Skip to main content

‘இங்க பொங்கப்பானை பொங்காது’ - மூன்று தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம்

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

A village people who don't celebrate pondal festival

 

தைப்புத்தாண்டின் போது வீட்டின் முன்னே தெருக்களில் மாக்கோலமிட்டு செங்கரும்பு, மஞ்சள் குலை, பூக்களால் அலங்காரமிட்டு புத்தம் புதுப்பானையில் அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியையிட்டு புதுப்பானை பொங்கப் பொங்கக் குலவையிட்டு பொங்கலை சூரியனுக்குப் படையலிட்டு சிறப்பாக வழிபடுவது ஆதித்தமிழர்கள் காலம் தொட்டு இன்றளவும் வேளாண்மக்களும் பிற அனைத்து மக்களும் கொண்டாடுவது தமிழர்களின் ரத்தநாளங்களில் ஊறிப்போன வாழ்வியல் பண்பாடு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற திண்ணமான நம்பிக்கை. 

 

தெருக்களில் பொங்கல் வைத்து புதுப் பொங்கல் பானை பொங்காமல் போனதால், வேதனையடைந்த கிராம மக்கள் 120 ஆண்டுகளாக; மூன்று தலைமுறைகளாக தைப்பொங்கலே கொண்டாடாமலிருக்கும் விநோத தகவலறிந்த நாம், வியந்து போய் அந்தக் கிராமத்திற்கு விரைந்தோம்.

 

தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி பக்கமுள்ள பொட்டல் புதூர் நகரம் தாண்டிய ரிமோட் ஏரியாவிலிருக்கிறது கேளையாப்பிள்ளையூர் என்கிற அந்தக் கிரமம். சுமார் 350க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட 1300க்கும் கூடுதலான பல சமூக மக்களை உள்ளடக்கியது. அந்தக் கிரமத்தின் வாழ்வாதாரமே விவசாயம், பீடி சுற்றுதல் மற்றும் விவசாய கூலித் தொழில்களேயாகும். மூன்று தலைமுறைகளுக்கு முன்பு தமிழர்களின் முக்கிய திருநாளான தைத் திருநாளில் கேளையாப்பிள்ளையூர் கிராமத்தினர் வழக்கம்போல் தெருக்களில் மஞ்சள் குலை, கரும்புகளால் அலங்கரித்து புத்தரிசி புதுப்பானையில் பொங்கலிட்டிருக்கிறார்கள்.

 

A village people who don't celebrate pondal festival

 

ஆனால் புதுப்பானை கொதித்ததே தவிர வழக்கம்போல் பொங்கல் பானையில் பால் பொங்கி வழியவே இல்லையாம். வெகுநேரம் பானை கொதித்ததே தவிர பொங்காமல் போயிருக்கிறது. இதனால் அரண்டு மிரண்டு போன மக்கள் மன சஞ்சலமடைந்திருக்கிறார்கள்.

 

A village people who don't celebrate pondal festival

 

அதே வேளையில் கிராமத்தின் அவர்களின் குலக்கோவில்களான முப்புடாதியம்மன் கோவில், உச்சினிமாகாளியம்மன் கோவில், பிள்ளையார் கோவில் ஆகிய கோவில்களின் கொடை விழாவின் போது கிராமமே திரண்டு வழிபடும் பொருட்டு ஆலய வீதிகளில் பொங்கலிட்ட போது அனைத்து பொங்கல் பானைகளும் பொங்கி வழிந்திருக்கிறது. பின்னர் குலசாமிகளுக்குப் படையலிட்டு வழிபட்டுள்ளனர்.

 

A village people who don't celebrate pondal festival

 

மாறாக அதே பொங்கலை தைத் திருநாளில் பொங்கலிட்ட போது பொங்கல் பானை பொங்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு சம்பவங்கள் என்பது அவர்களின் மனதை அரித்திருக்கிறதாம். அதே வேளையில் தைத்திரு நாளில் பொங்கலிட்டு பொங்காமல் போனதால் கிராமத்தில் சில எதிர்பாராத துர்மரணச்சம்பவங்களும் நடந்திருக்கிறதாம். தெய்வ குத்தமா, கர்மவினையா, சாபமா என்கிற மனஉளைச்சலில்; மனவேதனையில் கிராமத்துப் பெரியவர்கள் ஒன்று கூடி இனிமேல் தைத்திருநாளில் கிராமத்தில் பொங்கலிட வேண்டாம். கொண்டாட வேண்டாம் என்று முடிவெடுத்த மறுவருடம் முதல் தைப்பொங்கல் வைக்காமல் தவிர்த்ததையடுத்து முன்னர் நடந்த திடீர் சம்பவங்கள் நடக்காமல் போனதால் தொடர்ந்து 120 வருடங்களாக தைத்திருநாளில் பொங்கல் வைக்கவேயில்லையாம். அன்றைய தினம் மட்டும் அந்தக் கிராமம் வெறிச்சோடி இருக்கிறது என்கிறார்கள்.

 

நாம் கேளையாப்பிள்ளையூர் சென்ற போது அந்தக் கிராமம் ஆழ்ந்த அமைதியிலிருந்தது. தெருவீதிகளும் வெறிச்சோடின. 3ம் தலைமுறையான 120 வருடங்களுக்கு முந்தைய சம்பவமென்பதால் 90 வயது கடந்த பெரியவர்களான முத்துக்கிருஷ்ணன், சுப்பையா, செல்லம்மாள், கனி உள்ளிட்டவர்களை கிராமத்தினர் முன்னிலையில் சந்தித்து பேசினோம்.

 

A village people who don't celebrate pondal festival

 

ஆதிகாலத் தொடர் சம்பவம் என்பதால் ஆழமான அமைதிக்குப் பின் பேசினார்கள். “மூணு தலைமுறைக்கு முன்ன சாதி சனம், மக்க, கொஞ்சப்பேரு தான் இருந்தாங்க. எங்க முப்பாட்டனுக காலத்தில அறுவடையான புளியதரட்டி சம்பா அரிசிய தைப்பொங்கலன்னைக்கு மாடுகளைல்லாம் குளிப்பாட்டி பூப்போட்டு சூரியன் உதிக்கும் போது வழக்கமா தெருக்கள்ல பொங்க வச்சாக. ஆனா, ஏனோ ஊர்ல பொங்க வைச்ச அத்தனை பொங்கப்பானையும் பொங்காமப் போனதால, அப்ப பயந்து போன பெரியவங்கல்லாம் ஒன்னு கூடி தெய்வகுத்தமாத் தெரியுது. அதனால தைப்பொறப்பன்னைக்கு பொங்க வைக்க வேணாம்னு முடிவு எடுத்திட்டாக. ஆனா பாருங்கய்யா அப்ப எங்க குலசாமிக கோயில்ல கொடையன்னைக்கி ஊர் மக்க கோயில் தெருக்கள்ல வைக்கிற பொங்கல்ல பொங்கப்பானைக பொங்கியிருக்குய்யா. தைப்பொறப்புல நடந்தது தெய்வ குத்தமா, ஊருக்குச் சாபமான்னு தெரியலியேன்னு எங்க முப்பாட்டங்க மக்க மனசொடிஞ்சி போயிட்டாங்களாம்.

 

A village people who don't celebrate pondal festival

 

அப்பத்தேன், வழக்கமா தைப் பொறந்த மூணாம் செவ்வாக்கெழமன்னைக்கி எங்க முன்னோர்க எங்க குலதெய்வம் இந்த உச்சினி மாகாளியம்மன் கோயில் கொடை விழா நடத்திருக்காக. அப்ப ஊர் சனங்க தெரண்டு வந்து வழக்கமா வீதியில பொங்கல் வைச்சு குலவையிட்டதில பொங்கப்பானை வழக்கமாப் பொங்கியிருக்குய்யா. அந்தக் கொடை விழாவுல வழக்கம் போல 14 சாமியாடிக சாமியாடுவாக. அப்ப ஊர்க்காரர் ஒருத்தர் வந்து சாமியாடியக கால்ல விழுந்து கும்பிட்டு, கோயில்ல பொங்க வைச்சா பொங்கப்பானை பொங்குது ஆத்தா. ஆனா தைப் பொறப்பன்னைக்கி விசேஷம்னு வழக்கமா தெருவுல பொங்க வைச்சா பொங்கப்பானை பொங்கல ஆத்தா. கொதிச்சுக்கிட்டேயிருக்கே., தெய்வகுத்தமான்னு கும்பிட்டுக் கேட்டுருக்காராம்.

 

A village people who don't celebrate pondal festival

 

அப்ப 14 சாமியாடிகளும் ஒன்னா சேர்ந்து, ‘நீ எனக்கு தைச் செவ்வாயன்னைக்கு கொடை குடுத்து பொங்க வைக்கறல்லோ. அதோட முடிச்சுக்கோ, போன்’னு ஒங்காரமா சாமியாடிக அருள்வாக்கு சொல்லிருச்சாம். அப்பயிருந்தே தைப் பொறப்பன்னைக்கு மத்தவங்கள மாதிரி எங்க கிராமத்தில தெருக்கள்ல பொங்கலிடுறத நிறுத்தியிருக்காக. சாமி குத்தமாயிருமேன்னு தான்யா. ஆனா, ஆடி மாசம் மூணாம் செவ்வாயன்னைக்கி எங்க ஊரு முப்புடாதி அம்மன் கோவில்லயும், தை மூணாம் செவ்வாய்ல உச்சினிமாகாளியம்மன் கோவில்லயும் வருடந்தோறும் தொடர்ச்சியா கொடை நடத்தி பொங்க வச்சிட்டுத்தான் வர்றோம்.

 

A village people who don't celebrate pondal festival

 

இடையில என்னாச்சுன்னா, கோயில் கொடைக்கி ஒரு வாரத்துக்கு முன்ன கோயில்ல உருவம் விட்டு கண் தொறப்போம். வழக்கமா செவ்வாயன்னைக்கித் தான் நடத்துவோம். அப்ப ஊர்ல செவ்வாய்ன்னும் ஞாயிறு கிழமை வைங்கன்னும் ரெண்டு தரப்பு பேச்சாயிருச்சி. அவங்க சொன்னத போல வழக்கத்த மாத்தி ஞாயித்துக்கிழம உருவம் விட்டு கண் தொறந்த அந்த வருஷம் ஊர்ல தடங்கலாயிருச்சி. வேண்டாம் இந்த வம்பு தெய்வக்குத்தம்னு உருவம் விடுறதையும் மறுபடியும் செவ்வக்கிழமைக்கு மாத்திட்டோம்யா. ஊர்ல இப்புடி நடந்ததால 120 வருஷமா மூணு தலைமுறையா கிராமத்தில நாங்க தை மாசப் பொறப்பன்னைக்கு ஊர்ல பொங்க வைக்கிறத நிறுத்திட்டோம்யா. தீபாவளி கொண்டாடுதோம். பொங்கல் கொண்டாடுறதில்ல. அதனால மூணு தலைமுறையா தைப் பொங்கல்னா என்னான்னு தெரியாததா ஆயிருச்சி. அப்ப ஊரே வெறிச்சோடிக் கெடக்கும்யா. அந்த நாளன்னைக்கி ஊர்க்காரவுக திருச்செந்தூருக்குப் பாதயாத்திரை போயிடுவாகய்யா.” என்றார்கள் வறண்ட குரலில்.

 

கேளையாப்பிள்ளையூரில் தைப் பொங்கல் பானைகள் பொங்காதது சாபமா? வாங்கி வந்த வரமா? என்ற புதிர்கள் மூன்று தலைமுறையாக சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.

 

 

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story

'எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனேஜர் என்றே தெரியாது'-மழுப்பிய நயினார் நாகேந்திரன்

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டி ஏ-1 26, 27, 28 ஆகிய இருக்கைகளில் நயினார் நாகேந்திரன் கோட்டாவில் அவர்கள் பயணித்தது தெரியவந்தது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

nn

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி என்பவர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மது பாட்டில்களும் சிக்கியதாக பறக்கும் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நயினார் நாகேந்திரன் தங்கும் ஹோட்டல் அறையிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் அவர் தங்கும் அறையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. நாகேந்திரனுக்கு தொடர்புடைய வண்ணாரப்பேட்டையில் உள்ள லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டிலும் 3.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் மட்டுமின்றி ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் திமுகவும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், 'எனக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க அவரவர்கள் தொழிலுக்காக பணத்தை வைத்திருப்பார்கள். எனக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனஜர் என்றே தெரியாது' என பதிலளித்துள்ளார்.