Skip to main content

நாங்களும் இலங்கை மக்கள்தானே…ஈழப்போர் கொடுமைகள்!

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

ஈழப்போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்த 2009-ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவம் முள்ளிவாய்க்காலை மையமிட்டிருந்தது. முல்லைத்தீவின் மிகக்குறுகிய அந்தப் பிரதேசத்தின் அதிலும் குறுகிய பகுதியில் குவிந்திருந்த மக்களைக் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி கொன்று குவித்தது. ஏறக்குறைய 70 ஆயிரம் பேர் கொல்லப்பட... சரணடைந்த பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

 

srilnkan



இந்த இனப்படுகொலை நடந்துமுடிந்து பத்தாண்டுகள் கடந்தும், ஈழப்போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்காக "மே 18'-ஐ வெற்றிநாளாகக் கொண்டாடும் இலங்கை அரசு, தமிழ் மக்கள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது ஒவ்வொரு ஆண்டும். இந்தாண்டு, ஏப்ரல் 21-ல் ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கை தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் காரணம்காட்டி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தவிடாமல் செய்கிறது அரசு நிர்வாகம். 

 

srilankan people



இது ஒருபுறமிருக்க, தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்காக, வடமேற்குப் பகுதியிலுள்ள குலியப்பிட்டியா, ஹெட்டிபோலா, பிங்கிரியா மற்றும் டும்மாளசூரியா ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீதான பகுதிகள் மீது கொடூரத் தாக்குதல்கள் அரங்கேறின. மசூதிகள், வீடுகள், கடைகள் என இஸ்லாமியர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதில் இருவர் கொல்லப்பட்டனர். இதனால், அரையுத்தக் களம்போல் காட்சியளிக்கும் இலங்கையின் பதற்றத்தை ஜிகாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில், தமிழர்களுக்கு எதிராக திசைதிருப்பி விட்டிருக்கிறது இலங்கை அரசு. 

 

 

srilankan issues



பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை மக்களோடு சேர்ந்து நடத்திவரும் சமூக சிற்பிகள் அமைப்பின் அமைப்பாளர் முல்லைத்தீவைச் சேர்ந்த ஷெரீன் சேவியரிடம் பேசியபோது, "குண்டு வெடித்த கொழும்பு மாகாணத்தைவிட அதிகப்படியான சோதனைச்சாவடிகள் தமிழர்கள் வசிக்கும் வடக்குப்பகுதியில் இருக்கின்றன. ஆயிரம் கேள்விகளைக் கேட்டபின்பே அனுமதிக்கின்றனர் இராணுவத்தினர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் படமும், புலிகளின் பதாகைகளும் கண்டெடுக்கப்பட்டதால், மாணவர் தலைவரும், செயலாளரும் கைது செய்யப்பட்டனர். அதனூடாகவே இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்தப்படம் பல ஆண்டுகளாக அங்குதான் இருந்தது. இதற்குமுன் இராணுவத் தளபதிகள் வெளியிட்ட புத்தகங்களில்கூட பிரபாகரன் படம் இடம்பெறத்தான் செய்தது. ஒடுக்குவது ஒன்றே அவர்களின் குறிக்கோள். நாங்கள் மே 12-ல் தொடங்கி நினைவேந்தல் நிகழ்ச்சிகளை வீடுகளிலும், கோவில்களிலும் நடத்திவருகிறோம். மே 17-ஆம் தேதியோடு முடித்துக்கொள்வோம் என்றார் அவர்.


முள்ளிவாய்க்கால் துயரத்தை நேரில்கண்ட சிவகுமார் மலர்ச்செல்வி, தமிழ் மக்களின் நியாபகங்களையும், தியாகங்களையும் இலங்கை அரசு மட்டுப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து நாங்கள் மாறோணுமென்று நன்மைகள் செய்து நாங்கள் மாறப்படயில்லை. இழந்த உறவுகளை நினைவுகளை நினைவுகூருவது எங்கள் உரிமை. ஆனால், எங்கள் விருப்பத்தைக்கூட வெளிப்படுத்த முடியாத நிலையில் கோவில்களில் நினைவேந்தலை நடத்துகிறோம். நாங்களும் இலங்கை மக்கள்தானே''…என்றார் ஆதங்கத்துடன். 
 

 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.