Skip to main content

'கிறிஸ்தவ மாணவர்கள் மட்டும்தான்...' அடம் பிடிக்கிறதா வேலூர் சி.எம்.சி? - நீட் எதிர்ப்பு பற்றி விளக்கம்    

Published on 01/06/2018 | Edited on 01/06/2018

'நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர்களை எங்கள் கல்லூரியில் சேர்க்கமாட்டோம்' என உச்சநீதிமன்றம்வரை சென்று சட்டப்போராட்டம் நடத்துகிறது வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி. கடந்த வாரம், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சி.எம்.சி.யின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்துகொண்டு பெருமைப்படுத்திய நிலையில், அதனை நோக்கி சர்ச்சைகளும் சுழல்கின்றன.

 

cmc



நீட் தேர்வுக்கு எதிராக சி.எம்.சி. போட்ட வழக்கு தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் தமிழக நிர்வாகி திருப்பதி நாராயணன் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். "நீட் தேர்வு முறையால் தங்களுடைய கல்லூரியில் படிப்பதற்கு தகுதியும் பொருத்தமும் உள்ள மாணவர்களை மட்டுமே சி.எம்.சி. தேர்வு செய்கிறது. பொருத்தம் என்பது கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. இந்த அடிப்படைக் கொள்கையை தகர்ப்பதால்தான் சி.எம்.சி. நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளது. இதுநாள்வரை 100 எம்.பி.பி.எஸ். இடங்களில் 85 இடங்கள் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்களுக்கே ஒதுக்கப்பட்டு வந்தது. பெரும்பாலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஆங்கிலமொழி வழியில் படித்தவர்களாகவுமே சி.எம்.சி. தேர்வு செய்திருக்கிறது. இதையெல்லாம் தமிழுக்காக குரல் கொடுப்பவர்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை'' என்று அந்த பதிவில் கூறியிருந்தார். இதே தொனியில் பல்வேறு கருத்துகளை இந்துத்வா சார்பானவர்கள் வாட்ஸப் குழுக்களில் பரப்பிவந்தார்கள். 

 

 


இது தொடர்பாக சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியின் முக்கிய நிர்வாகிகள் இருவர், 'பெயரை வெளியிட வேண்டாம்' என்ற நிபந்தனையோடு பேசினர்…

"நாங்கள் நீட்டை எதிர்த்து நீதிமன்றம் செல்லவில்லை... நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் எங்களுக்குத் தேவையான மாணவர்களை நாங்கள் தேர்வு செய்துகொள்கிறோம் என்றுதான் கேட்கிறோம். காரணம், இது முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படும் கல்லூரி. இங்கு படிக்க வருபவர்களுக்கு சேவை மனப்பான்மை இருக்கவேண்டும். குழுவாக இணைந்து செயல்படும் மனப்பக்குவம், தலைமைப் பண்பு இருக்கிறதா என்பதை பார்த்து சீட் வழங்குகிறோம். இங்கு படித்து தேறுகிறவர்கள், இந்தியாவின் பல பகுதிகளில் -குறிப்பாக பழங்குடியினர், ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் சி.எம்.சி. இயக்கும் 150 சிறிய மருத்துவமனைகளில் 10 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். இந்த விதியை நிறைவேற்றும் மாணவர்களுக்கே மேற்படிப்புக்கு சீட் கொடுக்கிறோம். இதை வேறு எந்தக் கல்லூரியும் கடைப்பிடிப்பதில்லை.


 

cmc building



சி.எம்.சி. இருபாலர் கல்லூரியாக இருந்தாலும் குறைந்தது 51 சதவீதம் பெண்களுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்பது விதி. பெண் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறோம். இந்த விதிகளை 1947-ல் இருந்து கடைப்பிடித்து வருகிறோம். எங்களின் வழிமுறையை பார்த்து இந்திய மருத்துவக் கவுன்சிலே வியப்புத் தெரிவித்துள்ளது. இந்த விதிகளை தகர்க்கும்விதமாக நீட் வந்ததால்தான் எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளோம். எனவேதான் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்தோம். இன்னும் தீர்ப்பு வராத நிலையில், இந்த ஆண்டு விளம்பரம் செய்து விண்ணப்பங்களை பெற்றுள்ளோம். சேர்க்கை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. 

 

 


கேரளா, தமிழகம் என எங்களிடம் எந்த பிரிவினையும் கிடையாது. சி.எம்.சி. நுழைவுத் தேர்வு மிகவும் கடினமானது. சி.எம்.சி. நுழைவுத்தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கேரளாவில் திருச்சூர், பாலக்காடு உட்பட பல இடங்களில் பலரும் பயிற்சி மையங்கள் வைத்து நடத்துகிறார்கள். அவர்கள் தேர்வு எழுதுகிறார்கள், வெற்றி பெறுகிறார்கள். தமிழகத்தில் யாரும் அப்படி பயிற்சி மையங்கள் நடத்துவதில்லை. தகுதியிருப்பவர்களுக்கு மட்டுமே இங்கு சீட். கல்லூரியின் இயக்குநர் பிள்ளைகளுக்கே சீட் கிடைக்காமல் வேறு படிப்பு படிக்கிறார்கள்.

  ramnath at cmc



இதுவரை, சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் பெரும்பான்மை மதத்தினர் அதிகமாக படித்தனர். ஆனால் பா.ஜ.க. அரசு, "சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 85 சதவீதம் சிறுபான்மைப் பிரிவு பிள்ளைகள் படிக்க வேண்டும்' என்ற விதியைக் கொண்டுவந்துள்ளது. "இல்லையென்றால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' எனக் கூறியுள்ளது. இந்த உண்மை நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். நீட் தொடர்பான சட்டப் போராட்டத்தில் வெல்லும்போது உண்மை நிலை எல்லோருக்கும் புரியும்'' என்றார்கள்.




 

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்