Skip to main content

“ரவுடியிஸம் பற்றி சொல்வதற்கு தகுதியே இல்லாத கட்சி திமுக...” வானதி சீனிவாசன் ஆவேசம்...

Published on 27/08/2020 | Edited on 28/08/2020
Vanathi Srinivasan

 

 

ஆகஸ்ட் 24ல் நடந்த தமிழக பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டத்தில், ''தேசிய மற்றும் தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க தடையாக இருக்கிறது. நாட்டின் நலனுக்காக உழைக்காதவர்களுக்கு, புகலிடமாக தி.மு.க உள்ளது. அவர்களுக்கு பதிலடி கொடுக்க நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டார் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா. இதற்கு உடனடியாக, தமிழகத்தின் பண்பாட்டிற்கும், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பா.ஜ.க. என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பான அறிக்கை வெளியிட்டிருந்தார். திமுகவில் மேலும் பல நிர்வாகிகள் நட்டாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர்.

 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் பாஜகவின் தமிழக மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன்.

 

பாஜக செயற்குழுவில் பேசிய ஜெ.பி.நட்டா, கட்சி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தது ஏன்...

 

“தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ், தேசிய தலைவர் நட்டாவும் ஒருமித்த குரலில் திமுகவை ஆட்சிக்கு வரவிடமாட்டோம் என்ற தெளிவான அரசியல் வழிகாட்டுதலை செயற்குழுக் கூட்டத்தில் கூறியிருக்கிறார்கள். அரசியல் கட்சியினுடைய செயற்குழுவிற்கு செயல் திட்டங்களை வகுப்பது மட்டுமல்ல, மக்களுக்கு யார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பும் உள்ளது. அந்த வகையில் தேசிய தலைவர், திமுக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கிற வாயிலாக வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் தடையாக இருக்கிறார்கள் என்பதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். 

 

திமுக மத்திய கூட்டணி அரசில் இருந்தார்கள். சக்தி வாய்ந்த துறைகள் அவர்களிடம் இருந்தது. கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றியது தவறு. மத்திய பட்டியலில் இருந்து முழுமையாக கொண்டுவர வேண்டும் என்கிறார்கள். இவர்களும் 10 வருடம் ஆட்சியில் இருந்தவர்கள்தான். அப்போது அதைப் பற்றி எதுவுமே பேசாமல் இன்று கல்வி பட்டியல் பற்றி கவலைப்படுவது ஏன்? 

 

bjp

 

தமிழகத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களைவிட அதிகமான நிதி திட்டங்களை மத்தியில் உள்ள மோடி அரசு ஒதுக்கியுள்ளது. ஸ்மார்ட் சிட்டிகள், அம்ருத் திட்டம், 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி மற்றும் நிதி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்,  ரூபாய் 5 லட்சம் கோடிக்கு மேலாக தமிழகத்திற்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூபாய் 6 ஆயிரம், பெண்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு, விலையில்லா எரிவாயு, மாணவர்களுக்கு வித்தியலட்சுமி கடன் உதவி திட்டம், அவர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் உதவி, விவசாயத்தை சார்ந்து இருக்கும் மாடுகள் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு கிசான் கடன் அட்டை உள்ளிட்ட திட்டங்களைக் கொடுத்திருக்கிற பிரதமரை எப்போது பார்த்தாலும் தமிழகத்திற்கு எதிராக இருக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். அதனால் நாங்கள் சொல்கிறோம், இந்த வளர்ச்சிகளை பொறுத்துக்கொள்ளமால் ஸ்டாலின் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அதை மனதில் வைத்துதான் எங்கள் தேசிய தலைவர் அந்த வார்த்தையை கூறினார். 

 

குடும்பத்தின் உறுப்பினர்கள் பொறுப்புக்கு வருவது சமூக நீதியா? பாராளுமன்ற உறுப்பினர்களெல்லாம் கட்சியின் தலைவர்களுடைய வாரிசுகளுக்கு வழங்குவது சமூக நீதியா? பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை மாநிலத் தலைவராக்கி ஒரு அங்கீகாரத்தை கொடுக்கிறது பாஜக.” 

 

தமிழகத்தின் பண்பாட்டிற்கும், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பா.ஜ.க. என நட்டாவுக்கு பதில் அளித்திருக்கிறாரே ஸ்டாலின்... மேலும் மத்திய பாஜக அரசு கொண்டு வரும் புதிய கல்விக்கொள்கை உள்பட சில திட்டங்களை எதற்காக எதிர்க்கிறோம் என்ற காரணத்தையும் எதிர்க்கட்சிகள் சொல்கிறார்களே...

 

“அரசியல் பண்பாட்டை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்தது திமுக. அவர்களுடைய அரசியல் யாருக்கு பலனளித்திருக்கிறது என்றால் திமுக தலைவர்கள், நிர்வாகிகள் பலன் பெற்றிருக்கிறார்கள். இரண்டு மொழிகள் படித்தால் போதும் என்று ஏழைகளுக்கு சொல்லிவிட்டு அவர்கள் நடத்துகின்ற பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பணம் பெற்றுக்கொண்டு மூன்றாவது மொழியை கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் தமிழ் வளர்வதை காண முடியவில்லை. தமிழ் பெயர், தமிழ் மொழியை காணவில்லை. ஆனால் பாஜக மீது மொழி ரீதியான அரசியலை முன்னெடுக்கிறார்கள். 

 

புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழித்திணிப்பும் இல்லை. எந்த மொழியை வேண்டுமானாலும் 3வது மொழியாக கற்றுக்கொள்ளலாம் என்பதுதான் அதன் சாராம்சம். புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள். மற்ற மாநிலங்களில் 3வதாக ஒரு மொழியை தேர்வு செய்ததால் அவர்களது தாய்மொழி அழிந்ததா? உலகத்தின் மிக மூத்த மொழிக்கு நாம் சொந்தக்காரர்கள். தமிழ் மொழியை மற்ற மாநிலத்தவர்களும் படிப்பதற்கான ஒரு வாய்ப்பு உருவாகியிருக்கிறது. தமிழ் படித்தால் வேலைக் கிடைக்காது என்ற நிலையை உருவாக்கியது இங்குள்ள திராவிடக் கட்சிகளின் சாதனை.”

 

ஆளும் அதிமுக அரசும் இதனை எதிர்க்கிறதே?

 

“அதிமுகவுக்கு நாங்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறோம். உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள். காலத்தின் தேவையை புரிந்துகொள்ளுங்கள். எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்ற வாய்ப்பை குழந்தைகளுக்கு கொடுங்கள். வசதிப்படைத்தவர்கள் சி.பி.எஸ்.சி.யில் கற்றுக்கொள்கிறார்கள். அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் நிலையை பாருங்கள் என சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்.”

 

இந்தி-சமஸ்கிருத திணிப்பு என்பது தொல்காப்பியர் -நாயன்மார்கள்-ஆழ்வார்கள் இவர்கள் வகுத்த தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக இருக்கிறதே? 

 

“நாயன்மார்கள், ஆழ்வார்கள், தேவாரம், திருவாசகம், தொல்காப்பியம், கம்பராமாயணம் இவையெல்லாம் தமிழர்களின் அடையாளங்கள். இதுதான் பண்பாடு. இதைப்பற்றி திமுக தலைவர்கள் என்றாவது யோசித்திருக்கிறார்களா? இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக சிதைத்தது திமுக தலைவர்கள், அவர்களுடைய சித்தாந்தம்.”

 

அபின் கடத்தல்-குண்டாஸ் பேர்வழிகள் தமிழக பாஜகவுக்குள் முக்கியத்துவம் பெறுவதாக விமர்சனங்கள் எழுகிறதே?

 

“ஒரு கட்சியில் ஒருவர் இணைவதற்கு முன்பாக குற்றவாளியாக இருந்திருக்கலாம். அவர் தனது வாழ்க்கையில் திருந்தி வாழ்கிறேன் எனக் கூறிவிட்டு, அதற்கு பின்பாக கட்சியில் இணைக்கிறார். ரவுடியிஸம் பற்றி குறை சொல்வதற்கு திமுக தகுதியே இல்லாத கட்சி. அரசியலில் ரவுடியிஸத்தை கொண்டு வந்ததே திமுகதான். பாஜகவில் தற்போது நிறைய பேர் இணைந்து வருகிறார்கள். திரைநட்சத்திரங்கள், பிரபலங்கள், முன்னாள் உயர் அதிகாரிகள், முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மந்திரிகள் எல்லோரும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்”.

 

 

 

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.