Skip to main content

துரோகி கேரக்டரில் நடிப்பதா? எதிர்ப்புச் சுழலில் சிக்கிய விஜய்சேதுபதி! 

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

Muttiah Muralitharan


கிரிக்கெட் வீரர்களுக்கான பயோபிக் படங்களில் தோனி, சச்சின், அசாருதின், கபில்தேவ் என்று பயோபிக் படங்கள் நீண்டுகொண்டே இருக்கிறது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. முரளிதரன் வீழ்த்திய விக்கெட்டுகளைக் குறிக்கும் வகையில் '800' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.


 
முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு தமிழர் அமைப்புகள் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதுமட்டுமல்லாமல் ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

முத்தையா முரளிதரன் இலங்கைத் தமிழர்தான் என்றாலும், அவர் சிங்களக் கொடி பொறித்த சீருடையுடன் இலங்கை அணிக்காக விளையாடியவர். அந்த அணியில் ஒற்றைத் தமிழராக அவர் சாதித்திருக்கிறார் என்றாலும், ஈழத் தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டம் குறித்து அக்கறை செலுத்தியதில்லை. விளையாட்டு வீரராக மட்டும் இருந்திருந்தால், அவரது வரலாற்றுப் படத்திற்கு இத்தனை எதிர்ப்பு இருந்திருக்காது. போர் முடிந்த நிலையில், ராஜபக்சே சகோதரர்களுக்கு ஆதரவானவராக இருந்தார் என்பதுதான் தமிழர்கள் அவர் மீது காட்டும் எதிர்ப்புக்கு காரணம்.

 

சிங்களன் எதிரி என்றால், தமிழரான முத்தையா முரளிதரன் துரோகி என்பது அவர் களின் பார்வை.

 

இப்போதும் கூட, தமிழர்களைக் கொன்று குவித்த அன்றைய இலங்கை அதிபரும் இன்றைய இலங்கை பிரதமருமான மஹிந்த ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சே, முத்தையா முரளிதரனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி குறித்து முத்தையா முரளிதரன் அண்மையில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், "திரைக்கதை ரெடியானவுடன், நாங்கள் இதற்கு விஜய் சேதுபதியை நடிக்க வைக்கதான் யோசித்தோம். அவர் ஒரு திறமையான நடிகர் என்று நான் நினைக்கிறேன். அவர் முழுமையான நடிகர் என்று நம்புகிறேன். மேலும், அவர் கண்டிப்பாக படத்திற்கான அதிசயத்தை நிகழ்த்துவார்'' என்றார்.

 

ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் போஸ்டர்களில் முத்தையா முரளிதரனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது விஜய்சேதுபதியின் கெட்டப். தமிழில் எடுக்கப்படும் '800' படம், தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் டப் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹிந்தி மற்றும் சிங்கள மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸாகும் என்றும் சொல்லப்படுகிறது.

 

Ad

 

படத்தைப் படமாகத்தான் பார்க்க வேண்டும். இதில் அரசியல் பார்வை வேண்டாம் என்கிறது முத்தையா முரளிதரனுக்கு ஆதரவான குரல்கள். ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறையுள்ளவர்களோ, ராஜபக்சேக்களை ஆதரித்து நின்றவரின் அரசியல் விளையாட்டை எப்படி அரசியல் கலக்காமல் பார்க்க முடியும் என்கின்றனர்.

 

அத்துடன், இலங்கை சிங்கள அரசு என்பது ஈழத் தமிழர்களுக்கு மட்டும் எதிரானதல்ல, தமிழகத்தில் உள்ள மீனவர்களையும் சுட்டுக் கொன்ற கொடூர அரசு. அந்த அரசாங்கத்தின் அடையாளமான சிங்கம் முத்திரை பொறித்த நீலநிற ஜெர்ஸியில் தமிழக நடிகரான விஜய்சேதுபதி நடிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? துரோகி கேரக்டரில் நடிப்பதும் துரோகம் தானே? என்கின்றனர்.

 

கோபத்துடனும் வேகத்துடனும் கோரிக்கையுடனும் இந்தப் படத்தில் நடிப்பதை கைவிடுமாறு விஜய்சேதுபதிக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சுழற்பந்து வீச்சாளர் பற்றிய படத்தில் ஹீரோவாகி எதிர்ப்புச் சுழலில் சிக்கியுள்ள விஜய்சேதுபதி எடுக்கும் முடிவு நல்லதாகவே இருக்கும் என நம்புகிறார்கள் அவரது ரசிகர்கள்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.