Skip to main content

ரபேல் விவகாரத்தில் லாபம் பெற துடித்த காங்கிரஸ்! வானதி சீனிவாசன் பதிலடி (சிறப்பு பேட்டி)

Published on 06/01/2019 | Edited on 06/01/2019
Vanathi Srinivasan




‘ரபேல் விவகாரத்தில் இந்திய பங்குதாரர் ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு கொடுத்தது யார்? ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ‘பைபாஸ் அறுவை சிகிச்சை’ செய்தபோது ராணுவ அமைச்சக அதிகாரிகள் ஏதேனும் அதிருப்தி தெரிவித்தனரா?’ ஆகிய கேள்விகளை தனது டுவிட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ள ராகுல்காந்தி, இந்த வீடியோவை பார்த்துவிட்டு பகிர வேண்டும் என்றும், அந்த கேள்விகளை ஒவ்வொரு இந்தியனும், பிரதமரிடமும், அவரது மந்திரிகளிடமும் கேட்குமாறும் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், 

 

டசால்ட்ஸ் நிறுவனம் தனது பார்ட்னர்ஸை தேர்வு செய்வது முழுக்க முழுக்க அவர்களுடைய சுதந்திரமான உரிமை. அரசாங்கம் டசால்ட்ஸ் நிறுவனத்தோடு விமானம் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடும்போது அதில் குறிப்பிட்ட சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் என்ற அந்த கட்டளையை மட்டுமே அரசாங்கம் சொல்ல முடியுமே தவிர, யாரிடம் வாங்க வேண்டும் என்பதைப் பற்றி இந்திய அரசாங்கம் கவலைப்படாது. 

 

ஏனென்றால் முழுக்க முழுக்க அது டசால்ட்ஸ் நிறுவனத்தினுடைய சுயவிருப்ப உரிமை. அந்த வகையில் அவர்கள் அனில் அம்பானியினுடைய நிறுவனத்தோடு மட்டுமல்ல, இன்னும் நூற்றுக்கணக்கான நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் கோவையைச் சேர்ந்த நிறுவனங்கள் உள்பட அடக்கம். 


 

தன்னுடைய விமான உதிரி பாகங்களுக்கு இந்திய நாடு முழுவதும், இந்தியாவில் தயாரித்துக்கொண்டிருக்கக்கூடிய நிறுவனங்களோடு அவர்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். இந்த ஒப்பந்தம் இந்திய அரசாங்கத்திடம் அவர்கள் தெரிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவர்களை பொறுத்தமட்டில் இந்திய அரசாங்கம் கேட்ட விமானங்களை மட்டும் கொடுக்க வேண்டும். இரண்டாவது அந்த விமான தயாரிப்பில் குறிபிட்ட சதவீத பொருட்கள் இந்தியாவில் வாங்க வேண்டும். ஆக எந்த நிறுவனத்தோடு அவர்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள் என்பது முழுக்க முழுக்க அவர்களுடைய சுய விருப்பம் உரிமை சார்ந்த ஒன்று. அனில் அம்பானி நிறுவனத்தை தேர்வு செய்தது டசால்ட்ஸ் நிறுவனம் மட்டுமே. 

 

இரண்டாவது கேள்விக்கு பதில்,  ‘பைபாஸ் அறுவை சிகிச்சை’ செய்கிறபோது ராணுவ அமைச்சகம் அதில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தாலோ, சட்ட விரோதம் இருந்தால் மட்டுமே குரல் எழுப்ப முடியுமே தவிர, பிரதமரின் அத்தனை முடிவுகளுக்கும் எதிர்க்குரல் எழுப்பிக்கொண்டிருந்தால் அரசாங்கத்தில் ஒரு வேலையும் நடக்காது. 



 

rahulgandhi




இதற்கு முன்பாக பேச்சுவார்த்தை மட்டுமே 10 வருட காலம் செய்து கொண்டிருந்த காங்கிரஸ் அரசு, தற்போது நமது விமானப் படைக்கு ரபேல் விமானங்கள் உடனடி தேவையாக இருப்பதால் அரசாங்கம் விரைவாக இந்த முடிவை எட்டியிருக்கிறது. 

 

ரபேல் விமான விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஏதோ ஒரு வகையில் லாபம் பெற துடித்தது. அது நடக்காததால் இன்று பாஜக அரசு மீது இருக்கின்ற கோபத்தில் தனக்கு ஆதாயம் கிடைக்கவில்லை என்று பொய் குற்றச்சாட்டுக்களை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட திரும்ப திரும்ப எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். 

 

2019 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றால் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கிரிமினல் விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளாரே?
 

அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பா ஆகட்டும் பிறகு பார்க்கலாம். 

 

தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வெளியாகிறது. அதைப்பற்றி...

 

பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதி என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கடந்த ஜூலை மாதமே அறிவித்துவிட்டார். கூட்டணி அமைக்கப்போவது உறுதி. 
 

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா?
 

எந்தக் கட்சியோடு கூட்டணி, எத்தனை தொகுதி என்பதெல்லாம் தேர்தல் நெருங்க நெருங்க முடிவாகும். பேச்சுவார்த்தைப் பற்றி இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை.
 

இவ்வாறு பதில் அளித்தார். 


 

 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.