Skip to main content

"விவசாயம் செய்து தோடு, மூக்குத்தியை மீட்க பார்ப்பார்களா, இல்லை கலெக்டரிடம் புகார் கொடுப்பார்களா..?" - விசிக செல்லதுரை காட்டம்!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

dfgj

 

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இதன் ஒருபகுதியாக லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் ஏறியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியா முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை உ.பி. அரசுக்கு எதிராக தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செல்லதுரையிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

வேளாண் சட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த வழக்கு விசாரணையில் பதிலளித்த மத்திய அரசு, இன்னும் மூன்று மாதங்களுக்கு இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்திருக்கிறது. இந்நிலையில், இந்தக் கருத்தை எடுத்துக்கொண்டு பாஜக தரப்பு, விவசாயிகள் ஏன் போராடுகிறீர்கள் என்று தொடர்ந்து கேட்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

அவர்கள் (விவசாயிகள்) இந்திய பிரதமரிடம் பேச வேண்டும் என்றுதான் இத்தனை நாட்களாக காத்துக்கிடக்கிறார்கள். வாங்க, வந்து அவர்களோடு நின்று பேசுங்கள். மக்களுக்காகத்தான் நீதிமன்றம், மக்களுக்காகத்தான் அரசு. எத்தனையோ சட்டங்கள் இயற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்கள் போராட்டத்தின் காரணமாக அவை எல்லாம் மாற்றப்படவில்லையா? இவர்கள் ஏன் மாற்றுதல் என்ற பேச்சையே பேசக்கூடாது என்கிறார்கள். அது என்ன மூன்று மாதம் மட்டும் நிறுத்தி வைப்பது, மொத்தமாக இந்த சட்டத்தையே வாபஸ் வாங்குங்கள். 

 

விவசாயிகள்தான் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டேன் என்கிறார்கள். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து தயாராகத்தான் இருக்கிறோம் என்று மத்திய அரசு தரப்பு தொடர்ந்து கூறிவருகிறார்களே? 

விவசாயிகள் தொடர்ந்து பேசினார்கள், இவர்கள் யாரும் விவசாயிகளின் பேச்சைக் காது கொடுத்து கேட்க தயாரில்லை.  இந்த சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருக்கிறது என்று தொடர்ந்து குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் கேட்பதற்கு ஆளில்லை. குறிப்பாக விலை நிர்ணயம் செய்ய உரிமையில்லை என்று விவசாயிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களைக் கூறுகிறார்கள். ஆனால் இதுதொடர்பான புகார்களை ஆட்சியர்களிடம் தெரிவிக்கலாம் என்று கருத்து சொல்கிறார்கள். அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் விவசாயம் செய்து அடகு வைத்திருக்கும், மூக்குத்தி, தோட்டை மீட்க நினைப்பார்களா, ஆட்சியரிடம் சென்று புகார் கொடுப்பார்களா? அந்த வேலையை இவர்கள் பார்த்தால், விவசாயத்தை யாரு, அரசாங்கம் பார்க்குமா? இது அனைத்தும் விவசாயிகளை ஏமாற்றும் போக்காகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது.  

 

இதெல்லாம் பெரும் முதலாளிகளிடம் சாத்தியப்படும். பயிரை விளைவித்து, குடோனில் அடைத்து வைத்து, தங்களுக்குத் தேவையான விலை கிடைக்கும் வரையில் முறையிடுவார்கள், இல்லை என்றால் நீதிமன்றம் சென்றாவது உரிய விலையைப் பெறுவார்கள். ஆனால், பாமர விவசாயிகளுக்கு அது சாத்தியப்படுமா என்று பார்க்க வேண்டும். இவர்கள் போராடும் விவசாயிகளையே வண்டியை ஏற்றி தாக்குகிறார்கள். விவசாயிகளின் குறைகளைக் கேட்ட அவர்கள் எப்படி செயல்படுவார்கள். அதிகாரிகள் இவர்களை ஒருபொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். எனவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த விவசாய விரோத மூன்று சட்டங்களைக் கண்டிப்பாக மத்திய அரசு நீக்க வேண்டும்.

 

 

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.