Skip to main content

மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி!

Published on 28/05/2018 | Edited on 29/05/2018
sterlite closed



13 அல்லது அதற்கும் கூடுதலான உயிர்களைப் பலிகொடுத்த பிறகு மக்கள் கோரிக்கை வெற்றி பெற்றிருக்கிறது. மக்களுடைய போராட்டத்துக்கு மதிப்பளிக்காமல் அவர்களை காக்கை குருவிகளைப் போல சுட்டுக்கொன்று அச்சுறுத்த முயன்ற அரசப்பயங்கரவாதம் தோற்றிருக்கிறது. மெல்லக்கொல்லும் விஷ ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்கள் தொடர் போராட்டம் நடத்திய மக்கள், 100வது நாள் மாவட்ட ஆட்சியரைத்தான் சந்திக்கச் சென்றார்கள். ஆனால், ஆட்சியாளர்கள் துப்பாக்கியால் சந்தித்தார்கள்.

துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியான மக்களுக்கும், குண்டுகளால் காயம்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மக்களுக்கும் தமிழகமே வீரவணக்கம் செலுத்துகிறது. இந்த அரசாணை ஏன் மே 22ஆம் தேதியோ, அதற்கு அடுத்த நாளோ வெளியிடவில்லை? என்ற கேள்வி இப்போது எழுகிறது.

 

 


மக்களை அச்சுறுத்தி விடலாம். அவர்களுடைய போராட்ட உணர்வை நீர்த்துப்போகச் செய்துவிடலாம் என்று அரசு எதிர்பார்த்தது. அதனால்தான் இணையச் சேவையை முடக்கியது. போலீஸைக் குவித்தது. வீடுவீடாகச் சென்று இளைஞர்களையும், போராட்டக்காரர்களையும் அடித்து நொறுக்கி மிரட்டிப் பார்த்தது. ஆனால், எதுவும் தூத்துக்குடி மக்களை அசைக்க முடியவில்லை. அவர்கள் ஸ்டெர்லைட்டை மூடியே தீரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டத்தை தொடர்வோம் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல அமைச்சர்களே பயந்தார்கள். ஒருவழியாக அமைதியை ஏற்படுத்திவிட்டதாக நினைத்து, பாதிக்கப்பட்டவர்களை பார்க்க அமைச்சர்கள் சென்றபோதுதான் அவர்களுடைய போராட்ட உணர்வு மங்கவே இல்லை என்பதையும், அரசுக்கு எதிரான மக்களுடைய கோபத்தை அடக்க முடியவில்லை என்பதையும் உணர்ந்தார்கள்.

 

 


அதுமட்டுமின்றி, வைகோவும், ஸ்டாலினும் 10 மாவட்ட மக்களைத் திரட்டி தூத்துக்குடி செல்லப் போவதாக அறிவித்தது அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், சட்டமன்றத்தில் திமுக சார்பில் ஸ்டெர்லைட்டை மூட தீர்மானம் கொண்டுவரப் போவதாக கூறப்பட்டது. இது அரசுக்கு ஏற்படுத்திய நெருக்கடி காரணமாகவே அவசரமாக எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

எப்படியோ, மக்களுடைய போராட்ட உணர்வுக்கு கிடைத்த இந்த வெற்றியை உயிர்களை இழந்த வலியையும் மீறி வரவேற்போம்.




 

 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.