Skip to main content

ஊழலை தடுக்க முடியவில்லை என கூறியது காங்கிரஸ்: வானதி சீனிவாசன்

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

 

இந்தி மொழி பற்றி பேசியதை தவறாக புரிந்து கொண்டார்கள் என அமித்ஷா கூறியது, தமிழக பாஜக தலைவர் யார்? உள்ளிட்ட கேள்விகளுக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நக்கீரன் இணையதளத்திடம் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
 

தமிழக பாஜக தலைவர் நியமனத்தில் தாமதம் ஏன்? அந்தப் பதவிக்கு போட்டி கடுமையாக உள்ளதா? 
 

இந்தக் கேள்விக்கான பதிலை என்னால் சொல்ல முடியாது. இது அகில இந்திய தலைமை அறிவிக்க வேண்டியது.


 

 

உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழி இருக்க வேண்டும். நாடு முழுவதும் அதிகமாக பேசப்படும் மொழி இந்திதான். எனவே அதை தேசிய மொழியாக்க வேண்டும் என அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு வந்ததால்தான், ''நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என நான் கூறவில்லை. 2வது மொழி ஒன்றை கற்க வேண்டும் என்றால் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என்று கூறினேன்'' என தெரிவித்தாரா அமித்ஷா?
 

இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்க மாட்டோம் என பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. அமித்ஷாவினுடைய டிவிட்டர் பதிவுக்கு தென் மாநிலங்களில் எதிர் கருத்துக்கள், விமர்சனங்கள் வைத்தார்கள். தான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்று உணர்ந்தவுடன் விளக்கம் கொடுத்திருக்கிறார். தான் சொல்லப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று நினைத்து ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார். 


 

 

இந்தியை திணித்தால் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தி திணிப்பை வடஇந்தியாவில் கூட பல மாநிலங்களில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ரஜினி கூறியிருக்கிறாரே?
 

ரஜினி அவ்வப்போது தன்னுடைய அரசியல் கருத்துக்களை சொல்லி வருகிறார். அந்த வகையில் இந்த கருத்தையும் சொல்லியிருக்கிறார். இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்க மாட்டோம் என பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. 

 

Vanathi Srinivasan


 

பொருளாதார விஷயங்கள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அதை எல்லாம் மறைக்க வேண்டி பாஜக எடுத்துள்ள ஆயுதம் தான் இந்தி திணிப்பு என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனரே?
 

இல்லை. பொருளாதார சூழலை பொருத்தவரைக்கும் மத்திய நிதியமைச்சரும், நிதி அமைச்சக அதிகாரிகளும் நாடு முழுக்க ஒவ்வொரு துறையிலேயும் அணுக வேண்டிய பிரச்சனைகள், கொடுக்க வேண்டிய கவனங்கள் என்ன என்பதை தீவிரமாக பரிசீலித்து ஒவ்வொரு வாரமும் நிதியமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் தொழில்துறையில் உள்ள அச்சத்தை போக்குவதற்காக. அதனால் கனிசமான முன்னேற்றமும் ஏற்பட்டு வருகிறது. 
 

குறிப்பாக தமிழகத்திற்கு அவர் நேரடியாக வந்திருந்து, ஐந்து துறையை சார்ந்தவர்களிடம் ஒவ்வொரு துறையினரிடமும் கிட்டதட்ட ஒன்றேகால் மணி நேரத்திற்கு மேலாக அவர்களுடைய பிரச்சனையை கேட்டு, இன்றைக்கு அதற்கெல்லாம் அறிவிப்புகளை கொடுத்து வரும் சூழல் வந்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் என்ன சொல்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகள் இப்போது இதுமாதிரியான குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்கள். 


 

amitshah



இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறை தோல்வி அடைந்து விட்டது. பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை தோற்றுவிட்டது என்பதில் மக்களுக்கு சந்தேகம் இல்லை என்ற அமித்சாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதே?
 

அமித்ஷா ஒரு கூட்டத்தில் பேசுகின்றபோது, உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு மத்தியில் ஒரு நிலையான, பலமான அரசாங்கம் வேண்டும். கடந்த கால சரித்திரத்தை நினைவூட்டுகிறார். யுபிஏ 1 மற்றும் யுபிஏ 2வது ஆட்சி காலத்தில் கூட்டணி கட்சிகளால்தான் எங்களால் ஊழலை தடுக்க முடியவில்லை காங்கிரஸ் கட்சி கூறியது. ஜிஎஸ்டி போன்ற முடிவுகளை எடுக்க சுணக்கம் இருந்தது. இப்போது அந்த நிலைமையெல்லாம் மாறியிருக்கிறது. ஐந்து முக்கிய முடிவுகளை அந்த அரசாங்கம் 10 வருடத்தில் எடுத்தது, ஆனால் ஐந்து வருடங்களில் ஐம்பது முடிவுகளை எடுத்திருக்கிறோம். அதனால் பல கட்சிகள் இருக்கின்ற அந்த கூட்டணி முறை, நாட்டினுடைய வளர்ச்சிக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கவில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று அமித்ஷா சொன்னார். 
 

ஆனால் அரசியல் அமைப்பு சட்டத்தில் நம்பிக்கை இருக்கக்கூடிய, அரசியல் அமைப்பு சட்டத்தின் வாயிலாக அரசாங்கத்தை நடத்துகின்ற கட்சி, இதில் ஏதோ ஒன்று செய்து விடுவார்கள் அல்லது வேறு ஏதாவது ஒரு அதிரடியான முடிவு என்ற மாதிரியெல்லாம் எதிர்க்கட்சிகள் மாற்றுக் கருத்தை முன்வைக்கிறார்கள். சர்வாதிகாரப்போக்கிற்கு செல்கிறது என்பது போன்ற விமர்சனங்களை வைக்கிறார்கள். 

 

chennai



சென்னையில் பேனர் சரிந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இனியாவது பேனர் கலாச்சாராம் ஒழியுமா?
 

இதற்கு முன்பாக நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும் கூட, நிர்வாகங்களும் அந்த பேனர்கள் விசயத்தில் போதிய அக்கறை காட்டவில்லை. பேனர் கலாச்சாரம் மட்டுமல்ல, ஆடம்பர கலாச்சாரம், அரசியல் கட்சிகள் தேர்தலில் பணம் செலவழிப்பது உள்ளிட்ட நிறைய மாற்றங்கள் வரவேண்டியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில். ஏனென்றால் அதிகமாக தேர்தலில் செலவழிக்கின்ற மாநிலமாக தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த சூழலையும் அரசியல் கட்சிகள் மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கெல்லாம் உயிர்பலி கொடுத்தப்பின்னர்தான் இந்த மாதிரி மாற்றங்கள் வரணும் என்பதுதான் வேதனையாக உள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.