Skip to main content

‘ராஜேந்திர பாலாஜியை விடவே மாட்டோம்!’ - தேர்தல் ஜுரத்தில் விருதுநகர் மாவட்ட தி.மு.க. - அ.தி.மு.க.!

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

Virudhunagar constituency dmk admk

விருதுநகர் மாவட்டத்தில்,  சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில், ஆரம்பத்திலேயே அ.தி.மு.க பாய்ச்சல் காட்டுகிறது. வாக்குச்சாவடி நிலை முகவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், கவரில் வைத்து அ.தி.மு.க தருவது ரூ.2,000 என்றால், தி.மு.க கொடுப்பது ரூ.500 மட்டுமே. நிதானமாகவே தி.மு.க காய் நகர்த்துகிறது. கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கும், தங்கம் தென்னரசுவுக்கும் தரப்பட்டுள்ள முக்கிய அஜென்டா ‘கே.டி.ராஜேந்திரபாலாஜி எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவரைத் தோற்கடித்தே ஆகவேண்டும்’ என்பதுதான். 


‘கே.டி.ராஜேந்திரபாலாஜி தொகுதி மாறுவாரா?’ என்பதை ‘ஸ்மெல்’ செய்தபடியே இருக்கும் தி.மு.க தரப்பிடமிருந்தும், அ.தி.மு.க வட்டாரத்திலிருந்தும், மாவட்ட அளவில் சில தகவல்களைப் பெற முடிந்தது.

 
அ.தி.மு.க. உள்ளடி கிலி!

 
சிவகாசி தொகுதி, 1957 முதல் 2016 வரையிலும் 14 முறை சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது. 1971-ல் கா.காளிமுத்து, 1989-ல் பெ.சீனிவாசன் என, இரண்டு முறை மட்டுமே தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். அ.தி.மு.க.வோ, 5 முறை வெற்றி பெற்றுள்ளது. அதனால், இத்தொகுதியில் நேரடியாகப் போட்டியிடுவதைத் தவிர்த்து, கூட்டணிக் கட்சிகளுக்குத் தள்ளிவிடுவதே, தி.மு.க.வுக்கு வாடிக்கையானது. 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களின் மூலம், இத்தொகுதி தொடர்ந்து இரண்டு முறை, ராஜேந்திரபாலாஜியை சட்டமன்றத்துக்கு அனுப்பியுள்ளது. இதற்குமுன், சிவகாசி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்களில் யாரும் தமிழக அமைச்சரவையில் இடம்பெறாத நிலையில், தொடர்ந்து இரண்டு முறை, ராஜேந்திரபாலாஜி அமைச்சராக இருந்து வருகிறார்.

  

Virudhunagar constituency dmk admk


ராஜேந்திரபாலாஜி கூறுவதுபோல், ஒட்டுமொத்த விருதுநகர் மாவட்டமும், குறிப்பாக சிவகாசி தொகுதியும், அ.தி.மு.க ஆட்சி காலத்தில் திட்டங்களின் மூலம் அடைந்த பலன்களின் பட்டியல் நீள்கிறது. இத்தொகுதியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாக்கு வங்கியில்லாத விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த ராஜேந்திரபாலாஜி, அரசியல் மேடையிலும் ஆன்மிகவாதியாகவே தன்னை வெளிப்படுத்தி வருகிறார். அதனால், சகல ஜாதியினரையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த இந்துக்களின் வாக்குகளைக் கவர்ந்துவிட முடியும் என்று திடமாக நம்புகிறார். அதே நேரத்தில், தேவாலயங்ளுக்கும்,  மசூதிகளுக்கும் அவ்வப்போது சென்று, கிறிஸ்தவ, இஸ்லாமியர்களிடமும் நல்லுறவைப் பேணி வருகிறார். தனிப்பட்ட முறையில், கட்சிப் பாகுபாடின்றி பொதுமக்களுக்கு வாரி வழங்குவதால், வள்ளலாகவும் பார்க்கப்படுகிறார். ஆக, சகலவிதத்திலும் பாதுகாப்பான தொகுதியாக சிவகாசி இருந்தாலும், முன்னாள் அ.தி.மு.க எம்.பி ராதாகிருஷ்ணன் போன்றவர்களின் சாதி ரீதியிலான உள்ளடி, கிலி ஏற்படுத்துவதாகவே உள்ளது. இந்த உள்ளடி, கடந்த உள்ளாட்சி தேர்தலின்போதே அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தி, ஒன்றியத்தை தி.மு.க.வுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது.


மகனுக்காக ‘ரிஸ்க்’ எடுக்கிறாரா வைகோ?

 

Virudhunagar constituency dmk admk
                                                                 வைகோ   

 

சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தபோது, மூன்று முறை ம.தி.மு.க வெற்றி பெற்றது. இரண்டு முறை, எம்.பி ஆனார் வைகோ. தனக்கு மிகவும் பரிச்சயமான சட்டமன்றத் தொகுதி சிவகாசி என்பதால், தன் மகன் துரை வையாபுரி, தி.மு.க கூட்டணி வேட்பாளராக, இத்தொகுதியில் போட்டியிட வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டுவதாக, தி.மு.க தரப்பு சொல்கிறது. அதே நேரத்தில், சாத்தூர் தொகுதியும், அவரது விருப்பப் பட்டியலில் உள்ளதாம். ஏனென்றால், 2016 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிட்ட ம.தி.மு.க வேட்பாளர் ரகுராமனால், 25,000-க்கும் மேற்பட்ட வாக்குகளைக் கவர்ந்து, மூன்றாவது இடத்துக்கு வரமுடிந்தது. அதனால், துரை வையாபுரிக்கு பாதுகாப்பான தொகுதியாக சாத்தூரை நினைக்கிறாராம். 

 

Virudhunagar constituency dmk admk
                                                     துரை வையாபுரி

 

சாத்தூரில் 2016-ல் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட சீனிவாசன், 4,427 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 2019-ல் சாத்தூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், அதே சீனிவாசன் 1,101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். மூன்றாவது முறையும், தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டால், வெற்றி நிச்சயம் என்பது சீனிவாசனின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், பணபலம் உள்ளவர் என்பதால், சாத்தூரில் தனக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில், விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளுக்குத் தேர்தல் செலவு செய்வதற்கும், அவர் தயாராகவே இருக்கிறார். அதனால், சாத்தூர் தொகுதியை, தி.மு.க ஒருபோதும் ம.தி.மு.க.வுக்கு விட்டுக்கொடுக்காது என்று பேசப்படுகிறது.

 

cnc


அப்படியென்றால், நாயுடு வாக்குகள் கணிசமாக உள்ள சிவகாசியில், துரை வையாபுரியை கே.டி.ராஜேந்திர பாலாஜியோடு மோதவிடுவதுதானே? தி.மு.க தரப்போ ‘இரட்டை இலை வாக்கு வங்கி அதிகமாக உள்ள தொகுதி இது. கே.டி.ராஜேந்திரபாலாஜியும் பணத்தை இறைத்து வாக்குகளைக் கவர்ந்துவிடுவார். முதன் முதலில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் துரை வையாபுரி எதற்காக இத்தனை ரிஸ்க் எடுக்க வேண்டும்? விளாத்திகுளத்திலோ, கோவில்பட்டியிலோ போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும்.’ என்று வைகோ தரப்பை ‘கன்வின்ஸ்’ செய்தபடியே இருக்கிறதாம்.


தொகுதி மாறுகிறாரா ராஜேந்திரபாலாஜி?

 

Virudhunagar constituency dmk admk
                                                  கோகுலம் தங்கராஜ்


‘சிவகாசியில் தன்னுடன் யாரை மோதவிட்டு என்ன நடத்தப் போகிறார்களோ?’ என்னும் தவிப்பில் உள்ளாராம் ராஜேந்திரபாலாஜி, விருதுநகரிலோ, ராஜபாளையத்திலோ, தொகுதி மாறி போட்டியிடுவதில் உள்ள சாதக, பாதகங்களை அலசி வருகிறார். எப்படியும் தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக விருதுநகரில் போட்டியிடுவது, காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராஜா சொக்கராகத்தான் இருக்கும். அவரென்றால், கடந்த முறை போல, ‘ஏப்பம் விட்டுவிடலாம்’ என்று நினைக்கவும் செய்கிறார், ராஜேந்திரபாலாஜி. விருதுநகரில் ‘இலவு காத்த கிளி’ போல, கரோனா காலத்தில் தொகுதி மக்களை வெகுவாகக் கவனித்த கோகுலம் தங்கராஜ், ‘அ.தி.மு.க. சீட் எனக்கே’ என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். ராஜேந்திரபாலாஜி அவரிடம், ‘உங்கள் மனைவிக்குத்தான் விருதுநகர் முனிசிபாலிட்டி சேர்மன் சீட்’  என்று உத்தரவாதம் தந்து ‘கூல்’ செய்திருக்கிறார். பொது நிகழ்ச்சிகளில் அமைச்சருடனே காணப்படும் எஸ்.எஸ்.கதிரவன், ‘பழம் நழுவிப் பாலில் விழாதா?’ என்ற எதிர்பார்ப்புடன், ‘விருதுநகருக்கு நானே எம்.எல்.ஏ.’ என்ற கனவில் மிதக்கிறார். 


எனக்கு ஒண்ணு;  மகனுக்கு ஒண்ணு! – அண்ணாச்சி அப்படித்தான்!

 

Virudhunagar constituency dmk admk
                                                   கே.கே.எஸ்.எஸ்.ஆர்


விருதுநகர் தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தேர்தலில் தன்னுடைய வாரிசு ரமேஷை. அருப்புக்கோட்டை வேட்பாளராகக் களமிறக்கினால் என்னவென்று சிந்தித்து வருவதாகப் பேச்சு கிளம்ப, அந்தத் தொகுதி தி.மு.க.வினர் ‘அண்ணாச்சி லெவல் தெரியாம யாரோ கிளப்பிவிடறாங்க. எனக்கு ஒண்ணு; என் மகனுக்கு ஒண்ணுன்னு சீட் வாங்க நினைப்பாரே தவிர, அவராவது போட்டியிடாமல் ஒதுங்கிப் போவதாவது. அதுவும் ரமேஷ் அ.தி.மு.க.வுக்கு தாவிவிட்டு வந்தவர். அவருக்கு எப்படி தி.மு.க. தலைமை சீட் கொடுக்கும்?’ எனக் கேட்கின்றனர்.

 

Virudhunagar constituency dmk admk
                                                             ரவிச்சந்திரன்


புதிதாக, அ.தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆகியிருக்கும் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி ரவிச்சந்திரனை, முக்குலத்தோர் வாக்குகள் அதிகமாக உள்ள திருச்சுழியில் போட்டியிட வைத்து, தங்கம் தென்னரசுவுக்கு ‘டஃப்’ கொடுக்கலாம்..’ என்னும் சிந்தனை அ.தி.மு.க தரப்பிடம் துளிர்த்துள்ளது. 
 

விருதுநகர் மாவட்டத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இப்போதே ‘தேர்தல் ஜுரம்’ வந்துவிட்டது! 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்