Skip to main content

’’விடிய விடிய காத்துக்கிடந்தோம்...!’’ -தமிழகமெங்கும் தவிப்பு!

Published on 18/08/2019 | Edited on 18/08/2019

அருப்புக்கோட்டையில் எங்கெங்கும் வாடிப்போன முகங்களாகவே தென்பட்டன. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் எனப் பலரும்,  சைக்கிளிலும் கால்நடையாகவும், தண்ணீர் கிடைக்கும் இடம் தேடி, காலிக்குடங்களோடு அலைந்தவண்ணம் இருந்தனர். 

 

water


இப்படியே போச்சுன்னா சாக வேண்டியதுதான்!

குடிநீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென்று அருப்புக்கோட்டை நகராட்சி அறிவிப்பு செய்திருந்த  சொக்கலிங்கபுரம் குடிநீர் மேல்நிலைத் தொட்டியின் கீழ் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த நாகராஜன் “இந்த ஊருல இப்ப தண்ணீர்ப் பஞ்சம் மக்களை ஆட்டி வைக்குது.  இப்படியே போச்சுன்னா.. அடுத்து சாப்பாட்டுக்கும் பஞ்சம் வந்து மக்கள் சாக வேண்டியதுதான்.” என்று தான் வாழும் ஊரின் உயிர்ப் பிரச்சனையாக தண்ணீர் பற்றாக்குறை ஆகிவிட்டதை வேதனையுடன் சொன்னார்.    

 

 Water shortage in Aruppukkottai


“உடம்பெல்லாம் அப்படி ஒரு அரிப்பு. நாங்கள்லாம் குளிச்சு எத்தனை நாளாச்சு தெரியுமா?” நத்தலிங்கம் தெருவில் வசிக்கும் வீரலட்சுமி உள்ளிட்ட பெண்கள் கேட்ட இந்தக்கேள்வி, அம்மக்களின் பரிதாப நிலையை உணர்த்தியது. “உப்புத் தண்ணிக்கே மாசம் ஆயிரம் ரூபாய் செலவழிக்கிற நிலைக்கு எங்களைக் கொண்டுவந்து விட்ருச்சு இந்த அரசாங்கம். குழாய்ல தண்ணி வரும்னு நேத்து விடிய விடிய காத்துக் கிடந்தோம். வரவே இல்ல. இன்னிக்கும் தூக்கம் போயிரும். தண்ணி பிடிக்கிறதுக்கே எங்க நேரத்தையெல்லாம் செலவழிச்சிட்டா..  பிழைக்கிறதுக்கு உழைக்கிறதுக்கு எங்கே நேரம் இருக்கு? இந்தமாதிரி ஒரு கொடுமை இதுவரைக்கும் வந்ததில்ல.” என்று தலையில் அடித்துக்கொண்டார்கள். 

 

 Water shortage in Aruppukkottai


“நாங்க இருக்கிறது நாலாவது வார்டு. எங்க ஏரியாவுக்குத் தண்ணி விட்டு 25 நாளாச்சு. பாருங்க.. தண்டவாளத்தைத் தாண்டி, தண்ணி பிடிக்கிறதுக்காக இம்புட்டு தூரம் வந்திருக்கேன். தாமிரபரணில தண்ணி ஓடுதுங்கிறாங்க. ஆனா.. அந்தத் திட்டத்துல எங்க ஊருக்கு மட்டும் ஏன் தண்ணி வராம இருக்கு? அருப்புக்கோட்டை நகராட்சி சுத்த மோசம். அதிகாரிங்க கண்ணுக்கு முன்னாலதான  தண்ணிக்காக மக்கள் இம்புட்டு அவதிப்படறோம். எங்கிட்டு எவ்வளவு கிடைக்கும்னு அவங்களுக்கு அவங்க தேவைதான் பெரிசா இருக்கு. அடிச்சிப் பிடிச்சு வரி வாங்குற நகராட்சி மக்களின் துயரத்தை ஒரு பொருட்டாவே நினைக்கிறதில்ல.” என்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார்.  

 

 Water shortage in Aruppukkottai


வேகவேகமாக சைக்கிள் மிதித்து வந்த ராகசுதாவை,  ரயில்வே பீடர் ரோட்டிலுள்ள தலைமை குடிநீர் மேல்நிலைத் தொட்டியின் கீழ் நின்ற நகராட்சி லாரியில் தண்ணீர் பிடிக்க விடவில்லை. “எங்க வீட்ல மொத்தம் 8 பேர். ஒரு நாளைக்கு மூணு குடம்தான்னு விரட்டுறீங்களே?.” என்று அங்கு நியாயம் கேட்க, தன்னை எம்.எல்.ஏ. ஆக்கிய  அருப்புக்கோட்டை தொகுதி மக்களின் தண்ணீர் தேவைக்கு,  கே.கே.எஸ்.எஸ்.ஆர். என்ன செய்தார்? என்ற கேள்வி எழுந்தது. 

 

 Water shortage in Aruppukkottai

 

அருப்புக்கோட்டை மட்டுமல்ல. விருதுநகர் மாவட்டம் முழுவதுமே தண்ணீர்ப் பற்றாக்குறையால் அல்லாடுகிறது என அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர். தலைமையில், தங்களின் திருச்சுழி, விருதுநகர், ராஜபாளையம் தொகுதிகளுக்காக, எம்.எல்.ஏ.க்கள் தங்கம் தென்னரசு, சீனிவாசன், தங்கப்பாண்டியன் ஆகியோர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானத்திடம் மனு அளித்தனர். கே.கே.எஸ்.எஸ்.ஆரோ, நகராட்சி அதிகாரிகளோடு கலந்தாலோசித்துவிட்டு, அருப்புக்கோட்டை தொகுதி முழுவதும், சொந்த செலவில் லாரிகள் மற்றும் டிராக்டர்களில்  தன் பெயரைப் பொறித்து குடிநீர் விநியோகம் செய்துவருகிறார்.   ஆனாலும், யானைப் பசிக்கு சோளப்பொரி போல, குடும்பத்துக்கு மூன்று குடம் தண்ணீர் என்பது எப்படி போதுமானதாகும்? அதனால்தான், அருப்புக்கோட்டையில் தண்ணீர்ப் பிரச்சனை இன்னும் தலைவிரித்தாடுகிறது. 

அருப்புக்கோட்டை நகராட்சி என்னதான் செய்கிறது?  

 

 Water shortage in Aruppukkottai


தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 35 லட்சம் லிட்டர் தண்ணீரும்,  வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 23 லட்சம் லிட்டர் தண்ணீரும் அருப்புக்கோட்டைக்கு கிடைத்து வந்தது. தற்போது, வைகைக் குடிநீர் அடியோடு வருவதில்லை. தாமிரபரணி குடிநீரும் குறைந்த அளவிலேயே திறந்துவிடப்படுகிறது., அருப்புக்கோட்டையில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென்றால், 60 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவையாக உள்ளது. தாமிரபரணி குடிநீர் வருவது வெகுவாகக் குறைந்துவிட்டதால், ஒரு பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை என்றும், இன்னொரு பகுதியில் 20 நாட்களுக்கு ஒருமுறை என்றும் குடிநீர் விநியோகம் சீரற்று போய்விட்டது.
 

water

 

ரயில்வே பீடர் ரோட்டிலுள்ள அருப்புக்கோட்டை நகராட்சி தலைமைக் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் ஏற்றப்படும் குடிநீரானது கடைசிப் பகுதியான தெற்குத் தெருவுக்கு வந்து சேர்வதற்குள், இடையிலுள்ள நெசவாளர் காலனி, முஸ்லீம் தெரு, மணி நகர் போன்ற ஏரியாக்கள் தண்ணீரைப் பிடித்துவிடுகின்றன. அதனால், போய்ச்சேர வேண்டிய பகுதிகளுக்கு முழுமையாகப் போவது தடுக்கப்படுகிறது. எந்தெந்த நாளில் எந்தெந்தப் பகுதிக்கு சரியான அளவில் குடிநீர் போய்ச் சேரவேண்டும் என்ற விஷயத்தில் நகராட்சி அக்கறை செலுத்துவதில்லை. அதனால், ஒரு பகுதியில் 10 மணி நேரமாகவும் இன்னொரு பகுதியில் 6 மணி நேரமாகவும் குளறுபடியாக குடிநீர் விநியோகம் நடக்கிறது. 13, 14 மற்றும் 15-வது வார்டுகளில் 20 நாட்களுக்கு ஒருமுறை வரும் குடிநீரும் வராமல் போனதால், கடந்த 6-ஆம் தேதி,  அந்தப்பகுதி மக்கள் பந்தல்குடி சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். 

அருப்புக்கோட்டை நகராட்சி உதவி பொறியாளர் காளீஸ்வரியைச் சந்தித்து  ‘மக்களை ரோட்டுக்கு வரவைத்து விட்டீர்களே?’ என்றோம்.  

 

 Water shortage in Aruppukkottai

 

மழை, காற்று, மின் தடை, குழாய் வெடிப்பு, நீர்க்கசிவு என குடிநீர் விநியோகிக்கும் நாட்கள் தள்ளிப்போவதற்கும், விநியோகம் குறைந்துபோனதற்குமான  காரணங்களை விளக்கிவிட்டு “கடந்த ஆண்டு நல்ல மழை. வைகையில் இருந்து தண்ணீர் வந்ததால்,  4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க முடிந்தது. தற்போது, 9 நாட்களுக்கு ஒருமுறை  என்றாகிவிட்டது.   இங்கே யார் வீட்டு போர்லயும் தண்ணீர் இல்லை. 200 அடி வரையிலும் தண்ணீர் இல்லை.  நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துபோனது. ட்வாட் போர்டுல இருந்து எந்தக் குறுக்கீடும் இல்லாமல், உரிய அளவில் அருப்புக்கோட்டைக்கு தண்ணீர் வந்தால், விநியோகத்தில் ஒரு சிக்கலும் இருக்காது.  எல்லாவற்றுக்கும் மழை ஒன்றுதான் தீர்வு.” என்று கைகளை விரித்து மேலே பார்த்தார்.  

தமிழகம் முழுவதுமே அருப்புக்கோட்டை நிலைதான்! தற்போது மக்களின் தவிப்புக்கு இயற்கை தற்காலிமாக துணை நிற்கிறது.  ஆம். தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது! 
  

 

 

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

22 குடும்பங்களுக்கு அபராதம்; ஹோலி மழை நடன நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில்  பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.