப் பகுதியில் கூர்மையானதாக எழுதும் பகுதி அமைந்து காணப்படும். எழுத்தாணியின் ஒரு பகுதியில் உள்ள கத்தி ஓலையை வாருவதற்குப் பயன்படும். அதனால் இவ்வெழுத்தாணி வாரெழுத்தாணி என்று அழைப்படுகிறது.

 

மடக்கெழுத்தாணி


ஒரு முனையில் கத்தியும் மறுமுனையில் எழுதவும் பயன்படும் வாரெழுத்தாணியின் இரு முனைகளையும் மடக்கி ஒரு மரத்தாலான கைப்பிடிக்குள் அடக்கி வைத்துக் கொள்ளும் தன்மையிலான எழுத்தாணி மடக்கெழுத்தாணி எனப்படுகிறது. எழுத்தாணி மடக்கி வைக்கப்படுவதால் எழுத்தாணியின் கூர்மையான பகுதி மற்றும் கத்தியினால் ஏற்படும் எதிர்பாராத இன்னலைத் தடுக்க உதவுகிறது.

 

தமிழர்கள் வெட்டெழுத்தாணிகளையே அதிகம் பயன்படுத்தியதாக அறிய முடிகிறது. தமிழர்களின் இத்தகைய அறிவு தொழில்நுட்பக் கருவியான எழுத்தாணிகளைத் திரட்டிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நெல்லை மற்றும் குமரி மாவட்டப் பகுதிகளில் கள ஆய்வு செய்தபொழுது இராமலிங்கம், கணேசன் ஆகியோரிடம் இருந்த பழமையான கூரெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை வெண்கலம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்டவை ஆகும் என்றார்.

 

 

Next Story

"தமிழக கலாச்சாரம் ஒரு ஆன்மீக கலாச்சாரம்" - ஆளுநர் தமிழிசை

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

governor tamilisai talks about tamilnadu culture spiritual culture

 

வேலூர் நாராயணி தங்க கோவில் வளாகத்தில் 31 ஆம் ஆண்டு விழா இன்று (08.05.2023) நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க 10008 மஞ்சள் குட நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த விழாவில் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "ஆன்மீகத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது. இந்த இரண்டும் தான் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் சிலர் ஆன்மீகத்தை தவிர்த்து தமிழ் தான் அனைத்திற்கும் என்று சமீப காலமாக கூறி வருகிறார்கள். அது ஏற்புடையதல்ல. கொரோனா காலத்தில் தடுப்பூசி போடுவதற்கு அந்த அளவிற்கு நாங்கள் முயற்சி செய்தோம். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உலக சுகாதார நிறுவனம் கொரோனா இல்லாத காலமாக அறிவித்துள்ளது. இதற்கு நமது ஆன்மீகமும் அறிவியலும் காரணமாகும்.

 

இந்தியா எடுத்த உறுதியான முடிவினால் 45 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்பட்டனர். இதற்கு தடுப்பூசியும் இறைவனின் அருளும்தான் காரணமாகும். இவை இரண்டும் சேர்ந்தால் தான் வாழ்க்கையில் சந்தோஷத்தை காண முடியும். அதை நான் முழுமையாக நம்புகிறேன். ஆன்மீகமும் தமிழும் ஒன்றுதான். ஆன்மீகத்தோடு கூடிய தமிழ் தான் தமிழகத்திற்கு வளர்ச்சியை தரும். தமிழக கலாச்சாரம் ஒரு ஆன்மீக கலாச்சாரம். தமிழக முதல்வர் இந்துக்களின்  விநாயகர் சதுர்த்தி, தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை. ஆனால் நான் பாகுபாடு பார்ப்பவன் இல்லை என முதல்வர் சொல்கிறார். ஆனால் இவர் இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாதது குறித்து நான் கேட்டிருந்தேன். இதுவரையில் எனக்கு பதில் இல்லை.

 

ஆளுநர்கள் குறித்து தவறான கருத்துகளை கூறுகிறார்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அதிகாரங்கள் உள்ளது. அதே போல் ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் சில அதிகாரங்கள் அவர்களுக்கு உள்ளது. ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஏன் ஆளுநரை சந்தித்தார்கள். எல்லோரையும் மரியாதையுடன் பேச வேண்டும். ஆளுநர்களுக்கு அதிகாரமில்லை என புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் கூறி வருகிறார். அதே போல் நான் புதுவையில் அதிக நாள் தங்கியிருப்பதாக நாராயணசாமி கூறுகிறார்.

 

உண்டியல் குலுக்கி புதுவைக்கும் ஹைதராபாத்திற்கும் விமானம் ஏற்பாடு செய்வதாக கூறுகிறார். அவர் உண்டியல் குலுக்க தேவையில்லை சேர்த்து வைத்திருந்த பணத்திலேயே அவர் ஏற்பாடு செய்யலாம். பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி மக்களும் ஹைதராபாத் மக்களும் வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமான சேவையை துவக்கி வைத்தார். உங்களைப் போல நாங்கள் தனி விமானத்தில் செல்லவில்லை. மக்களோடு மக்களாகத்தான் நாங்கள் செல்கிறோம். ஏற்கனவே புதுவைக்கும் ஹைதராபாத்திற்கும் நேரடி விமான சேவை உள்ளது. இது கூட தெரியாமல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகிறார். புதுவையில் முதலமைச்சராக  நாராயணசாமி இருந்தபோது அவர் மக்களுக்கு என்ன செய்தார் என்று எங்களுக்கு தெரியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே நாராயணசாமி ராஜ்யசபா எம்பி ஆக இருந்தார் என்பதும் எங்களுக்கு தெரியும். அதனால் எல்லோரையும் குறை சொல்ல வேண்டாம்" என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.