Skip to main content

''விசுவாசத்தைக் காட்டியவர்'' எனக் கண்ணீர் விட்டு அழுத சசிகலா! - ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிட முடிவு?

Published on 23/10/2020 | Edited on 26/10/2020

 

Sasikala

 

சிறையில் இருக்கும் சசிகலா இன்னமும் அபராதத் தொகையைக் கட்டவில்லை. அதைக் கட்டுவதற்காக பா.ஜ.க.வின் அனுமதி வேண்டி காத்திருக்கிறார். சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு எடப்பாடி தரப்பிலிருந்து கிளம்பியிருக்கும் எதிர்ப்பு, சசி தரப்பினருக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.


தினகரன்தான் தலைவலி என எடப்பாடி அண்ட் கோ தெரிவிப்பதால், அவருக்கு வாய்ப்பூட்டு போட்ட சசிகலா, தினகரன் கையில் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் வரவேண்டும் என காய் நகர்த்திய அவரது மனைவி அனுராதா, சசிகலாவுக்கு ஜெ.வைப்போல வேஷமிட்டு மக்கள் மத்தியில் வெறுப்புவர காரணமாக இருந்த கிருஷ்ணப்பிரியா, விவேக், ராவணன் உட்பட அனைவரையும் மவுன விரதம் கடைப்பிடிக்க வைத்தார் சசிகலா.

 

ammk

 

ஒட்டுமொத்த குடும்பமே மவுனமான நேரத்திலும் தினகரனால் சும்மா இருக்க முடியவில்லை. அ.ம.மு.க சார்பில் தமிழகம் எங்கும் போஸ்டர்கள், பேனர்கள், சுவர் எழுத்துகள் என ஆக்டிவாக இருப்பதாகக் காட்டிக்கொண்டார். அத்துடன் அ.ம.மு.க தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தினார். கரோனாவுக்கு பயந்து தனது குடும்பத்துடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு வீட்டில் ஒதுங்கியிருந்தார் அ.ம.மு.க பொருளாளரான வெற்றிவேல். அவரையும் விடாமல் துரத்தி அந்த ஆலோசனைக் கூட்டங்களில் பங்கெடுக்க வைத்தார் டி.டி.வி. தினகரன். அதுதான் வெற்றி வேல் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி. அதனால் கரோனா நோய் தாக்கிய வெற்றிவேல் இறந்துபோனார்.

 

இது சசிகலாவை பெரிதும் வருத்தமடையச் செய்தது. பெங்களூருவில் இருந்து தினகரனை தொடர்பு கொண்ட சசிகலா, "எதுக்குப்பா இந்த ஆலோசனைக் கூட்டங்களெல்லாம் நடத்துன? அதுக்கு வந்ததால வெற்றிக்கு கரோனா வந்து, இப்போ இறந்துபோற நிலைமை ஆயிடுச்சே... வெற்றி மாதிரி நமக்கு உழைக்க இன்னொரு ஆளு கிடைக்குமா? அக்கா(ஜெ) அப்பல்லோவுல இருந்த வீடியோவை வெளியிட்டு அதனால வந்த எதிர்ப்புகளையெல்லாம் வீரமா சமாளிச்சிட்டு நின்னு விசுவாசத்த காட்டியவர் வெற்றிவேல்'' எனக் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் சசிகலா.

 

Jayalalithaa

 

"உன்னத்தான் சைலண்டா இருக்க சொல்லியிருக்கேன்ல. இப்போ ஒரு உயிர் போச்சே'' என்கிற சசிகலாவின் சூடான வார்த்தைகளால் நொந்துபோன டி.டி.வி., வெற்றிவேலின் படத்துக்கு அஞ்சலி செலுத்த காரின் பின்சீட்டில் அமர்ந்து சத்தம் இல்லாமல் வந்து போனார் என்கிறார்கள் அ.ம.மு.க.வினர்.

 

சசிகலாவுக்காக பா.ஜ.க.விடம் சுப்பிரமணிய சாமி பேசிக் கொண்டிருக்கிறார். "சசிகலா இன் - தினகரன் அவுட்' என்கிற ஃபார்முலாபடி பேச்சுவார்த்தைகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இ.பி.எஸ்.ஸின் கை, பாஜக - சசிகலா பேச்சுவார்த்தையில் இடைமறித்தல் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. இப்போதுவரை இந்த விவகாரத்தில் இ.பி.எஸ்.ஸின் கையே ஓங்கி இருக்கிறது. இந்நிலையில், ஓ.பி.எஸ் மகனின் தனி விமானத்திலான மொரீசியஸ் பயணத்தில், டிடிவி தினகரனுக்கு நெருக்கமான நயினார் என்ற பெயருடைய தி.நகரைச் சேர்ந்த ஒரு பிஸ்னஸ் மேனும் உடன் சென்றிருக்கிறார் என்ற தகவல் இ.பி.எஸ் முகாமை கலவரமடையச் செய்துள்ளது.

 

ttv Dinakaran ammk

 

இ.பி.எஸ்.ஸை பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் வரை பா.ஜ.க.வை பகைத்துக்கொள்ள தயாராக இல்லை. அமித்ஷா ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி என சொல்லியிருப்பது எடப்பாடி தரப்பை, பா.ஜ.க நாங்கள் சொல்வதைத்தான் கேட்கும் என உறுதியாகப் பேச வைத்திருக்கிறது.

 

இது சசிகலா தரப்பினருக்கு சங்கடத்தை உருவாக்கியுள்ளது. சசிகலா தனது அபராதத் தொகையைக் கட்ட கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்திற்கு இந்த வாரத்துக்குள் பா.ஜ.க க்ரீன் சிக்னல் கொடுத்துவிடும் என பேசி வந்த அவரது சொந்தங்கள், இன்னமும் பா.ஜ.க - சசிகலாவுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முடியவில்லை என்கிறார்கள். ஆனாலும் சசிகலா தரப்பு நம்பிக்கையை இழக்கவில்லை.

 

cnc

 

மறைந்த வெற்றிவேல் வசம் கொடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வீடியோ ஆதாரங்களைக் கண்டெடுத்து கைப்பற்ற சசிகலா உத்தரவிட்டிருக்கிறார். மொத்தம் 12 வீடியோக்கள் இருக்கிறது. அவையெல்லாம் சசிகலா, ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது எடுத்த வீடியோக்கள். அந்த வீடியோக்களில் ஜெயலலிதா சசிகலாவை புகழ்ந்து சசிகலா செய்து வரும் பணிவிடைகளை பாராட்டி மூச்சுத் திணறலுடன் மரண வாக்கு மூலம்போல பேசியிருக்கிறார் என்கிறார்கள்.

 

நாளை ஒரு வேளை எடப்பாடி கை ஓங்கி, சசிகலாவை அ.தி.மு.க.வில் அனுமதிக்க மறுத்தால் சட்டப்படி ஜனவரி மாதம் வெளியேவரும் சசிகலா, ஜெயலலிதா மரணத்தில் தன் மீதான பழியை உடைக்க அவர் வீடியோக்களை ஒவ்வொன்றாக தேர்தல் முடியும் வரை வெளியிட்டு, அ.தி.மு.கவினரைத் தன் வசப்படுத்துவார் என்கிறது மன்னார்குடி வட்டாரம்.

 

இதை எப்படிச் சமாளிப்பது என ஆலோசித்த எடப்பாடி, சசிகலா வெளியே வந்தால் அவர் யாரை சந்திக்கிறார் என்பதை மட்டும் கவனிக்க வேண்டும். மற்றபடி அவருக்குப் பதில் கொடுக்கும் பொறுப்பு அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஒப்படைப்பது என முடிவெடுத்துள்ளார் என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

 

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.