Skip to main content

“சாதி மதம் பெண்களை அடிமைப்படுத்தவே... ஆண்களுக்கு விழிப்புணர்வு தேவை” - வனிதா ஐபிஎஸ்

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

 Vanitha IPS  Interview

 

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. புரட்சியாளர்கள் மூலம் எவ்வளவோ விழிப்புணர்வு வந்துவிட்டது. ஆனாலும் சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன. பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், ஆண்களுக்கு ஏற்பட வேண்டிய விழிப்புணர்வு குறித்து நம்மோடு கூடுதல் காவல்துறை இயக்குநர் வனிதா ஐபிஎஸ் உரையாடுகிறார்.

 

என்னுடைய சொந்த ஊர் ராமநாதபுரம். வளர்ந்த ஊர் மதுரை. இரண்டும் வீரத்திற்குப் பெயர்போன ஊர்கள் தான். ஆனால், வீரம் என்றாலே அது ஆண்களோடுதான் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது. மனதில் அதீத தைரியத்தோடு செயல்படும் பெண்கள் ஒரு காலத்தில் ஆண்களின் வெற்றிக்குப் பின்னால் இருந்தார்கள். இப்போது அவர்களே வெளியே வந்து சாதிக்கிறார்கள். மகாகவி பாரதியாரும், தந்தை பெரியாரும் தான் எனக்கு பெரிய ரோல்மாடல்கள். திருமணம் பல நேரங்களில் பெண்கள் சாதிப்பதற்கு இடையூறாக இருக்கிறது. திருமணம் குறித்த என்னுடைய புரிதலை முற்றிலும் மாற்றியது தந்தை பெரியார் தான்.

 

பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் இயங்குகின்றனர். திருமணமான பிறகு ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலை வரும்போது குடும்பத்தை நிர்வகிப்பதற்காக பெண்கள் தான் தங்களுடைய வேலையை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. குடும்பத்தையும் வேலையையும் ஒன்றாக நிர்வகிக்க முடியும் என்கிற நம்பிக்கை பலருக்கு இல்லை. பெண்களுக்கான சிறை மனதில் தான் இருக்கிறது. சதி, குழந்தைத் திருமணம் போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்குப் பெரிய போராட்டங்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் அவர்களுக்கு 'விடுதலை' தேவைப்பட்டது.

 

ஒரு பெண் ஏன் தன்னுடைய சுதந்திரத்தை ஆணிடமிருந்து வாங்க வேண்டும்? ஆண்கள் செய்யும் தவறுகளை நாங்களும் செய்ய வேண்டும் என்பதுதான் தற்போது பெண் சுதந்திரமாகக் கருதப்படுகிறது. மேலைநாட்டு உடைகள் அணிவதிலும் பெண் சுதந்திரம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஒரு காலத்தில் இன்ஜினியரிங் ஆண்களுக்கான துறையாகத் தான் இருந்தது. மருத்துவப் படிப்பும் அப்படித்தான் இருந்தது. இப்போது நிலைமை மாறி வருகிறது. தங்களுடைய பலத்தை மேலும் அதிகரித்து அதன் மூலம் பெண்கள் வளர வேண்டும்.

 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண் குழந்தைகளின் பிறப்பு வீதம், கல்வி கற்பது, வேலைக்குச் செல்வது என அனைத்தும் அதிகம். நம்முடைய அரசாங்கங்கள் தொடர்ந்து சமூகநீதியைத் தூக்கிப் பிடிப்பவையாக உள்ளன. அனைத்து இடங்களிலும் தற்போது பெண்கள் இருக்கின்றனர். அவர்களின் மனத்தடை நீங்கியுள்ளது. பெரியார் சொன்ன பல கருத்துக்கள் அப்போது ஏற்கப்படவில்லை. அதனுடைய மகத்துவம் இப்போது புரிகிறது. தமிழ்நாட்டில் இருந்தது போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் வேறு எங்குமே இல்லை.

 

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன். யாருக்கும் நான் அடிமை இல்லை என்கிற எண்ணம் எனக்கு வந்தது பெரியாரால் தான். பெரியார் எதையும் யார் மீதும் திணித்ததில்லை. திருமணம் என்பதே ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான இலக்கு அல்ல என்று உணர்த்தியவர் பெரியார். கற்பு என்கிற விஷயத்தை வைத்து தான் பெண்களை அடிமைப்படுத்தினர். கலப்புத் திருமணத்தை ஆதரித்தவர் பெரியார். அவர் கூறிய பல விஷயங்கள் ஆண்களை விட, ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு அதிகம் புரியும்.

 

அவரைப் போலவே அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரும் பல்வேறு காலங்களில் பெண்களுக்கு உந்துசக்தியாக இருந்திருக்கின்றனர். ஆண்கள் செய்யும் அனைத்தையும் இந்த சமூகம் எளிதாகக் கடந்து செல்லும். ஆண்கள் போலவே ஒரு பெண்ணும் சகஜமாக அனைவரோடும் பேசினால் அவளை ரவுடி என்று சொல்வார்கள். பெண்களை மீண்டும் மீண்டும் அடிமைப்படுத்தவே இந்த சமூகம் விரும்புகிறது. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் தொடர்ந்து ஒடுக்கப்படுவது பெண்கள்தான். நீயும் நானும் சமம் என்று சொன்னதால் தான் தந்தை பெரியார் ஆதிக்கவாதிகளால் அதிகமாக விமர்சிக்கப்படுகிறார்.

 

ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என்று பிரிப்பது தான் தவறு. மனிதரை மனிதராக மதிக்க அனைவருக்கும் கற்றுத் தர வேண்டும். ஆண், பெண் இருவரையும் சமமாக மதித்து வளர்க்க வேண்டும். சமையற்காரராக வேலை செய்பவர்கள் கூட வீட்டில் பெண்களைத் தான் சமைக்கச் சொல்வார்கள். ஆணாதிக்கத்தின் குறியீடு இது. உடல் மீதான உரிமை தங்களுக்கு இருக்கிறது என்று தெரியாமலேயே பல பெண்கள் வாழ்கின்றனர். எதையுமே அடுத்தவருக்காகத் தான் நாம் செய்கிறோம். ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை அனைத்து பெண்களும் உணர வேண்டும்.

 


 

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.