Skip to main content

நெல்லையில் வாக்கு சிதறுவதால் வெற்றி யாருக்கு ?

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

நெல்லை மக்களவைத் தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை,  அம்பாசமுத்திரம், ஆலங்குளம், நாங்குனேரி, ராதாபுரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. 15,26,647 வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் இந்து நாடார், கிறிஸ்தவ நாடார், தாழ்த்தப்பட்டோர், தேவர், யாதவர், பிள்ளை, முஸ்லிம் என்று பல்வேறு சாதியினர் கலந்திருக்கிறார்கள். வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற இடத்தில் இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.

 

nellai



26 பேர் களத்தில் இருந்தாலும், தி.மு.க.வின் ஞானதிரவியம், அ.தி.மு.க.வின் மனோஜ்பாண்டியன், அ.ம.மு.க.வின் மைக்கேல் ராயப்பன் என மும்முனைப் போட்டியே நிலவுகிறது. சிறுபான்மையினர் வாக்கு அதிகம் இருப்பதால்தான் பயந்துபோய் பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் ராமநாதபுரத்தை கேட்டு வாங்கியதாக கூறுகிறார்கள்.

 

nellai



தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் கிறிஸ்தவ நாடார். அ.தி.மு.க.வும் தனது பங்கிற்கு கிறிஸ்தவ நாடாரான மனோஜ்பாண்டியனை அறிவித்தது. அ.ம.மு.க.வோ முதலில் ஞானஅருள்மணியை அறிவித்துவிட்டு பின்னர் மைக்கேல்ராயப்பனை வேட்பாளராக்கியது. மும்முனைப் போட்டியின் வெப்பம் தாளமாட்டாத மனோஜ்பாண்டியன் வேட்புமனு பரிசீலனையின்போது அ.ம.மு.க. வேட்பாளர் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டால் நேருக்கு நேர் போட்டியாகிவிடும், சமாளிக்கலாம் என்று நினைத்து எதிர்ப்புத் தெரிவித்தும் பலிக்கவில்லை. 

 

nellai



தனது தந்தை காலத்திலிருந்தே தொகுதியில் அறிமுகமானவர், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது சில நல்ல காரியங்களை நிறைவேற்றியவர், பெரிய குற்றச்சாட்டு இல்லாதவர் என்றாலும், மனோஜ்பாண்டியனின் பிரச்சாரத்தில் ஒருங்கிணைப்பு இல்லை. கட்சியினர் மத்தியில் சுணக்கம் இருக்கிறது. ஆர்.சி. கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த மனோஜ்.. பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. அமைத்த கூட்டணியால் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் ஆதரவை சுத்தமாக இழப்பார் என்கிறார்கள். அ.ம.மு.க.வின் மைக்கேல் ராயப்பனும் கிறிஸ்தவர் என்பதால் அ.தி.மு.க. வாக்குகளைப் பெரியஅளவில் பிரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இரட்டை இலை கைகொடுக்கும் என்று மனோஜ் நம்புகிறார். இருந்தாலும் அது எவ்வளவுதூரம் பலனளிக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால், மனோஜ், தனது பிரச்சாரத்தில் மோடியின் பெயரை குறிப்பிடாமல் தவிர்த்து வாக்குக் கேட்கிறார். இது பா.ஜ.க.வினரை கடுப்பேற்றுகிறது. 

தேவரான மைக்கேல் ராயப்பன், மனோஜுக்கு முழுஎதிரியாக கருதப்படுபவர். அ.தி.மு.க.வில் இருந்த தேவர் மற்றும் சில சாதிகளைச் சேர்ந்தவர்கள் தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனவே, பெரிய அளவில் வாக்குகள் சிதற வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். கடந்த தேர்தல்களில் சொந்தப் பணத்தைச் செலவழித்த ராயப்பன், இப்போது செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடுகிறார். 

மனோஜ்பாண்டியனுக்கு எதிரான சிறுபான்மையினர் மனநிலை, அ.தி.மு.க. வாக்குகளை பிரிக்கும் அ.ம.மு.க. வேட்பாளர் என்று... தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியத்துக்கு சாதகமான அம்சங்கள் பல இருக்கின்றன. தொகுதி வாக்காளர்களில் அதிக சதவீதம் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவரான ஞானதிரவியம், ஆரம்பகால தி.மு.க. புள்ளி ஆவார். ஆவரைக்குளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பிசினஸ் பிரமுகரான இவர் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். தொகுதியின் பல்வேறு மட்டத்திலிருக்கும் தி.மு.க.வின் வாக்கு வங்கிகள், கௌரவமான காங்கிரஸ் வாக்குகள், வி.சி.க., இஸ்லாமிய அமைப்புகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் என மதச்சார்பற்ற கூட்டணியின் ஒருங்கிணைப்பு வாக்குகளை மொத்தமாக கொண்டு சேர்க்கும். இருந்தாலும் போட்டியிட வாய்ப்புக்கிடைக்காத காங்கிரஸின் இரண்டு எக்ஸ் எம்.பி.க்களின் அதிருப்தி மனப்பான்மை குறித்து தலைமைக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது என்கிறார்கள். 

கலைஞர் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நம்பியாறு, கருமேனியாறு, பச்சையாறு நதிகள் இணைப்பு மற்றும் வெள்ளநீர் கால்வாய் வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டது. தி.மு.க. வேட்பாளரான ஞானதிரவியம், "இந்தத் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்' என்று தனது பரப்புரையில் டார்கெட் செய்கிறார். அது வாக்காளர்களை ஈர்த்திருக்கிறது. இப்போதைய நிலையில் மும்முனைப் போட்டியில் முந்துகிறார் தி.மு.க.வின் ஞானதிரவியம்.  
 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.