Skip to main content

எங்களிடம் ஒரு மந்திரம் இருக்கு! செயல் தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி

Published on 03/02/2019 | Edited on 04/02/2019
vasanthakumar



தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நக்கீரன் இணையதளத்திடம் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
 

செயல் தலைவர் பதவியை எப்படி நினைக்கிறீர்கள்?
 

ராகுல்காந்தி இந்த பதவியை வழங்கியிருக்கிறார். நல்ல பதவியை தந்த அவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, கட்சிக்காக மேலும் தீவிரவமாக உழைப்பேன். 
 

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட்டுள்ளாரே?
 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை நியமிப்பதும், மாற்றுவதும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரின் விருப்பம். அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்படுகிறோம். 
 

பாராளுமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?
 

காங்கிரஸ் - திமுக கூட்டணித்தான் நிலைப்பாடு. 
 

திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி உள்ளது?
 

திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. 
 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும்?
 

அது ராகுல்காந்திக்குத்தான் தெரியும். 
 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் குமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாவது இடத்திற்கு வந்தீர்கள். வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுவீர்களா?
 

மீண்டும் குமரி தொகுதியில் போட்டியிடுவதற்கு ராகுல்காந்தியிடம் வாய்ப்பு கேட்போம். அவர் அனுமதித்தால் போட்டியிடுவோம். 
 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நிறைய உட்கட்சி பூசல் உள்ளதே?
 

காங்கிரஸ் கட்சி எந்த ஒரு தனி நபருக்கும் சொந்தமில்லை. அதில் நான் பெரியவனா? நீ பெரியவனா என்று சண்டைப்போடுவதில் அர்த்தமேயில்லை. எல்லோருக்கும் பெரியவங்க ராகுல்காந்திதான். ராகுல்காந்திதான் நெம்பர் 1. நாங்களெல்லாம் ஜீரோ. அதனால் ராகுல்காந்தி என்ன சொல்கிறாரோ அதனை நாங்கள் கேட்கப்போகிறோம். 
 

உட்கட்சி பூசலால் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்காதா?
 

அதற்கெல்லாம் எங்களிடம் ஒரு மந்திரம் இருக்கு. நாங்கள் அந்த மந்திரத்தை பிரயோகிச்சமென்றால் எல்லாம் சரியாகிவிடும். 
 

ஜி.கே.வாசன் மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைவற்கான வாய்ப்பு உள்ளதா?
 

கண்டிஷன் பேரில் யாரையும் சேர்க்க மாட்டார்கள். யாராக இருந்தாலும் அவர்களாக வந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொள்ள வேண்டியதுதான். 
 

இடைக்கால பட்ஜெட் வரக்கூடிய தேர்தலுக்கு பின் எடுக்கப்பட உள்ள புதிய வளர்ச்சிப்பாதைக்கான டிரைலர் என பிரதமர் நரேந்திர மோடி சொல்லியிருக்கிறாரே?
 

விவசாயிக்கு ஒரு நாளைக்கு 17 ரூபாய் கொடுப்பேன் என்பது டிரைலரா? ஜி.எஸ்.டி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பதிலும் இல்லை. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி எதுவும் இல்லை. இந்த தற்காலிக பட்ஜெட் தற்காலிகமாகவே இருக்கும். பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவோம். 
 

மாநில அளவில் பொறுப்புக்கு வந்துவிட்டீர்கள். பாஜகவின் மாநிலத் தலைவராக இருப்பவர் தமிழிசை சௌந்தரராஜன் உங்கள் உறவினர். அவர்கள் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கடுமையான பேட்டியோ, அறிக்கையோ வெளியிட்டால்...
 

அதையும் தாண்டி, அதற்கு மேலேயும் அறிக்கை வெளியிடுவோம். 

 

vasathakumar



உறவினர் என்பதால்...
 

யார் எந்த இடத்தில் இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் பிறப்பால் காங்கிரஸ்காரர்கள். எங்களுக்கு காங்கிரஸ் கட்சித்தான் முக்கியம். சொந்தமெல்லாம் சம்மந்தமில்லை...
 

ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்படுவாரா?
 

கண்டிப்பாக.
 

மம்தா பானர்ஜி நடத்திய பொதுக்கூட்டத்தில் தேர்தலுக்குப் பின் பிரதமரை தேர்ந்தெடுப்போம் என அதில் கலந்து கொண்ட தலைவர்கள் பேசினார்களே?
 

அது அவர்களுடைய நிலைப்பாடு. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னுறுத்துவோம். வெற்றி பெறுவோம். அவர்களும் எங்களை ஆதரிப்பார்கள். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.