Skip to main content

கப்பல் விட்டு மிரள வைத்தவரின் கடைசி காலம்... மறக்க முடியுமா வ.உ.சி.யை?

Published on 05/09/2020 | Edited on 05/09/2022

 

v.o.c

 

வ.உ.சி சிறையிலிருந்து விடுதலையாக வேண்டிய நாள் அன்று. தன்னுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு தயாராகிறார். மக்களுக்காக சிறைப்பட்டு உள்ளே வந்திருக்கிறோம். எப்படியும் நம்மை வரவேற்க பெரும் கூட்டம் திரளாக வந்திருக்கும் என்ற நினைப்போடு வெளியே வருகிறார்.

 

தள்ளாடிய நிலையில் உடம்பில் வலுவற்று, நிற்க முடியாமல் ஒரு தொழுநோயாளியும், நான்கைந்து பேரும் நின்று கொண்டிருந்தனர். வ.உ.சிக்கு பேரதிர்ச்சி. இருந்த போதும் அந்தத் தொழுநோயாளியை அழைத்து நீ யாரப்பா என்கிறார். என்னை அடையாளம் தெரியவில்லையா? நான்தான் உன் நண்பன் சுப்ரமணிய சிவா என்கிறார். மனதை திடப்படுத்திக்கொண்டு நம்முடைய கப்பல் என்னவானது என்கிறார். அது வெள்ளைக்காரர்களின் கைகளுக்கே போய்விட்டது என்கிறார் ஒருவர். வ.உ.சிக்கு ஆத்திரம் தலையைப் பிளந்தது. அதைத் துண்டுதுண்டாக்கி கடலில் எறிந்திருந்தால்கூட அகம் மகிழ்ந்திருப்பேன் என ஆவேசப்படுகிறார். சிறையில் செக்கிழுப்பது தொடங்கி ஆயிரம் தாங்கொணாத் துயரங்களை அனுபவித்தாலும் சிறைக்குள் செல்லும் போது எத்தகைய வெள்ளை மேலாதிக்க எதிர்ப்புணர்வோடு சென்றாரோ அதே உணர்வோடு வெளியே வந்திருந்தார் வ.உ.சி...

 

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் எனும் ஊரில் பிறந்தவர் வ.உ.சி. வழக்கறிஞர் குடும்பப் பின்னணி என்பதால் அவரும் பட்டம் பெற்று வழக்கறிஞராகவே பணி செய்கிறார். வழக்கறிஞராகப் பணியாற்றிய சமயத்திலேயே ஏழை மக்களுக்காக இலவசமாக வாதாடுதல் போன்ற தன்னால் முடிந்த உதவியைச் செய்திருக்கிறார். பின்னாட்களில் பாலகங்காதர திலகர் மற்றும் லாலா லஜபதிராய் ஆகியோரின் கொள்கைகள் மற்றும் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். சுதந்திரப் போராட்டங்கள் அந்தச் சமயத்தில் அகிம்சை, மிதவாதம், தீவிரவாதம் என வெவ்வேறு வடிவங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வ.உ.சிக்கு இந்த வடிவங்களில் எல்லாம் உடன்பாடில்லை.

 

நமது உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராடுகிறோம். சுதந்திரம் வேண்டும் என்று நாம் வீதிகளிலும், மேடைகளிலும் கத்துவது நம் தொண்டை ஈரத்தைதான் வற்றச் செய்யுமேயொழிய ஏகாதிபத்திய அரசிடம் இது எடுபடாது. அவர்களுக்கு சட்ட ஒழுங்கு ரீதியான நெருக்கடிகள் வந்தால் அதைச் சமாளிக்க அவர்களிடம் கா(ஏ)வல் படை இருக்கிறது. அதை ஏவி சரி கட்டிக்கொள்வார்கள். அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்றால் அவர்கள் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிவிட வேண்டும். அதற்குச் சரியான வழி அவர்கள் பொருளாதரத்தை சீர் குலைப்பதுதான் என முடிவெடுக்கிறார். சுதேசி பிரசாரத்தை தீவிரப்படுத்துகிறார். எந்தக் கப்பல்கள் மூலம் நம் நாட்டிற்கு வந்து நம் செல்வங்களைச் சுரண்டிக் கொண்டு செல்கிறார்களோ அதில் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்போம் என முடிவெடுத்து சுதேசி கப்பல் கம்பெனியைத் தொடங்குகிறார்.

 

இந்தியாவின் முதல் சுதேசி கப்பல் ஒரு தமிழனால் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்து நகர கடலில் களம் கண்டது. சுதேசி கப்பல் மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. வெள்ளைக்கார அரசுக்கு கடல் போக்குவரத்து ரீதியான பொருளாதாரத்தில் பலத்த அடி. அதையே ஏற்க முடியாமல் இருக்கும் போது சுதேசி கப்பல் மூலம் மக்களிடம் சுதந்திர உணர்வு அதிகமாகிறது என்ற விஷயம் தெரிந்தவுடன் இதற்கு முடிவுகட்ட தயாரானது ஆங்கிலேய அரசு. வ.உ.சியின் நிறுவனத்திற்கு கப்பல் வாடகைக்கு கொடுத்த நிறுவனங்களுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. வெள்ளைகார அரசுக்கு முதல் பயத்தைக் காட்டிவிட்டோம், இத்தோடு இது நின்று விடக்கூடாது என முடிவெடுக்கிறார். தன்னுடைய பரம்பரைச் சொத்துகள் மற்றும் மனைவியின் நகை, உடைமைகள் என அனைத்தையும் விற்று காலியோ, லாவா என இரு கப்பல்களைச் சொந்தமாக விலைக்கு வாங்கி அதை சுதேசி பிரச்சார பீரங்கியாகவும், ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்துகிறார்.

 

Ad

 

ஆங்கில அரசின் தடையை மீறி ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்படுகிறார். தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. முதலில் சிறைத் தண்டனை 40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டு 6 ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. ஆனால் 40 ஆண்டுகளில் ஒரு சிறைக் கைதியால் அனுபவிக்கப்படும் வலியைவிட இரு மடங்கு வலியை 6 ஆண்டுகளில் அனுபவிக்கிறார். மாடுகள்கூட இழுப்பதற்கு சிரமப்படும் செக்கை சிறையில் இழுத்த அவரது வரலாறெல்லாம் சுதந்திரத்தின் அருமையினை உணராத, முறையாகப் பயன்படுத்தாதவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய பாடம்.

 

சிறையில் இருந்து அவர் விடுதலை பெற்று வெளியே வரும் போது நடந்த சம்பவம்தான் முதல் பத்தியில் கூறப்பட்டவை. கையில் இருந்த சொத்துகளை எல்லாம் விற்று கப்பல் வாங்கியாயிற்று, வழக்கறிஞர் பதவியும் பறிக்கப்பட்டுவிட்டது. இனி வாழ்வின் இறுதிக் கட்டங்களை ஓட்ட பணம் வேண்டும்... என்ன செய்வதென்று யோசிக்கிறார்? இறுதியில் சென்னை வீதிகளில் மண்ணென்ணெய் விற்று காலம் தள்ளினார்.

 

Nakkheeran

 

ஆங்கிலேய அரசுக்கு எதிராக அவர் கப்பல் விட்டபோது, அஞ்சி நடுங்கிய அரசு, கப்பலில் பயணச்சீட்டு விலையைப் பாதியாகக் குறைத்தல், கப்பலில் பயணித்தாலே குடை இலவசமாக வழங்கப்படும் என்றெல்லாம் அறிவித்தது. ஆம்... ஏகாதிபத்திய அரசையே இவ்வாறெல்லாம் மிரள வைத்தவர் தன்னுடைய கடைசி காலங்களில் மண்ணெண்ணெய் விற்று காலத்தை ஓட்டினார் என்பது மனம் ஏற்க மறுக்கும் சற்று கசக்கக் கூடிய உண்மை. இன்று நாம் வாழும் சுதந்திர வாழ்வில் அவரது பங்கு மறக்க முடியாதது.

 

 

Next Story

‘தென்னாட்டு ஜான்சி ராணி’ - கடலூரில் அஞ்சலையம்மாளுக்கு சிலை திறப்பு

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Statue of Anjalayammal inaugurated in Cuddalore

 

கடலூர் புதுநகர் பூங்காவில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

 

சுதந்திரப் போராட்டக் களத்தில் தவிர்க்க முடியாதவரும், ஆங்கிலேயர்களை எதிர்த்து துணிவாகப் போராடியவருமான அஞ்சலையம்மாள், வயிற்றில் கருவைச் சுமந்து போராடி சிறை சென்றார். பின்பு ஜாமீனில் வெளியே வந்து பிரசவத்தை முடித்துவிட்டு, மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு கைக்குழந்தையுடன் சிறைச் சென்றார். கடலூரில் மகாத்மா காந்தியை ஆங்கிலேயர்கள் கைது செய்துவிடாமல் தடுத்து காப்பாற்றினார் அஞ்சலையம்மாள். அதற்காக அவருக்குத் தென்னாட்டு ஜான்சி ராணி என்று காந்தி பட்டம் கொடுத்தார். 

 

இந்த நிலையில், அவரது சொந்த ஊரான கடலூரில் அஞ்சலையம்மாளுக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கடலூர் புதுநகர் பூங்காவில் உள்ள சிலையைத் திறந்து வைத்தார். சிலை திறப்பு நிகழ்ச்சியில் கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அஞ்சலையம்மாளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

 

 

Next Story

மறக்கடிக்கப்பட்ட தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் - ஆளுநர் உத்தரவு

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

governor rn ravi said Forgotten Freedom Fighters Tamil Nadu should be identified

 

மறக்கடிக்கப்பட்ட தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு அவர்களைப்   பற்றிய   தகவல்களை  ஆவணப்படுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  

 

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய விடுதலைக்குப் பாடுபட்டு அங்கீகாரம் பெறாமல் போன   தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் காணும்  முயற்சியில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் முயல வேண்டும் என்று சமீபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி குறிப்பிட்டிருந்தார்.    

 

இந்த நிலையில், வரலாற்றில் நினைவுகூரப்படாத தமிழ்நாட்டின்  சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து   அவர்களைப்   பற்றிய  தகவல்களை   ஆவணப்படுத்தும்படி ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.   இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு ஆளுநர் திரு.  ரவி எழுதியுள்ள கடிதத்தில், நாடு விடுதலை அடைந்ததன் மிகப்பெரும் கொண்டாட்டத்தை மகிழ்வுடன் கொண்டாடுகிறோம். நம்  சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. நமது சுதந்திர போராட்டத்தின்  பெருமைமிகு வரலாறு கலாச்சாரம் மற்றும் இந்தியாவின் சாதனையைச்  சொல்கிறது. நீண்ட சுதந்திரப் போராட்டக் களத்தில் முன்னணி வீரர்கள் தவிர  பல   வீரர்கள்,   வீராங்கனைகள்   பற்றிய   வரலாறு   அறியப்படாமலேயே போனது. அவர்களை கௌரவப்படுத்தவும், அவர்கள்   வாழ்க்கையை  ஆவணப்படுத்தும்   கடமையும் நம் முன்   உள்ளது   என்று  கூறியுள்ளார்.

 

மேலும், நமது தமிழ்நாட்டில்   எண்ணற்ற   சுதந்திரப் போராட்ட   வீரர்கள்  அந்நியரை   இம்மண்ணை   விட்டு   விரட்ட  செயற்கரிய   தியாகங்களைச்   செய்துள்ளனர்.   இதில்   பலரது   தியாகங்கள்,   பங்களிப்புகள்   பொதுவெளியில்   அறியப்படாமலேயே   மறக்கடிக்கப்பட்டுள்ளன.   ஒரு  தேசம்   அதற்காக  உழைத்த   தியாகிகளின்   தியாகத்தை   அங்கீகரிக்காமல்  இருக்க   முடியாது.  நாட்டுக்காக   அவர்கள்   செய்த தியாகங்கள்   மற்றும்   போராட்டங்களை  எதிர்கால  தலைமுறை   அறிய   அவர்களைப்   பற்றிய   தகவல்களை  ஆவணப்படுத்துவது   நம்  கடமை.   இது   சம்பந்தமாக,   உங்கள் பல்கலைக்கழகத்தின்   எல்லைக்குட்பட்ட   பகுதிகளைச்   சேர்ந்த  அறியப்படாத  சுதந்திர போராட்ட   வீரர்களின்   வாழ்க்கை   மற்றும்   பங்களிப்புகளை  அடையாளம்   கண்டு   ஆவணப்படுத்த   குறைந்தபட்சம்   5  சிறப்பு   ஆராய்ச்சி  மாணவர்களை   நீங்கள்   நியமிக்க வேண்டும்   என்று   விரும்புவதாக  ஆளுநர்  கடிதத்தில்   குறிப்பிட்டுள்ளார்.  

 

பொருத்தமான ஆராய்ச்சி   மாணவர்கள்  குறைந்தது   ஒரு   அறியப்படாத   சுதந்திர   போராட்ட   வீரரை   அடையாளம்  கண்டு,   அவர்  குறித்து   ஆராய்ச்சி   செய்ய   வேண்டும்.   இந்த  ஆராய்ச்சித் திட்டத்துக்கான ஃபெல்லோஷிப் வழங்கப்படும்.   இத்திட்டத்தை முடிக்க ஒரு வருட கால அவகாசம் வழங்கப்படலாம், அதன் முடிவில் ராஜ் பவனில் நடைபெறும் விழாவில் ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்த ஆராய்ச்சி மாணவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள். இது வரலாற்றில் மறைக்கப்பட்ட அந்த வீரர்களுக்கு நாம் அளிக்கும் புகழஞ்சலியாகவும் மாணவர்களுக்கு பெருமையாகவும் இருக்கும்.    இந்த ஆராய்ச்சி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நிலை குறித்து அவ்வப்போது தனக்கு விளக்கமளிக்கும் படியும் ஆளுநர் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.