Skip to main content

கல்வியில் கடைசி இடத்தை விட்டுதராத வேலூர் மாவட்டம்!!! காரணம்...

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29ந்தேதி வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.
 

vellore



இதில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 98.53 சதவிதம் அளவுக்கு தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தையும், தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டம் 98.48 சதவித அளவுக்கு மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்தது.
 

இதில் வேதனையான தகவல் இந்த ஆண்டும் வேலூர் மாவட்டம் கடைசியிடத்தை பிடித்துள்ளது. 2018-2019 ஆம் ஆண்டில் 89.98 சதவிதம் அளவே மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்று 32 மாவட்டங்களில் கடைசி இடத்தை பிடித்துள்ளது இம்மாவட்டம். இந்த ஆண்டு மட்டுமல்ல கடந்த சில ஆண்டுகளாகவே தேர்ச்சி விகிதத்தில் கடைசி இரண்டு இடங்களிலேயே உள்ளது வேலூர் மாவட்டம்.


ஏப்ரல் 19ந்தேதி வெளிவந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவுகளில் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தையே பிடித்திருந்தது. 12 ஆம் வகுப்பிலும் தொடர்ச்சியாக கடைசி இடத்தையே பிடித்துவருகிறது வேலூர் மாவட்டம்.
 

வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடிப்பது தொடர்பாக ஆசிரியர்கள் தரப்பில் பேசும்போது, இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மிக முக்கிய காரணங்கள் என்றால் இந்த மாவட்டம் அடிப்படையில் மிகப்பெரிய மாவட்டம், பள்ளிகள் அதிகமாகவுள்ளது. ஒரு பள்ளிக்கு ஒருவர் ஃபெயில் என்றாலும் அதிக பள்ளிகள் உள்ளதால் அதிக மாணவ-மாணவிகள் ஃபெயிலாகி தேர்ச்சி விகிதம் குறைந்து, கடைசி இடத்துக்கு போய்விடுகிறது. அதேபோல் இங்கு அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெரும் பள்ளிகள் அதிகம். முதல் 10 இடங்களை பிடிக்கும் மாவட்டங்களை பாருங்கள், அங்கெல்லாம் அரசுப்பள்ளிகளைவிட தனியார் பள்ளிகள் அதிகம் அதனால்தான் அங்கு தேர்ச்சி சதவிதம் அதிகம், இங்கு குறைவாக உள்ளது என்றார்.
 

மாவட்டத்தில் உள்ள கல்வியாளர்கள் தரப்பில் பேசியபோது, பெரிய மாவட்டமாக இருப்பதால், அதிகளவு ஆசிரியர்கள் உள்ளனர். இந்த ஆசிரியர்களை அதிகாரிகள் சரியாக கண்காணிப்பதில்லை, இது முதல் குறைபாடு. மற்றொன்று தேவையான அளவு ஆசிரியர்கள் நியமனம் இல்லாதது, மற்றொரு குறைப்பாடு. ஆசிரியர்கள் தங்கள் பணியை அர்ப்பணிப்போடு செய்யாதது போன்றவையே தேர்ச்சி விகிதம் குறைவுக்கு காரணம் என்கிறார்கள்.


பொதுநலன் விரும்பிகளோ, இந்த மாவட்டத்தில் கிராமங்கள் அதிகளவில் உள்ளன. அந்த கிராமங்களில் வாழ்பவர்களில் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்களால் தங்களது வாழ்க்கையை வாழ்வது இங்கு பெரும் சிக்கலாகவுள்ளது. வெளியூர்களுக்கு அவர்கள் வேலைக்கு செல்வதால், அவர்களால் படிக்கும் பிள்ளைகளை கண்காணிக்க முடிவதில்லை, இதுவும் ஒருகாரணம். அதேபோல், தற்காலத்தில் படிக்க வரும் மாணவர்கள் படிப்பதில் அதிக கவனம் செலுத்துவதை தாண்டி, சாதி பிரச்சனைகளில் அதிகளவில் பள்ளிகளிலேயே ஈடுபடுகின்றனர். இதனால் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை கண்டிக்கும் ஆசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகளை கலைந்தால் மட்டுமே இந்த மாவட்டம் கல்வியில் முன்னேறும் என்றார்.

 

 

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.