Skip to main content

“என் மீது விழுந்த அடிகளை தாங்கி உயிரை காப்பாற்றியவர் ஆசிரியர்” - பிறந்தநாள் விழாவில் நெகிழ்ந்து போன முதல்வர்

Published on 03/12/2022 | Edited on 05/12/2022


சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் 90வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் தனக்கும் ஆசிரியருக்குமான உறவு குறித்து மிக உணர்ச்சிகரமாக உரையாற்றினார். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, " இன்றைக்கு ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறோம். இந்த அனைத்து கொண்டாட்டங்களுக்கும் அவர் தகுதியான நபர். இந்த தமிழ்ச் சமூகத்துக்கு அவர் ஆற்றிய தொண்டு என்பது ஒரு சில மணி நேரத்தில் கூறி முடிக்கக்கூடியது அல்ல.

 

ரப

 

தமிழகத்தில் நடைபெற்ற பல இக்கட்டான நிகழ்வுகளில் பங்கெடுத்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் இந்த கருப்பு சட்டைக்காரர். குறிப்பாக எமர்ஜென்சி காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் இவரின் பங்களிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்து. குறிப்பாக அந்த காலகட்டத்தில் இவர் ஆரம்பத்திலேயே கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு நான் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டோம். நாங்கள் சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே எங்கள் மீது தாக்குதல்கள் நடத்த ஆரம்பித்தார்கள். குறிப்பாக என்னைக் குண்டாந்தடிகள் கொண்டு தாக்கினார்கள். அடிகள் ஒவ்வொன்றும் எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 

 

அது மிகக் கடுமையான தாக்குதல்களாக இருந்தது. இப்போது இருப்பதைப் போல் கூட அப்போது நான் இருக்கமாட்டேன். மிக ஒல்லியாக மெலிந்த தேகமாகவே இருந்தேன். அவர்களின் தாக்குதலைத் தாங்கும் அளவுக்குக் கூட அப்போது என்னிடம் உடல் பளு இருக்காது. அந்த நேரத்தில் சிறையில் என் மீது விழுந்த அடிகளைத் தாங்கிக்கொண்டவர் ஒருவர் சிட்டிபாபு. மற்றொருவர் நம்முடைய ஆசிரியர். என் மீது விழுந்த அடிகளை தான் வாங்கிக்கொண்டு என் உயிரைக் காப்பாற்றியவர் அவர். தற்போது கூட எங்களின் அரசியல் எதிரிகள் எங்களைத் தாக்கும்போது எங்களுக்கு முன் அதனைத் தடுத்து நிறுத்தி எங்களைக் காக்கும் கேடயமாக இருப்பவர் ஆசிரியர் அவர்கள். இதனை திமுகவைச் சேர்ந்த அனைவரும் அறிவர். அதிலே இருவேறு மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 

 

தினந்தோறும் அவர் விடுகின்ற அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் எடுக்கின்ற முடிவுகளைத் தீர்மானிக்கின்றோம். ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே அவர் இத்தனை ஆண்டுக்காலம் இருந்து வந்துள்ளார். பத்து வயதில் கூட்டத்திலே பேச ஆரம்பித்த அவர் அண்ணாவால் மேடையிலேயே பாராட்டைப் பெற்றவர். அத்தகைய பேச்சாற்றல் கொண்டவர். அவரை தனித் தனியாகப் புகழ வேண்டும் என்று சொன்னால் இந்த நாள் மட்டும் பத்தாது. பேசிக்கொண்டே போனால் அடுத்த நாளே வந்துவிடும். அந்த அளவுக்குத் தனிச்சிறப்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்டவர்.

 

இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட அவரை நாங்கள் வாழ்த்துவது என்பது ஏதோ அவருக்கு நாங்கள் சேர்க்கின்ற புகழோ அல்ல. அவரை வாழ்த்துவதே எங்களுக்கு நாங்கள் தீட்டிக்கொள்கின்ற புகழாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த தமிழ்ச் சமூகத்திற்கு அளவில்லாத உழைப்பைக் கொடுத்துள்ளார். குறிப்பாக பெரியாரின் பேரன்பைப் பெற்றவராக அவர் இறக்கும் வரையில் தொடர்ந்து இருந்து வந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பது மிகக் கடினமான காரியம். ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து அதையும் அவர் சாதித்துள்ளார். எனவே இவர் இன்று 90வது பிறந்தநாளைக் கொண்டாடுவது மட்டுமல்ல, நூறாவது பிறந்த நாளையும் இவர் கொண்டாட வேண்டும் அதனை இந்த தமிழ்ச் சமூகம் பார்க்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கூறி மகிழ்கிறேன்" என்றார்.

 

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.