Skip to main content

பரமதிருப்தியுடன் ஏ.சி.எஸ்.! சமாளிக்கும் திட்டத்துடன் துரைமுருகன்!

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

 

தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை குறிவைத்து நடந்த ரெய்டு, 11.5 கோடி ரூபாய் பணம் பறிமுதல், இவற்றால் நிறுத்தப்பட்ட வேலூர் எம்.பி. தொகுதி தேர்தல் ஆகஸ்ட் 05-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நிறுத்தப்பட்டபோது வேட்பாளர்களாக இருந்த தி.மு.க. கதிர் ஆனந்தும், புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகமும், நாம் தமிழர் தீபலட்சுமியும் இப்போது மீண்டும் களம் காண்கிறார்கள். 
 

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் பணத்தை தண்ணீராக வாரி இறைத்திருந்ததோடு... குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கும் தாராளமாக செலவு செய்திருந்தார். வேலூர் எம்.பி. தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும் இரு எம்.எல்.ஏ. தொகுதிகளின் தேர்தல் நடந்து, இரண்டிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 


  durai murugan - a c shanmugam


 

வேலூர் எம்.பி. தொகுதிக்குள் அடங்கிய வேலூர், குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி)  சட்டமன்றத் தொகுதிகள் எடப்பாடியின் நேரடி மேற்பார்வையிலும்; வாணியம்பாடி, அணைக்கட்டு, ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிகள் ஓ.பி.எஸ்.சின் நேரடி மேற்பார்வையிலும் தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டது ஆளும்கட்சி. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 4 அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள், அவர்களுக்கான தொகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம் எடப்பாடி. வேட்பாளர் ஏ.சி.எஸ்., தேர்தல் பணியாற்றும் ஆளும் கட்சியினரை மகிழ்விக்க, ஆம்பூர், வாணியம்பாடி, ஆற்காடு பகுதிகளில் இருக்கும் பிரியாணி மாஸ்டர்களை மொத்தமாக புக் பண்ணிவிட்டாராம். ஏ.சி.எஸ்.ஸின் தாராளம், வேலூர் மாவட்ட அ.தி.மு.க.வினரிடம் சுறுசுறுப்பைக் கூட்டியுள்ளது. 
 

தொகுதியில் இருக்கும் 3 லட்சம் இஸ்லாமிய வாக்குகளைக் கவர்வதற்கு ஸ்பெஷல் திட்டம் ஒன்றையும் வைத்துள்ளாராம் ஏ.சி.எஸ். அனைத்து ஏற்பாடுகளையும் பக்காவாக செய்துவிட்ட பரமதிருப்தியுடன் அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் 11-ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டார் ஏ.சி.சண்முகம். 
 

அதிரடி காட்டும் ஏ.சி.எஸ்.ஸை எதிர்கொள்ள எதிரடி வியூகத்திற்கு தயாராகிவிட்டது தி.மு.க. பணம் பறிமுதல் தொடர்பாக கதிர் ஆனந்த் மீது வழக்கு உள்ளதால், வேட்புமனு பரிசீலனையின்போது, ஆளும் கட்சி ஏதாவது குடைச்சல் கொடுத்தால் சமாளிக்கும் திட்டத்தை கையில் வைத்திருக்கிறார் துரைமுருகன். 


 

கதிர் ஆனந்த் வெற்றி பெறக்கூடாது என சாதி ரீதியாக நடக்கும் மூவ்மெண்டுகளையும் ஈகோ பிரச்சனையால் விலகி நிற்கும் சொந்தக் கட்சி நிர்வாகிகளையும் எச்சரிக்கை பாணியில் சமாளித்திருக்கிறார் துரைமுருகன். அதே சமயம் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களைத் தேடிச் சென்று நெருக்கம் காட்டி வருகிறார். 

இதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் ஜெகத்ரட்சகன், ஆர்.காந்தி, ஏ.பி.நந்தகுமார், முத்தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு பொன்முடி, அணைக்கட்டு தொகுதிக்கு ஐ.பெரியசாமி, கே.வி.குப்பத்திற்கு கே.என்.நேரு, குடியாத்தம் தொகுதிக்கு தா.மோ.அன்பரசன், ஆம்பூருக்கு எ.வ.வேலு, வாணியம்பாடிக்கு ஈரோடு முத்துசாமி என தி.மு.க. வி.ஐ.பி.க்களையும் தேர்தல் பணிக்காக களத்தில் இறக்கியுள்ளார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க பரப்புரையில் திடீர் எண்ட்ரி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்; அடுத்தடுத்து நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Minister Durai Murugan who made a sudden entry in the BMC lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன. 

அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ம.க, த.மா.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே போல், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட், இந்தியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, பிரச்சாரக் களத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில், பா.ஜ.க தலைமையிலான பா.ம.க கட்சிக்கு, வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளிமலை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியை ஒதிக்கியுள்ளது. இந்த மக்களவைத் தொகுதியில், பா.ம.க வேட்பாளராக பாலு களமிறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பா.ம.க வேட்பாளர் பாலு பிரச்சாரம் செய்த போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவ்வழியே வந்த போது அங்கு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பா.ம.க வேட்பாளர் பாலு, அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று (15-04-24) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சனை ஆதரித்து பரப்புரை செய்து முடித்துவிட்டு, பா.ம.க வேட்பாளர் பரப்புரை செய்த அந்த வழியாக வந்தார். அப்போது, அமைச்சர் துரைமுருகனை பார்த்த பா.ம.க வேட்பாளர் பாலு, “எனக்கு முருகன் அருள் கிடைத்திருக்கிறது. அண்ணன் துரைமுருகனின் அன்பான ஆசிர்வாதமும், அருளும் என்னை வெற்றிபெற வைக்க வேண்டும். என்று கூறிவர், உங்கள் வாழ்த்தை நான் அடிபணிந்து ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறினார். 

மேலும், நான் நிச்சயமாக வெற்றி பெற்று விடுவேன். இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதும், உங்களை நேரில் வந்து சந்தித்து என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார். அதற்கு அமைச்சர் துரைமுருகனும், முகம் சுளிக்காமல் சிரித்துக்கொண்டே சென்றார். இதனால், அப்பகுதியில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது. 

Next Story

"ஊருக்குள் வரக் கூடாது அங்கேயே நில்லுங்கள்” - அமைச்சருக்கு எதிர்ப்பு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kanikapuram area People  struggle against Minister Durai Murugan

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராமாபுரம் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் நேற்று அமைச்சர் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்த் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அமைச்சர் உட்பட அரசியல்வாதிகள் வருவதை கண்ட அப்பகுதி மக்கள் சாலையை வழிமறித்து ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

அப்போது ஒரே சமூகத்தினர் உள்ள ஊரில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு சாலையில் மரக்கட்டைகளும்,  இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஊருக்குள் நுழைய விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து நுழைய முயற்சித்த கட்சியினரை ஊருக்குள் வராதே, என்ன செய்தார் எம்.பி. 5 ஆண்டுகளில் சாலை கூட சரியாக போடவில்லை. எங்கள் ஓட்டு உங்களுக்கு இல்லை என எதிர்ப்பை தெரிவித்து ஊருக்குள் வர விடாமல் தடுத்தனர்.  இதனால் அங்கு வாக்குவாதம் ஆகி பரபரப்பாகியது மேலும் அத்துமீறி நுழைந்தால் வாகனத்தின் மீது மது பாட்டிலும், கற்களையும் வீசி கண்ணாடியை உடைப்போம். அசிங்கப்படாமல் போய்விடுங்கள் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்காமல் வந்த வழியே திரும்பிச் சென்றனர். தனது சமூகத்தைச் சேர்ந்த நபர்களிடம் வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர் துரைமுருகனை அதே சமூகத்தினர் விரட்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.