Skip to main content

"கோவில் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறோம்" -  விசிக வன்னி அரசு

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

Vanniarasu  Interview 

 

தலித்துகளின் மீதான தொடர் வன்கொடுமை நிகழ்வுகள் மற்றும் தற்கால அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை நம்மோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு பகிர்ந்து கொள்கிறார்.

 

சமீபத்தில் விழுப்புரம் அருகே நடந்த திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் ஆதிதிராவிட இளைஞர்கள் கோவிலுக்குள் சாமி கும்பிடச் சென்றனர். அவர்களை உள்ளே விடக்கூடாது என்று ஒலிப்பெருக்கி மூலம் சிலர் அறிவித்தனர். இதை எதிர்த்து ஆதிதிராவிட மக்கள் சாலை மறியல் செய்த பிறகு தான் இந்தச் செய்தி வெளியே வருகிறது. கிராமப் பகுதிகளில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் சாதி வெறியர்களின் கட்டுப்பாட்டில் தான் இன்றும் இருக்கின்றன. யார் உள்ளே வரவேண்டும், வரக்கூடாது என்பதை அவர்கள் தான் கட்டுப்படுத்துகின்றனர். இதைப் பின்னாலிருந்து இயக்குவது பாட்டாளி மக்கள் கட்சி தான். 

 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை வரவேற்கும் டாக்டர் ராமதாஸ், அனைவரும் கோவிலுக்குள் வருவதை ஏன் எதிர்க்க வேண்டும்? சனாதனத்தை ஏற்றுக்கொண்டவராக மருத்துவர் ராமதாஸ் இருக்கிறார். அவருடைய கட்சியும் அப்படித்தான் இருக்கிறது. பாமக செய்யும் இந்த சாதி வெறுப்புக்கு கோவில் நிர்வாகமும் உறுதுணையாக இருக்கிறது. அதனால் மீண்டும் கோவில் நுழைவுப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபடவிருக்கிறோம். அம்பேத்கர், பெரியார் ஆகியோருடைய போராட்டங்களின் தொடர்ச்சிதான் இது. தமிழ்நாட்டில் பாமகவும் பாஜகவும் தான் சாதி அமைப்பை தூக்கிப் பிடிக்கின்றன. 

 

தான் சார்ந்த சமூக மக்களை பாமக தவறான முறையில் எப்போதும் வழி நடத்துகிறது. வன்னிய இளைஞர்களில் முற்போக்கு பேசக்கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் பாமகவின் சதியில் மாட்டிக்கொள்ளக் கூடாது. வன்முறையாளர்களை அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பாமகவின் செல்வாக்கு தற்போது சரிந்து வருகிறது. பாமகவினர் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். எனவே தங்களுடைய இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அப்பாவி மக்களுக்கு சாதிவெறியை ஊட்டி, வன்முறையைத் தூண்டி விடுகின்றனர். குடும்ப அட்டையை கிழித்துப் போடுவதெல்லாம் முட்டாள்தனமான நடவடிக்கை. 

 

வன்னிய மக்களும் கல்வி வேலைவாய்ப்பில் முன்னேற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்களை ஜாதிச் சான்றிதழை கிழித்துப் போடச் செய்வதன் மூலம் என்ன மாற்றத்தை உருவாக்க விரும்புகிறது பாமக? தேர்தலுக்காக மீண்டும் வன்முறை அரசியலைக் கையிலெடுக்கிறார்கள். இந்து அறநிலையத்துறைக்குள் இருக்கும் சாதியவாதிகளை அரசு அகற்ற வேண்டும். பாமக எப்போதுமே சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றுதான் செயல்படுகிறது. அம்பேத்கரின் சிலையை அதிகமாக வைத்தேன் என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே அவருடைய கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறது பாமக. பாமகவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். அதை மறைப்பதற்காகவே இந்த நாடக அரசியலை நடத்தி வருகிறார்கள். 

 

விசிகவில் பல தலைவர்களை எங்களுடைய தலைவர் திருமாவளவன் அவர்கள் உருவாக்கி வருகிறார். அதனால்தான் சில நிகழ்ச்சிகளுக்கு இரண்டாம்கட்ட தலைவர்களை அழைக்கச் சொல்கிறார். எங்கள் தலைவர் இன்று அனைவராலும் கொண்டாடப்படுகிறார். அனைவரும் தங்கள் வீட்டில் ஒருவராக அவரைப் பார்க்கின்றனர்.

 

 

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.