Skip to main content

கரோனா குறித்து முன்பே எச்சரித்த உளவுத்துறை... கண்டுகொள்ளாத மோடி... எமர்ஜென்சியை கொண்டு வர முடிவு?

Published on 09/04/2020 | Edited on 10/04/2020


ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகச் சில முக்கிய முடிவுகளைப் பிரதமர் மோடி எடுத்துள்ளதாக டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத்திலுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்தப்படும் ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்கிறது அதிகாரிகள் தரப்பு.
 

கரோனாவின் தாக்கம் அதிகரித்து இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் நிலையில்,மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்தார் எடப்பாடி.அந்த ஆலோசனையில், கொரோனாவின் பாதிப்பு இரண்டாவது கட்டத்தில்தான் இருக்கிறது மூன்றாவது நிலைக்குப் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் சீரியஸ் காட்ட வேண்டும்.கலெக்டர் அலுவலகத்தைத் தேடி வரும் மக்களே, முகக் கவசமில்லாமலும் சமூக விலகலில் அக்கறைக் காட்டாமலும் இருக்கிறார்கள்.இதனைக் கலெக்டர்கள் கண்டு கொள்வதில்லை.
 

 

lock down



தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் எடுக்கும் முடிவுகள்,உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.அதனை அமல்படுத்துவதில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.மைக்ரோ லெவல் ஆபரேசனில் குவாரண்டைன் பண்ணப்பட்டிருக்கும் பகுதிகளை முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்டவைகளில் இன்னமும் மக்கள் கூடுதல் கட்டுப்படுத்தப்படவில்லை.விலையேற்ற புகாரும் வருகிறது.நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது என்பது உள்பட பல்வேறு விசயங்களைப் பகிர்ந்துகொண்ட எடப்பாடி, மாவட்டம் வாரியாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி அதற்கேற்ப சில யோசனைகளையும் தெரிவித்தார்.

 

http://onelink.to/nknapp


பெரும்பாலான கலெக்டர்கள், ’’மக்களை வீட்டிலேயே முடக்கி வைக்கப்பட்டிருப்பதில் பல பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது.குறிப்பாக, மக்களிடம் வாங்கும் சக்தியும் அத்யாவசியப் பொருட்களின் வருகையும் குறைந்துள்ளது.இதனால்,கரோனாவை விட பசியின் கொடுமை இனி வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும்.அதுகுறித்து அரசு இப்போதே பல முடிவுகளை எடுப்பது நல்லது.சமூகத் தொற்று பரவியுள்ளதா என்பதில் முழுமையான ரிசல்ட் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் ஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீட்டிப்பதுதான் சரியானதாக இருக்க முடியும்’’என்பது உள்பட பல்வேறு சிக்கல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் மாவட்ட ஆட்சியர்கள்.

 

admk



இதனையடுத்து சுகாதாரம், வருவாய் நிர்வாகம்,பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடியிடம், தற்போதைய சூழலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதோடு நின்று விடப்போவதில்லை.ரேபிட் சோதனை செய்யும் உபகரணங்கள் வாங்க ஆர்டர் தரப்பட்டு விட்டது.அதன் சோதனை முடிவுகள் நமக்கு அதிர்ச்சியைத் தரலாம். அவர்கள் எங்கெங்கு பயணித்தார்கள் என்பதைக் கண்டறிந்தாலும் அவர்கள் சென்றுள்ள பகுதிகளில் யார் யார் இருந்தார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது கடினம்.

டெல்லிக்குச் சென்று வந்தவர்களை அடையாளம் கண்டறிந்ததில் ஏற்பட்ட கால தாமதம் சமூகத் தொற்றாக மாறும் மூன்றாவது நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டிருக்குமோ என்கிற சந்தேகம் இருக்கிறது.அதனால், ஊரடங்கை நீட்டிப்பதும் வீடுகளை விட்டு மக்கள் வெளியே வராமல் தடுப்பதும்தான் மூன்றாவது நிலை உருவானால் அதனை எதிர்கொண்டு சரி செய்வதற்கான வழி. அதனால், மாவட்ட எல்லைகளை மூடுவதுடன், ஒவ்வொரு பகுதியாக சீல் வைப்பதும் அவசியம்.குறிப்பாக, அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஏரியா வாரியாக சீல் வைப்பது அவசியம்.

 

ias



மக்களுக்குத் தேவையான அத்யாவசியப் பொருட்களை, அரசாங்கமே விநியோகிக்க வேண்டும்.அதாவது, ஏரியாவின் பரப்பளவைப் பொறுத்து 5 அல்லது 10 வீதிகளுக்கு ஒரு குழுவை உருவாக்கி அந்தப் பகுதியில் அவர்களைப் பாதுகாப்பு கவசங்களுடன் அமர வைக்கலாம். அந்தப் பகுதியிலுள்ள மக்கள் தங்களுக்குத் தேவையானதை அந்தக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.2 அல்லது 3 மணி நேரத்தில் அந்தப் பொருட்கள் அந்தக் குழுவிடம் வந்து சேரும்படி செய்து, வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டும் என விவரித்த அதிகாரிகள், நிதிப் பற்றாக்குறை, சுகாதாரப் பணியாளர்களுக்கான உபகரணப் பற்றாக்குறை குறித்தும் தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள்.
 

இதனையடுத்து, நிதித்துறை அதிகாரிகளிடம் விவாதித்த தலைமைச்செயலாளர் சண்முகம், நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டி விரைந்து நிதி உதவி செய்யுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.ஏற்கனவே பிரதமர் மோடியிடம் 12 ஆயிரம் கோடி நிதி உதவியை எடப்பாடி கேட்டிருந்த நிலையில் வெறும் 500 கோடி மட்டுமே அனுப்பி வைத்திருக்கிறார் மோடி.இது மோடியின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிரொலிக்கும் என்கிறது கோட்டைத் தரப்பு.

தற்போதைய சூழல் குறித்து, காங்கிரஸ் எம்.பி.யும் மத்திய அரசின் செயல்பாடுகளைக் கவனித்து வருபவருமான டாக்டர் விஷ்ணுபிரசாத்திடம் பேசிய போது,சீனாவில் கரோனா வைரசின் உக்கிரம் கடந்த டிசம்பர் மாதமே அதிகரித்துவிட்டது.சீனாவிலுள்ள இந்திய தூதரகம்,ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் கொடூரங்களைப் பிரதமர் மோடிக்கு தெரிவித்தே வந்திருக்கிறார்கள். ஆனால், அதன் மீது மோடி அக்கறை காட்ட வில்லை.

உலகளாவிய பாதிப்புகளை அறிந்த மத்திய அமைச்சர்களும் எம்.பி.க்களும் (பாஜக எம்.பி.க்கள் உட்பட ) நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்துவிட்டு இந்தியாவுக்குள் கரோனா நுழைவதைத் தடுக்கும் வழிகளை ஆராய்ந்து அதனைச் செயல்படுத்துங்கள் எனக் கெஞ்சினர்.பிரதமர் மறுத்துவிட்டார்.பிரதமர் அலுவலகத்துக்கும் மத்திய சுகாதாரத் துறைக்குமே கருத்து வேறுபாடுகள் இருந்தன.அதேபோல, மத்திய பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சியைக் கவிழ்த்து பாஜக அரசை கொண்டு வரும் அரசியல் தில்லுமுல்லுகளுக்காக மோடியும் அமித்ஷாவும் திட்டமிட்டுச் செயலாற்றி வந்ததாலும் நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க மறுத்தார்.
 

http://onelink.to/nknapp


வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவுக்குள் வருவதும், வெளிநாட்டுக்குச் சென்ற இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்புவதும் சர்வசாதாரணமாக நடந்தது. அவர்களுக்கான சோதனைகள் செய்யவில்லை.முகக்கவசங்கள், கவச உடைகள், சானிடைசர்கள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் கடந்த 4 மாதங்களாக அதிக அளவில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக கடந்த 15 நாட்களாகத்தான் கடுமையான ஆக்சனை எடுக்கிறார் மோடி.

21 நாட்கள் தேசிய ஊரடங்கினை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும், மூத்த அரசியல்வாதிகளுடனும் விவாதிக்காமல் சர்வாதிக்காரத்தனமாக ஒரு முடிவை எடுத்து அமல்படுத்திவிட்டு இப்போது அவர்களிடம் ஆலோசனை பெறுவதில் என்ன பொருள் இருக்கிறது.இனி வரும் நாட்களில் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளால் தன்னை நோக்கி குற்றச் சாட்டுகள் வீசப்படாமல் இருப்பதற்காகத் தான் இந்த ஆலோசனையை வைத்திருக்கிறார்.ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால், அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விவாதித்துதானே முடிவுகளை எடுத்தேன் எனச் சொல்லி மோடி தப்பித்துக்கொள்ளும் முயற்சி இது.

டெல்லியில் நாங்கள் விசாரித்த வகையில், ஊரடங்கை இன்னும் 15 நாட்கள் முழுமையாக நீட்டிக்கவும், அதனை மத்திய அரசு அறிவிக்காமல் மாநில அரசுகளை வைத்தே அறிவிக்க வைக்கலாமா என்றும், தேசம் முழுவதும் அறிவிக்காமல் அதிகம் பாதிக்கப்பட்ட 274 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கை தொடரலாமா என்றும் அதிகாரிகள் விவாதித்துள்ளனர்.ஆனால், சமூகத் தொற்றாக பரவியிருப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் 274 மாவட்டங்களை மட்டும் தனிமைப்படுத்துவது சரி அல்ல.இப்போதைய ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றே அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.இருப்பினும் என்ன முடிவை எடுப்பதென்பது மோடிக்கு மட்டுமே தெரியும்.கடுமையான எமர்ஜென்சியை அமல்படுத்தவும் அவர் தயங்க மாட்டார் என்கிறார்.

இந்திராகாந்தி நடைமுறைப்படுத்திய நெருக்கடி நிலை காலத்தில் பணிபுரிந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியான தேவசகாயத்திடம் பேசியபோது, கரோனா வைரஸ் இந்தியாவுக்குள் நுழையவிடாமல் தடுத்திருக்க முடியும். தடுக்க வேண்டிய காலத்தில் அரசியல் செய்து கொண்டிருந்த பிரதமர் மோடி,இப்போது அனைவரிடமும் ஆலோசிப்பதும் விவாதிப்பதும் தன் மீதுள்ள எதிர்மறை விமர்சனங்களை மறைப்பதற்காகத்தான். கரோனாவைத் தடுப்பதில் இப்போது இவர்கள் எடுத்து வரும் பல செயல்பாடுகள் தவறானவை.குறிப்பாக,144 தடை உத்தரவே பிறப்பிக்கக் கூடாது.அந்த உத்தரவை அமல்படுத்துவதற்கான சூழல் இதுவல்ல.ஆரம்ப முதலே பல தவறுகளைச் செய்து வரும் மோடி, பைனான்ஸ் எமர்ஜென்சியை கொண்டு வர முடிவு செய்திருக்கிறாரோ என்கிற சந்தேகம் வருகிறது என்கிறார் தேவசகாயம்.
 

இதற்கிடையே கரோனா வைரஸ் மூன்றாவது நிலைக்கு நகராமல் இருக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும் என்றும், கண்காணிப்பில் இருக்கும் பகுதிகளிலும் இந்தக் கட்டுப்பாடுகள் அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

 

 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.