Skip to main content

நம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்! 

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

மத்திய மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தேசம் முழுவதும் முஸ்லிம்களின் போராட்டம் வலுத்து வருகிறது. முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் கடந்த 60 நாட்களாக தொடர்ந்து நடத்திவரும் போராட்டம் வலிமையடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் ஒரு ஷாஹின்பாக்காக உருவாகியிருக்கிறது வண்ணாரப்பேட்டை.
 

admk



போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தடியடி குறித்தும், தேசிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் பிரச்சனைகளை எழுப்பும் என்பதை அறிந்து, உள்துறை செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி. திரிபாதி, உளவுத் துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் தீவிர ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனையடுத்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் பலரையும் அழைத்து விவாதித்தார் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். இதனைத் தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகள் தயாரித்த நீண்ட நெடிய ஒரு அறிக்கை எடப்பாடியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
 

admk



எடப்பாடி எதிர்பார்த்தது போலவே வண்ணாரப் பேட்டை போராட்டம், தேசிய குடியுரிமைச் சட்டம் குறித்து விவாதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றவும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரியும் சட்ட மன்றத்தில் பிரச்சனையை எழுப்பினர். ஆனால், வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து பேச அனுமதி தந்த சபாநாயகர் தனபால், குடியுரிமைச் சட்டம் குறித்து விவாதிக்கவோ தீர்மானம் நிறைவேற்றவோ அனுமதிக்க மறுத்துவிட்டார். இந்தச் சூழலில், வண்ணாரப் பேட்டை போராட்டம் குறித்து எடப்பாடி விளக்கமளிக்க, அதில் திருப்தியில்லை என சொல்லி சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும் வெளியேறின. அதேபோல, எடப்பாடியின் விளக்கத்தை முஸ்லிம் கட்சிகளும் அமைப்புகளும் ஏற்க மறுத்ததால் போராட்டங்கள் பல இடங்களிலும் வலிமையடைந்து வருகிறது.


14-ந் தேதி வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களையடுத்து கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை அழைத்து விவாதித்தார் எடப்பாடி. அப்போது போராட் டத்தில் நடந்தவற்றை விவரித்த கமிஷனரிடம், "போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள்' என உத்தரவிட்டார் எடப்பாடி.

இதனைத் தொடர்ந்து, ஜமாத் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க., பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இண்டியா, எஸ்.டி.பி.ஐ., பள்ளிவாசல்கள் கூட்டமைப்பு, ஐ.என்.டி.கே., ஜமாத் இஸ்லாமிக் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களையும் முக்கிய பிரதிநிதிகளையும் அழைத்து விவாதித்தார் கமிஷனர் விஸ்வநாதன்.

அந்த விவாதத்தில், "முஸ்லிம்களின் போராட்டம் எதுவாக இருந்தாலும் அதற்கு தடையின்றி அனுமதி தந்து வருகிறது போலீஸ். மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுகிறீர்கள். உங்களுக்கு எந்த பிரச்சனையும் போலீஸாரால் வந்ததில்லை. ஆனால், வண்ணாரப் பேட்டை போராட்டத்தில் போராட்டக்காரர்கள் தரப்பிலிருந்து பாட்டில்களும் கற்களும் வீசப்பட்ட நிலையிலும் போலீஸார் ஆவேசம் காட்டவில்லை. போலீஸார் ஏற்படுத்திய தடுப்புகளை உடைத்தெறிந்து போராட்டத்திலிருந்தவர்கள் முன்னேற நினைத்தபோதுதான் அவர்களை போலீஸார் தடுத்தனர். இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என இயல்பாக பேசினார் கமிஷனர்.


அப்போது, பேசிய முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் பல விசயங்களை வலியுறுத்தினர். அந்த ஆலோசனை குறித்து, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவிடம் நாம் விசாரித்தபோது, ‘மக்களுக்கு இருக்கும் ஒரே உரிமை தேசிய குடியுரிமைதான். அதையும் பறிக்கிற விதத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டதில் இருக்கும் சந்தேகங்கள் பற்றி அழுத்தமான அச்சம் மக்களிடம் இருக்கிறது. அந்த அச்சம் நியாயமானது. காரணம், அசாமில் நடந்தது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. அதை இந்தியா முழுக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா அமல்படுத்த நினைக்கிறார். இப்படியான சூழலில் தான், போராட்டங்களுக்கு தன்னெழுச்சியாகத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் மக்கள்.

டெல்லி ஷாஹின்பாக்கில் 60 நாட்களாக போராட்டம் நடக்கிறது. இந்தியாவில் 303 இடங் களிலும், அதில் 147 இடங்களில் ஷாஹின்பாக் போல இடைவிடாமலும் போராட்டங்கள் நடக்கின்றன. அப்படியிருக்கும்போது சென்னையில் மட்டும் ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள்?

ஒரு போராட்ட களத்தை தந்திருந்தால் வண்ணாரப்பேட்டை வன்முறை வந்திருக்காது. அதற்கு மாறாக, மக்கள் மீது மோசமாக தாக்கு தலை பிரயோகித்திருக்கிறார்கள். சென்னையை கலவர பூமியாக்கிவிட்டீர்கள். இதெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என எல்லோரும் ஒருமித்த குரலில் கேட்டோம்.

அதற்கு, "உங்களின் உணர்வுகளையும் நியாயங்களையும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த போராட்டத்தை எப்போது முடித்துக்கொள்வதாக இருக்கிறீர்கள்?' என கமிஷனர் கேள்வி கேட்க, "போராட்டம் முடிவது அரசு கையில்தான் இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி 10-ந்தேதி முதல்வரை சந்தித்து பிரச்சனையின் வீரியத்தை விரிவாக விவரித்திருக்கிறோம். அப்போதே இதில் சீரியஸ் காட்டியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.

கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. தமிழக அரசு மறுக்கிறது. குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தும் வகையில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றணும், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நிறுத்தணும். இதெல்லாம் நடந்தால்தான் போராட்டம் ஒரு முடிவுக்கு வரும். இல்லையெனில் மக்களை அமைதிப்படுத்த யாராலும் முடியாது' என எல்லோருமே வலியுறுத்தினோம். இதனை உன்னிப்பாக கவனித்த கமிஷனர், "உங்களின் உணர்வுகளை முதல்வரிடம் தெரிவிக்கிறேன்' என்பதோடு முடித்துக்கொண்டார்'' என்கிறார் ஜவாஹிருல்லா.

இந்த நிலையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் எடப்பாடி நடத்திய ஆலோசனை குறித்து விசாரித்தபோது, "நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை வாபஸ் பெற முடியாது என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்து மேற்கொண்டு விவாதிக்கவே முடியாது. அந்த சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் நாம் வாக்களித்திருப்பதால் எதிர்க்கவும் முடியவில்லை'' என எடப்பாடி சொல்ல, "குடியுரிமைச் சட்டம் மட்டுமே அவர்களுக்கு பிரச்சனை இல்லை. அந்த சட்டத்தின் ஒரு பகுதியாக குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் செயல்படுத்த நாம் துவங்குவதால்தான் பிரச்சினை' என அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்.

அப்போது, "இதுகுறித்து தெளிவான விளக்கம் கொடுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். அது வந்ததும் தெளிவுபடுத்தலாம். எது எப்படி இருப்பினும், சட்டம்- ஒழுங்குக்கு பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எப்போது, எதில் நான் சறுக்குவேன் என தி.மு.க. எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அதற்கு இடம் கொடுத்துவிடாதீர்கள்' என அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய எடப்பாடி, "குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானமெல்லாம் நிறைவேற்ற முடியாது. என்ன செய்யலாம் என மீண்டும் விவாதிப்போம். வண்ணாரப்பேட்டையில் நடந்தது குறித்து முழுமையான ரிப்போர்ட் கொடுங்கள்' என கேட்டு வாங்கி, அந்த ரிப்போர்ட்டைத்தான் பேரவையில் வாசித்தார் எடப்பாடி'' என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.

மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தன்னை மாற்றிக்கொள்ள எடப்பாடி தயாராக இல்லாத நிலையில், முஸ்லிம்களின் போராட்டமும் வீரியமடைந்து வருகின்றது. அதேசமயம், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் சட்டம்- ஒழுங்கிற்கும் பிரச்சினை உருவானால் தயவுதாட்சண்யமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வழிகளை ஆராயுங்கள் என டெல்லியிலிருந்து வந்த உத்தரவை காவல்துறை அதிகாரிகளுக்கு பாஸ் செய்திருக்கிறது எடப்பாடி அரசு.

 

 

The Newstuff



 

 

Next Story

தமிழக பா.ஜ.க.வினருக்கு பிரதமர் மோடி பாராட்டு! 

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Prime Minister Modi praises Tamil Nadu BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் இந்த மக்களவை தேர்தலில் திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அ.ம.மு.க. பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

இந்நிலையில் பிரதமர் மோடி நமோ செயலி (NAMO APP) மூலம் ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பாஜகவின் அனைத்துத் தொண்டர்களும் மிக நீண்ட காலமாக நன்றாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். ‘எனது பூத், வலிமையன பூத்’ என்றால் எனது வாக்குச் சாவடி வலிமையானது என்று பொருள். இந்த திட்டம் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களையும் இணைப்பதுடன் ஒருவருக்கொருவரும் கற்றுக்கொள்ள உதவும்.

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் வணக்கத்தோடு பேசத் தொடங்குகிறேன், ஆனால் இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஒரு தொண்டர் மற்றொரு தொண்டரை வாழ்த்துகிறார். வணக்கம் என்றவுடன், தொண்டர்களுக்குள் ஒரு உணர்வு வரும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பள்ளி நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம், 25, 30 வருடங்கள் கடந்தாலும், சிறியவர், பெரியவர் என்று யாரும்  பாராமல் ஒருவரை ஒருவர்  மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார்கள். அதேபோல், இது தேர்தல் பணி தொடர்பான ஒரு திட்டம் என்பதால் நானும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறேன். உங்கள் எல்லோரையும் போல என் வாழ்வின் பெரும்பகுதியை ஒரு தொண்டனாகவே உழைத்திருக்கிறேன், அதனால்தான் இன்று நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருவதால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகளுக்காக கடந்த முறை தமிழகம் வந்தபோது தமிழக மக்களின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொண்டர்களின் கடின உழைப்பைப் பார்க்க முடிந்தது, அப்படிப்பட்ட தொண்டர்களைப் பெற்றதை பெருமையாக உணர்ந்தேன். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்மாதிரியாக கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதும், அதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதும் எங்களது உறுதி. பா.ஜ.க.வின் பெண் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

போதைப்பொருட்கள் நம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள் பதுக்கல்களும், அதற்கு முக்கிய காரணமானவர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே நீங்கள் அனைவரும் நம் குடும்பங்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” எனப் பேசினார். 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.