Skip to main content

சிறுமி சொன்ன வார்தைகளைக் கேட்டு அதிர்ந்துபோன காக்கிகள்! நடுராத்திரியில் சிறுமிகளுக்கு கட்டாயத் தாலி! -கரோனா கால சிறார் திருமணம்!

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
vellore district corona period wedding police investigation

 

 

"நான் நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்த போது, நள்ளிரவில் என்னை எழுப்பி வலுக்கட்டாயமாக என் கழுத்தில் அந்த ஆள் தாலி கட்டிவிட்டார். அப்போது என் குடும்பத்தினர் எல்லோரும் இருந்தனர்"

 

வேலூர் மாவட்ட கழிஞ்சூர் கிராமத்தை சேர்ந்த அந்த 15 வயது சிறுமி, விருதம்பட்டு காவல்நிலையத்தில் சொன்ன இந்த வார்தைகளைக் கேட்டு அங்கிருந்த காக்கிகள் அதிர்ந்துபோனார்கள். உடனடியாக சமூகநலத்துறை அதிகாரிகள் மூலம் அந்த சிறுமியைக் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுமியின் குடும்பம் விசாரணை வளையத்தில் சிக்கியது.

 

இந்த ஒரு சம்பவத்தோடு இது போன்ற ஏடாகூடங்கள் முடியவில்லை. அடுத்தடுத்தும் இதேபோல் அரங்கேறின. வேலூர் மாநகரம் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயதேயான சிறுமியை, 27 வயது இளைஞருக்கு ஜூலை 12-ந் தேதி திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடக்க, இந்த தகவல் தெரிந்ததால் சமூக நலத்துறை அதிகாரிகள், அங்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பெற்றோர்கள் மீது வழக்கையும் தொடுத்தனர். இதேபோல் அணைக்கட்டு தாலுகா முத்துக்குமரன் மலையை சேர்ந்த 33 வயது இளைஞருக்கு 13 வயது சிறுமியை திருமணம் செய்துவைக்க முயல, அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கலெக்டருக்கு தகவல் கொடுத்தனர். அந்த திருமணமும் தடுத்து நிறுத்தப்பட்டது.

 

vellore district corona period wedding police investigation

 

இதேபாணியில் இராணிப்பேட்டை மாவட்ட ஆற்காடு மாசாப் பேட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ஆந்திரா மாநில சித்தூர் இளைஞருக்கும் ஜூன் 10-ந் தேதி நடக்க இருந்த திருமணமும் தாசில்தார் இளஞ்செழியன் மூலம் நிறுத்தப்பட்டது. இந்த வரிசையில், இராணிப்பேட்டை மாவட்ட கீழ்விளாப்பக்கத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியும், மண்காட்டுசேரியை சேர்ந்த 16 வயது சிறுமியும், திருப்பத்தூர் திருமால்நகரை சேர்ந்த 16 வயதேயான பள்ளி மாணவியும், கும்மிடிகான்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமியும், கவுண்டப்பனூரை சேர்ந்த 16 வயது சிறுமியும், சிறார் திருமணம் என்ற விபத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

 

vellore district corona period wedding police investigation

 

இப்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பால்ய திருமணங்களை வேலூர் மாவட்ட சமூக நலத்துறை தடுத்து நிறுத்தியுள்ளது. திருப்பத்தூர், அரக்கோணம் மாவட்டங்களில் 10 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை வேலூர் மாவட்டத்தில் மட்டும் இப்படி ஏறத்தாழ 32 திருமணங்களையும், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏறத்தாழ 40 திருமணங்களையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். இவ்வளவு கண்காணிப்புக்கு மத்தியிலும் 17 சிறுமிகளுக்கு திருமண கொடுமைகள் அரங்கேறிவிட்டன. இது தொடர்பான வழக்குகளும் அவர்களின் குடும்பத்தினரை நெருக்கி கொண்டிருக்கின்றன.

 

vellore district corona period wedding police investigation

 

சிறார் திருமணங்கள் திடீரென அதிகரிக்க காரணம் என்ன ஆம்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பாபு மணிசெல்வம் சொல்கிறார்... "வறுமையால் மைனராக இருக்கும்போதே சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைக்கும் அவலத்தை தடுப்பதற்காகவே, மூவலூர் ராமாமிர்தம்மாள் பெயரில் திருமண நிதிஉதவி திட்டத்தை தொடங்கினார் கலைஞர். அதைப்பெற திருமணத்தின்போது 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும், 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் வைக்கப்பட்டது. இதனால் சிறார் திருமணங்கள் நின்றது. இப்போது, கரோனாவால் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகியுள்ளது. அதனால் ஒருவனுக்கு வேலை இருக்கும்போதே திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்ற மனோபாவம் பலருக்கும் வந்துவிட்டது. அதேபோல் தொழிற்சாலைகளில் வயது பார்க்காமல் முளைக்கும் காதல் காரணமாகவும் இதுபோன்ற திருமணங்கள் நடக்கிறது'' என்றார் கவலையாய்.

 

ஓய்வுபெற்ற ஆசிரியரும், மனிதவளப் பயிற்சியாளருமான மங்கையர்கரசியோ கரோனா மக்களிடம் வேகமாக முடிவுகளை எடுக்க வைக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள் மூடியிருக்கிறது, பிள்ளைகள் வீட்டில் உள்ளனர். பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள், இதனை அசௌகரியமாக உணர்கிறார்கள். பெண் குழந்தைகளை உடனடியாக திருமணம் செய்துவைத்து அனுப்பிவிட வேண்டும் எனத் துடிக்கிறார்கள். காரணம் பெண்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லாததுதான். அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி 30 வயது கடந்த இளைஞர்கள், மனைவியை இழந்து இரண்டாம் திருமணத்துக்கு ஆசைப்படும் நடுத்தர வயதுடையவர்கள் சிறுமிகளை மணக்க தயாராகிறார்கள். இதேபோல் வசதியான குடும்பங்களிலும் சாதி மாறி பிள்ளைகள் வழிதவறிவிடக்கூடாது என்ற உணர்வோடும் அவசர அவசரமாக சிறார் திருமணங்களை நடத்துகின்றனர். இதன் பாதிப்பை அவர்கள் உணர்வதில்லை'' என்றார் வருத்தமாய்.

 

"பெரியவர்கள் எப்படி இருந்தாலும் இளைஞர்களிடம் உள்ள விழிப்புணர்வே, சிறார் திருமணங்களைத் தடுத்து நிறுத்த உதவியாக இருக்கிறது'' என்கிறார் சமூக நலத்துறையை சேர்ந்த அந்த அதிகாரி. அரும்புகள் கசக்கப்படும் அவலத்துக்கு நிரந்தர முட்டுக்கட்டை போட வேண்டியது அவசர அவசியம்.

 

 

 

Next Story

'காமராஜருக்கு நடந்த நிகழ்வு எனக்கும் நடந்தது'- பரப்புரையில் முதல்வர் சொன்ன சுவாரஸ்யம்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'What happened to Kamaraj also happened to me' - the chief minister said interestingly in the lobby


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து கோட்டை மைதானம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.

பரப்புரை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டை மேலும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். தேர்தல் சீசனுக்கு மட்டுமே பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார். வெள்ள நிவாரணம் கேட்டால் தரமாட்டார். தமிழ்நாட்டை வெறுக்கின்ற பிரதமர் மோடிக்கு பதிலாக இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமராக போகிறவர் நிச்சயமாக இந்திய ஜனநாயகத்தின் மேல் உண்மையான மதிப்பும், இந்திய மக்கள் மீது உண்மையான பாசமும், அரசியல் சட்டத்தை மதிக்கின்ற பண்பும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணையாக நிற்பவருமாக இருப்பார்.

இன்று காலையில் நான் பெருமை கொள்ளக்கூடிய ஒரு செய்தியை சமூக வலைத்தளத்தில் பார்த்தேன். நம்முடைய திட்டங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக இருக்கிறது. இன்று கனடா நாட்டில் காலை உணவு திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த திட்டம் எப்படி உருப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜர் மத்திய உணவு திட்டம் கொண்டு வந்ததற்கு காரணமாக ஒரு சம்பவத்தை சொல்லுவார்கள். பெருந்தலைவர் காரில் போய்க் கொண்டிருந்தபோது விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரை சந்தித்தாராம். அங்கு காரை நிறுத்தி அவர்களை பக்கத்தில் வரச் சொல்லி 'இன்று பள்ளிக்கு போகவில்லையா?' என்று கேட்டார். அந்த பிள்ளைகள் 'எங்கள் குடும்பத்தில் உணவுக்கே வழி இல்லாததால் எங்க அப்பா அம்மா பள்ளிக்கு அனுப்பவில்லை' என்று சொல்லவும் பள்ளியில் மதிய உணவு போட்டால் அதற்காகவாவது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள் என சிந்தித்து யோசித்து காமராஜர் மதிய உணவு திட்டத்தை தொடங்கினார்.

எனக்கும் அதே மாதிரி ஒரு நிகழ்வு நடந்தது. நான் முதலமைச்சரானவுடன் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். ஒரு குழந்தையை பார்த்து 'என்னம்மா சாப்பிட்டீங்களா' என்று எதார்த்தமா கேட்டேன். அந்த குழந்தை 'வீட்டில் அப்பா அம்மா வேலைக்கு போறாங்க, காலையில உணவு செய்ய மாட்டாங்க அதனால் சாப்பிடவில்லை' என்று சொன்னதும் எனக்கு மனசே சரியில்லை.

கோட்டைக்கு போனவுடனே அதிகாரிகளை அழைத்தேன். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வரணும் திட்டத்தை தயார் பண்ணுங்கள் என்று சொன்னேன். அதிகாரிகள் என்னிடம் ரொம்ப பணிவாக சார்  நம்ம நிதிநிலை ரொம்ப மோசமா இருக்கு. அதோடு இல்லாமல் தேர்தல் அறிக்கையில் கூட நாம் இதை சொல்லவில்லை என்று சொன்னார்கள். உடனே நான் சொன்னேன், 'வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன நம் எதிர்கால தலைமுறை குழந்தைகள் தான். அவர்கள் காலையில் நன்றாக சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் படிப்பது மனதில் மனதில் பதியும். இதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நிதி நிலையை சரி செய்யவும் திட்டம் போடுவோம். நீங்க ஃபைலை தயார் பண்ணுங்கள்' என்று சொன்னேன். அந்த ஃபைலில் கையெழுத்து போட்ட கை தான் இந்த ஸ்டாலின் கை''என்றார்.

Next Story

ஏரியில் குளிக்க முயன்ற 4 பெண்கள் உயிரிழப்பு

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
4 women lose their live while trying to bathe in the lake

கோவிலுக்குச் சென்ற நான்கு பெண்கள் ஏரியில் குளிக்கும் முற்பட்ட போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா என்பவர் அவருடைய மகள் லலிதா மற்றும் கல்லூரி மாணவி காவியா அவருடைய தங்கை ப்ரீத்தா ஆகியாருடன் சேர்ந்து வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலுக்கு சென்று வழிபாட்டை முடித்த அவர்கள் கோவிலுக்கு அருகிலேயே உள்ள வேப்பூர் ஏரியை சுற்றி பார்த்துள்ளனர்.

பின்னர் குளிப்பதற்காக ஏரியில் நான்கு பேரும் இறங்கியுள்ளனர். அப்பொழுது நால்வரில் ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று விட, அவரை மீட்க மற்ற மூன்று பேரும் முயன்றுள்ளனர். இதில் நான்கு பேரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். நீரில் சிலர் தத்தளிப்பது அந்த பகுதி மக்களுக்கு தெரிய வர, உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் நால்வரும் உயிரிழந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா ஆகிய நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.