Skip to main content

மணிப்பூர் கலவரத்தின் பின்னணி; கனிம வளத்தைத் திருட கார்ப்பரேட் திட்டம் - வளர்மதி

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

 Valarmathi Interview

 

மணிப்பூர் கலவரத்தின் உள் அரசியல் குறித்து சமூக செயற்பாட்டாளர் வளர்மதி விளக்குகிறார்

 

மணிப்பூரில் இன்று பாதிக்கப்பட்ட தரப்பாக, ஒடுக்கப்படும் தரப்பாக இருப்பது குக்கி பழங்குடியின மக்கள்தான். ஆனால் அவர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களிலும் இதற்கு முன் ஈடுபட்ட வீரியமான பழங்குடியினர்தான். மணிப்பூர் என்பது தமிழ்நாடு போன்ற மாநிலம் அல்ல. மணிப்பூர் மிகச் சிறிய மாநிலம். வெறும் 32 லட்சம் மக்கள் தொகை கொண்ட மணிப்பூர் மாநிலம், தமிழ்நாட்டின் ஒரு பெரிய மாவட்டத்தின் அளவுகூட இல்லை. எனவே மக்கள் தொகையோடு சேர்த்து இதை நாம் பார்க்க வேண்டும். 

 

மெய்தேய், குக்கி, நாகா ஆகிய சமுதாயங்கள்தான் மணிப்பூரில் முக்கியமானவை. பழங்குடியினராக இல்லாத மெய்தேய் சமூகத்தினர் திடீரென்று பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு மற்ற இரு சமூகங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அது நியாயமானதுதான். மணிப்பூரில் கனிம வளங்கள் நிரம்பியிருக்கின்றன. கனிம வளங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் பொதுவாகவே கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக அரசு ஏற்படுத்தும் இதுபோன்ற பாதிப்புகளை எதிர்கொண்டுதான் வருகின்றனர். 

 

இந்தக் கனிம வளத்தை அடைவதற்காகத் தான் இவ்வளவும் நடத்தப்படுகின்றன. இதற்குள் இருக்கும் கனிமவள அரசியலை யாரும் பேசுவதில்லை. மணிப்பூரில் நடக்கும் கொடுமைகளைப் பார்க்கும்போது நமக்கு தூக்கம் வரவில்லை. இவ்வளவு கொடூரமாக மனிதர்கள் இருப்பார்களா என்று தோன்றுகிறது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அனைத்து பழங்குடி இயக்கங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டனர். இந்துத்துவ சித்தாந்தம் கொண்ட, பாஜகவைச் சேர்ந்த, ஆயுதம் தாங்கிய இளைஞர்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் அவர்கள் கூறினர்.

 

இது ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் நடத்தப்படும் கலவரம்தான். போலீசார்தான் தங்களைக் கலவரக்காரர்களிடம் கொண்டுபோய் விட்டனர் என்று அங்குள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்கின்றனர். பழங்குடியினப் பெண்ணை குடியரசுத் தலைவராக நாங்கள் ஆக்கினோம் என்று பெருமை பேசிய இவர்கள், இன்று பழங்குடியின பெண்கள் பாதிக்கப்படும்போது அமைதியாக இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் மீது குஜராத்தில் தாக்குதல் நடத்தியது போல, கிறிஸ்தவர்கள் மீது இப்போது மணிப்பூரில் தாக்குதல் நடத்துகிறார்கள். 

 

மணிப்பூர் விவகாரத்தில் வீடியோ மட்டும் வெளிவராமல் இருந்திருந்தால் பிரதமர் இதுகுறித்து பேசியிருக்க மாட்டார். குற்றவாளிகளில் ஒருவனுடைய வீட்டை அங்கிருக்கும் பெண்களே தீ வைத்துக் கொளுத்தினர். எங்கேயோ மணிப்பூரில் தானே இந்தப் பிரச்சனை நடக்கிறது என்று நாம் இதை சாதாரணமாகக் கடந்துவிட்டால், நாளை இது நமக்கும் நடக்கும். எங்களைப் போன்ற போராட்டக்காரர்கள் போராடுவது தேவையற்றது என்று பலர் நினைத்திருந்தனர். நாங்கள் ஏன் போராடுகிறோம் என்பது இப்போது அவர்களுக்குப் புரிந்திருக்கும்.

 

 

 

Next Story

வாக்குப்பதிவு முடிந்ததும் தொடங்கிய வன்முறை; மணிப்பூரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Incident at CRPF soldiers in Manipur

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்துக்கு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் 2வது கட்டத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனக்குழு நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் பாதுகாப்பு படையினர் (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, குக்கி இனக்குழு நள்ளிரவு 12 மணிக்கு மேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 2 பாதுகாப்பு படை வீரர்களை, அங்கிருந்த மற்ற வீரர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்திலேயே நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.