Skip to main content

ரேஸில் முந்துவாரா விஜயகாந்த்? விட்டுக்கொடுக்குமா பாமக, பு.நீ.க.!

Published on 06/11/2019 | Edited on 07/11/2019

 

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்டது தேமுதிக. முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் உள்பட அக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். அதனைத் தொடர்ந்து 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது தேமுதிக. கள்ளக்குறிச்சி, வடசென்னை, விருதுநகர், திருச்சி ஆகிய நான்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது. 



 

Vijayakanth



நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும் அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடித்து வருகிறது. கடைசியாக விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தது. விஜயகாந்த் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விஜயகாந்த் வருகையும் அதிமுக வேட்பாளருக்கு கூடுதல் பலம் தந்தது. அதனால்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது என்று தேமுதிக கூறி வந்தது. 

selfie


 

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நாம், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை பெற்று கட்சியை பலப்படுத்த வேண்டும். கண்டிப்பாக மேயர் பதவிக்கு போட்டியிட வேண்டும். அது வேலூர் அல்லது சென்னையாக இருக்க வேண்டும் என்று தேமுதிக நிர்வாகிகள் விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவிடம் வலியுறுத்தி வருகின்றனர். 


 

 

மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணி பேச்சுவார்த்தை காலதாமதமானதால்தான் அனைவருக்கும் வேண்டிய தொகுதிகளை எடுத்துக்கொண்டு நாம் விரும்பாத தொகுதிகளை நமக்கு திணித்தார்கள். ஆகையால் இந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தையை நாம் அதிமுக தலைமையிடம் முன்கூட்டியே தொடங்க வேண்டும். அதில் கூட்டணிக் கட்சிகளுக்கான முதல் ஒப்பந்தத்தை நாம்தான் பெற வேண்டும். அப்படி இருந்தால்தான் நாம் விரும்பிய, நமக்கு செல்வாக்கு உள்ள இடங்கள் கிடைக்கும் என்றும் விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவிடம் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். 
 

இதனைத் தொடர்ந்துதான் 07.11.2019 வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதியில் தேமுதிக செல்வாக்கு உள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் தேமுதிகவுக்கு என்ன பலம் இருந்தது உள்ளிட்டவை குறித்தும், எந்தெந்த இடங்களை அதிமுகவிடம் இருந்து பெறலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் விஜயகாந்த் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்பதால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Thiruvalluvar


 

இதேபோல் பாமகவும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மற்றக் கட்சியை விட முந்தி சென்று தங்களுக்கான தொகுதிகளை பெற்றும் தோல்வியை சந்தித்தது. அப்போது போடப்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி அன்புமணி ராமதாஸ் மட்டும் ராஜ்யசபா உறுப்பினரானார். தற்போது பாமகவை பலப்படுத்த வேண்டும் என்றால், உள்ளாட்சித் தேர்தலில் பாமக போதிய இடங்களை பெற வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாமக முன்னாள் தலைவராக இருந்த பேராசிரியர் தீரன் தலைமையில் ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் அரங்க வேலு, கோவிந்தசாமி ஆகியோர் உள்ளனர். இந்த குழுவிடம் வேலூர் அல்லது சென்னை மேயர் பதவிக்கு பாமக போட்டியிட வேண்டும். ஆகையால் மேயர் பதவியை குறி வைத்து அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று பாமக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். 


 

 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக சின்னத்தில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது, அதனால் அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று அதிமுக அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கியது. ஏ.சி.சண்முகமும் வெற்றி வேட்பாளர் தான்தான் என்று அதிமுகவினரையும், தனது கட்சியினரையும் உற்சாகப்படுத்தி வந்த நிலையில் அவர் தோல்வியை சந்தித்தார். அப்போது அவரை சமாதானப்படுத்திய அதிமுக தலைமை, வேலூர் மேயர் பதவியை உங்களுக்கு தருகிறோம் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் தேமுதிக, பாமகவும் சென்னை, வேலூர் மேயர் பதவிகளை குறிவைத்துள்ளது. 
 

உள்ளாட்சித் தேர்தலுக்கு கூட்டணி கட்சிகள் தயாராகிவிட்டது, அவைகள் ஒரே இடங்களை இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகள் கேட்பதால் என்ன செய்வது, கூட்டணி கட்சிகளை எப்படி சமாதானப்படுத்தி இடங்களை பிரித்துக்கொடுப்பது, அதே நேரத்தில் தங்களது கட்சியினரையும் எப்படி சமாளிப்பது என்பது குறித்து அதிமுக தலைமை இன்று மாலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறது. ஆலோசனை முடிவில் கூட்டணிக் கட்சிகளிடம் பேச குழு ஒன்றை அதிமுக அமைக்கும் என்றும், அந்தக் குழு கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து பேசும் என்று கூறப்படுகிறது. 


 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.