Skip to main content

தொகுதியை அறிவோம் - வேலூர் பாராளுமன்ற தொகுதி

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

 


வேலூர் நாடாளுமன்ற தொகுதி என்பது வேலூர், அணைக்கட்டு, கீழவைத்தான்குப்பம் என்கிற கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), ஆம்பூர், வாணியம்பாடி என 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் வேலூர், அணைக்கட்டு என இரண்டு தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. மீதியுள்ள நான்கு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. அதில் தற்போது, ஆம்பூர், குடியாத்தம் (தனி) என இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளது.


2019 தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வாக்காளிக்கப்போகும் வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலையில் 14,07,817 பேர் உள்ளனர். 2014 தேர்தலின்போது, இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 12,80,415. ஆண்களை விட பெண்கள் 10 ஆயிரம் பேர் கடந்த தேர்தலில் அதிகமாக இருந்தனர். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் புதிய வாக்காளர்கள் 1,30,000 அளவுக்கு உள்ளனர்.
 

vellore parliamentary constituency


இந்த தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்த்துவர்கள், முதலியார்கள், வன்னியர்கள் வலிமையாக உள்ளார்கள். இஸ்லாமியர்கள் வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பவையாக உள்ளன.


இந்தியா சுதந்திரம் அடைந்த பின் நடைபெற்ற பொதுத்தேர்தல்களின்போது இந்த தொகுதி மற்ற தொகுதிகளைப்போல் இரட்டை தொகுதியாகத்தான் இருந்தது. அதன்பின் 1962 முதல் ஒருவர் மட்டுமே நிற்கும் வகையில் மாற்றப்பட்டது. 1951ல் இடதுசாரியான ராமசந்திரரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.முத்துக்கிருஷ்ணனும், 1957ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன், முனியசாமியும் வெற்றி பெற்று எம்.பி.க்களாக இருந்தனர்.


1957க்கு பின் நிலைமை மாறத் தொடங்கியது. 1967ல் இந்த தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னம் வெற்றி பெற்று இங்கு தனது கணக்கை தொடங்கியது. அதுமுதல் திமுக அல்லது திமுகவோடு கூட்டணி வைப்பவர்களே பெரும்பான்மையாக வெற்றி பெற்று வந்தனர், வருகின்றனர். 1967ல் திமுகவின் குசேலர், 1971ல் திமுகவின் உலகநம்பி, 1977ல் காங்கிரஸ்சின் தண்டராயுதபாணி, 1980ல் சுயேட்சை சின்னத்தில் அப்துல்சமத், 1984ல் ஏ.சி.சண்முகம், 1989ல் காங்கிரஸ்சின் அப்துல்சமத், 1991ல் காங்கிரஸ்சின் அக்பர்பாஷா, 1996ல் திமுக அகரம்சேரி சண்முகம், 1998 மற்றும் 1999ல் பாமக என்.டி. சண்முகம், 2004ல் திமுக சின்னத்தில் இந்தியன் முஸ்லிம் லீக் காதர்மொய்தீன், 2009ல் திமுக சின்னத்தில் இந்தியன் முஸ்லிம் லீக் அப்துல்ரஹ்மான், 2014ல் அதிமுகவின் செங்குட்டுவன் என வெற்றி பெற்றனர்.
 


அந்த வகையில் காங்கிரஸ் 6 முறையும், திமுக 3 முறையும், திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் 4 முறையும், அதிமுக இரண்டு முறையும், திமுக, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து பாமக தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.
 


இந்த தொகுதியில் வெற்றி பெறுபவர்கள் பெரும்பாலும் தமிழக அரசியல் களத்திலும், அரசியலுக்கு அப்பாலும் பெரும் பேரோடும், புகழோடும் விளங்கிவந்தனர் என்பது அரசியல் வரலாறு. அந்த வரலாற்றை உடைத்தவர் 2014 முதல் 2019 வரை எம்.பியாக இருந்த செங்குட்டுவன்.


 

palar



இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள் நிறைந்து வாழ்வதால் இந்த தொகுதியில் நிற்கும் இஸ்லாமிய வேட்பாளர்கள் பெரும்பாலும் வெளியூர் வேட்பாளர்களாக இருப்பார்கள். அப்படி நின்று வெற்றி பெற்று எம்.பி.யானவர்கள், தங்களது பெயர் நிலைத்து நிற்கும் வகையில் இந்த தொகுதிக்கு ஏதாவது செய்துவிட்டே சென்றனர். ஆனால் வேலூர் மாநகரத்தை பூர்விகமாக கொண்ட எம்.பி செங்குட்டுவன், வெற்றி பெற்றபின் இந்த தொகுதி மக்களுக்கு நன்றி கூட சொல்லவில்லை என்பதே காலத்தின் கோலம்.
 


இதற்கு முன்பு இருந்த எம்.பி அப்துல்ரஹ்மான், ஆம்பூர் நகரில் அடிக்கடி தேசிய நாற்கர சாலையில் விபத்துக்கள் நடப்பதால் மேம்பாலம் அமைக்க முயற்சி எடுத்து 70 சதவிதம் வெற்றி பெற்றார். இன்னும் பாலம் பணிகள் தொடங்கவில்லை. அதேப்போல் வாணியம்பாடியில் இரயில்வே மேம்பாலம் அமைத்து தந்து மக்களின் பாராட்டை பெற்றார்.
 

 
இந்த தொகுதி மக்களின் பிரதான கோரிக்கைகள்.
 

1. ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதியான பாலாற்றில் தற்போது மணல் லாரிகள் தான் நிரந்தரமாக ஓடுகின்றன. அதோடு, தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் பாலாற்றில் கலந்து மண்ணை, தண்ணீரை மலடாக்கியுள்ளன. கடந்த 30 ஆண்டுகாலமாக பாலாற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என்பது இம்மக்களின் கோரிக்கை. இதற்காக பலப்பல அமைப்புகள் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, இராணிப்பேட்டை நகரங்களில் தனித்தும், ஒன்றிணைந்து இயங்கியும் இதனை சரிச்செய்ய கடும் முயற்சி செய்து வருகின்றனர். நாங்கள் வெற்றி பெற்றால் இதனை சீர்செய்வோம், தடுப்போம் என்கிற எந்த எம்.பியும் அதற்காக எங்கும் சிறுதுரும்பையும் அசைப்பதில்லை.
 

2.   மூடப்பட்ட தமிழ்நாடு அரசின் வெடிமருந்து தொழிற்சாலையில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக வேலை செய்து வந்தனர். அந்த தொழிற்சாலை படிப்படியாக தொழிலாளர்களை குறைந்து, தற்போது நிரந்தரமாக மூடப்பட்டது. இதனை திறக்க மத்தியரசின் தடையை உடைக்க கடந்த 10 ஆண்டுகளாக எந்த எம்.பியும் முயற்சிக்கவில்லை. இதனால் நிரந்தரமாக மூடப்பட்டதை, இனி வெற்றி பெற்று வரப்போகும் எம்.பியாவது திறக்க முயல வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
 

3.   குடியாத்தம் வெளிப்புறச்சாலை ( பை-பாஸ் ), நெசவுப்பூங்கா போன்றவை தேவை என்பது பல வருட கோரிக்கை இந்த கோரிக்கைளும் நிறைவேறவில்லை.
 

4.   வேலூர், பள்ளிக்கொண்டா, மாதனூர், ஆம்பூர், வாணியம்பாடி நகரங்களின் குடிநீர் தேவையை காதர்மொய்தீன் எம்.பியாக இருந்தபோது, உள்ளாட்சிதுறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்த ஸ்டாலினிடம் சொல்ல அவர் ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வழியாக தீர்த்து வைத்தார். ஆனால், வேலூர் தொகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பது 25 வருட கோரிக்கை அதையும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை.
 

இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், இந்த தொகுதியில் வாழும் பெரும்பான்மை சமூகத்தின் மனதை வெல்பவர்களே வெற்றியை ருசிப்பார்கள்.


 

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.