Skip to main content

விஜயநகர மன்னர் கால வில் வீரனின் நடுகல் சிற்பம் பற்றிய வெளிவராத தகவல்கள்!

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

vijayanagara kingdom age bow warrior statue discovered in virudhunagar thirusuli area

 

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வேடநத்தம் என்ற ஊரில் 600 ஆண்டுகள் பழமையான விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்த வில் வீரனின் நடுகல் சிற்பம் பற்றிய வெளிவராத புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. 
 

வேடநத்தம் வீரபூசையா கோயில் அருகில் நீத்தார் நினைவுச் சின்னங்கள் உள்ள பகுதியில் பழமையான சிற்பங்கள் இருப்பதாக அவ்வூர் ஆசிரியர் பா.சிலம்பரசன் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி வே.சிவரஞ்சனி, திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் அ.முகம்மது சகாப்தீன், சு.ஸ்ரீவிபின் ஆகியோர் அப்பகுதியை ஆய்வு செய்து இதுவரை வெளி கொண்டு வராத தகவல்களை வெளிக் கொண்டு வந்துள்ளனர்.

 

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, "நிரை கவர்தல், மீட்டல், ஊரை எதிரிகளிடமிருந்து காத்தல், புலி, பன்றி, யானையுடன் சண்டையிடுதல், அரசனின் வெற்றிக்காக போரிடுதல் ஆகிய காரணங்களால் இறந்த வீரர்களுக்கு அவர்கள் நினைவாக நடுகற்கள் நட்டு வழிபாடு செய்வது சங்ககாலம் முதல் தமிழ்நாட்டு மக்களிடையே காணப்படும் வழக்கம். சாதாரண மக்களின் வரலாறு, வழக்காறுகளை அறிந்து கொள்ள நடுகற்கள் உதவுகின்றன.

 

vijayanagara kingdom age bow warrior statue discovered in virudhunagar thirusuli area

 

இங்கு வில் வீரன் சிற்பம், நடுகற்கள், சதிக்கல் மண்டபம் ஆகிய நினைவுச் சின்னங்கள் உள்ளன. இதில் வில் வீரன் சிற்பம் தனிச் சிற்பமாக கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 60 செ.மீ, அகலம் 26 செ.மீ, பருமன் 16 செ.மீ ஆகும். இடது கையில் வில்லைத்தாங்கி வலது கையில் ஒரு அம்பை எடுத்து அதை கீழே ஊன்றியவாறு வீரன் நிற்கிறார். வில் அவரைவிட உயரமாய் உள்ளது. வலது தோளில் உள்ள அம்பறாத்தூணியில் அம்புகள் நிறைந்துள்ளன. உறையுடன் உள்ள குறுவாளை இடுப்பில் செருகியுள்ளார்.

 

vijayanagara kingdom age bow warrior statue discovered in virudhunagar thirusuli area

 

கழுத்தில் மாலையுடன் முழங்கால் வரை ஆடை அணிந்துள்ளார். மேலாடை இல்லை. கொண்டை இடதுபக்கம் சரிந்த நிலையில் உள்ளது. கைகளில் காப்புகள், கால்களில் வீரக்கழல், நீளமாக வளர்ந்த காதில் குண்டலமும் அணிந்து காணப்படுகிறார். மீசை திருகி மேல் நோக்கியுள்ளது. வீரனின் சிற்பம் மிக அழகாக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. சிற்ப அமைதியைக் கொண்டு இது  கி.பி.14-15-ம் நூற்றாண்டு விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்தது என்பதை மதுரை தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

இச்சிற்பம் திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் உள்ள விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்த வில் அம்பு ஏந்திய ராம, லட்சுமணர் சிற்பங்களை ஒத்த அமைப்பில் உள்ளது. வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை போன்ற வட மாவட்டங்களில் வில் அம்பு ஏந்திய வீரன் சிற்பத்தை வேடன் கல் அல்லது வேடியப்பன் கல் என அழைக்கிறார்கள். இவ்வூர் பெயர் வேடர் நத்தம் என்பது கூட இவரைக் குறித்து அமைந்த பெயராக இருக்கலாம்.

 

இதன் அருகிலுள்ள நான்கு கால் மண்டபத்தில் கணவன் மனைவி நின்ற நிலையில் 3 அடி உயரமுள்ள ஒரு சதிக்கல் சிற்பம் உள்ளது. இதில் ஆண் வலது கையில் வாளை ஏந்தி, இடது கையை தொடையில் வைத்துள்ளார். பெண் வலது கையை உயரே தூக்கி, இடது கையில் மலர் செண்டு ஏந்தி தொடையில் வைத்துள்ளார். ஆணுக்கு இடதுபுறமும், பெண்ணுக்கு வலதுபுறமும் கொண்டை சரிந்துள்ளது. சிற்பத்தின் மேல்பகுதியில் திருவாசிகை உள்ளது. சதிக்கல் சிற்பம் கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனலாம். இதன் அருகில் மேலும் பல நடுகற்கள் உள்ளன.

 

vijayanagara kingdom age bow warrior statue discovered in virudhunagar thirusuli area

 

நுண்கற்காலத்தைச் சேர்ந்த கருவிகளும் செதில்களும் நடுகற்கள் உள்ள இடத்தில் அதிகம் காணப்படுகின்றன. கி.பி.14-ம் நூற்றாண்டில் தொடங்கிய நடுகல் வைக்கும் வழக்கம், சமீப காலம் வரை இவ்வூரில் தொடர்வது குறிப்பிடத்தக்கது" என்று கூறினார். 

 

 

Next Story

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Case against For the Congress candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்தனர். எனவே மாணிக்கம் தாகூரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story

மடியேந்தி வாக்கு கேட்ட ராதிகா; பிரச்சாரத்தில் ருசிகரம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Radhika asked for vote and Delicious in the campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தனது கட்சியை பா.ஜ.கவில் இணைத்திருந்தார். இதையடுத்து, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுவதற்காக நடிகை ராதிகா சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்த வகையில், ராதிகா விருதுநகர் மாவட்டத்திற்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் கப்பலூர் பகுதியில், அ.ம.மு.க, பா.ம.க, த.மா.க கட்சி நிர்வாகிகளுடன் ராதிகாவும், சரத்குமாரும் திறந்தவெளி ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய ராதிகா, “என்னை நீங்கள் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு சிறப்பான கூட்டணி. இந்த கூட்டணி எது சொன்னாலும் செய்யும் கூட்டணி. ஆனால், எதிர் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று கூட தெரியவில்லை. உங்கள் சகோதரியாக, அக்காவாக, சித்தியாக இருந்து மக்கள் கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் போராடுவேன். எனவே, எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் விருதுநகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்” என்று கூறி அங்கிருந்து புறப்பட தயாரானார்.

அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் கிழக்கு சீமையிலே படத்தில் விருமாயி கதாபாத்திரம் போல் நடித்து காட்டுமாறு கோரிக்கை வைத்தனர். இதனைக் கேட்ட ராதிகா, “அதை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா?” எனக்கூறிய அவர், கிழக்கு சீமையிலே படத்தில் பேசிய வசனத்தை சொல்லி சினிமாவில் வருவது போல் மடியேந்தி மக்களிடம் வாக்கு கேட்டார். அதனை அங்கிருந்த மக்கள், ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.