Skip to main content

மீசை முளைத்த பத்திரிகை - கவிப்பேரரசு வைரமுத்து

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

 

“சுடும்வரை நெருப்பு
சுற்றும்வரை பூமி
போராடும் வரை மனிதன்
நீ மனிதன்”
 

என்ற என் கவிதை வரி எவருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ சகோதரர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு நன்கு பொருந்தும்.

 

vairamuthu with nakkheeran gopal


வாழ்க்கைக்கு மத்தியில் போராட்டம் என்பதுபோய், போராட்டத்திற்கு மத்தியில் வாழ்வு என்பதே அவர் எதிர்கொண்டிருக்கும் எதார்த்தம். அருப்புக்கோட்டையிலிருந்து ஒரு கூழாங்கல் அளவு பணத்தோடும், இமயமலை அளவு நம்பிக்கையோடும் புறப்பட்டு வந்த அந்த கிராமத்து மனிதன் இன்று ஊடகத்துறையில் உலகறிந்த ஒருவராய் உயர்ந்து நிற்பதற்குக் காரணம் அவரது முயற்சி, முனைப்பு, வீரம் மற்றும் விவேகம்.
 

இந்தச் சரிந்துபோன சமூக அமைப்பில் ஒரு மனிதன் பதவிக்கும் பணத்துக்கும் புகழுக்கும் கொடுக்கும் விலையைவிட உண்மைக்குக் கொடுக்கும் விலையே மிகமிக அதிகமாகிவிட்டது. சற்றே காலத்தின் முதுகுப்புறம் நின்று யோசித்துப் பார்த்தால் எல்லாக் காலங்களிலுமே மனிதக்கூட்டம் உண்மைக்குத்தான் அதிகபட்ச விலையாக உயிரைக்கூட கொடுத்து வந்திருக்கிறது என்று விளங்குகிறது.
 

தன் உடலுக்கு - உடைமைக்கு - உயிருக்கு நேரும் ஊறுகளைத் தாண்டித்தான் நக்கீரன் பத்திரிகையை இத்தனை ஆண்டுகாலம் உணர்ச்சியோடு ஓங்கி நடத்தி வருகிறார் நக்கீரன் கோபால் அவர்கள். ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருந்த செய்தி என் கவிதை மனத்தை கனக்கச்செய்தது. “என் மீது போடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 211. இதில் ஒன்பது வழக்குகள் கொலை, கடத்தல், பொடா போன்ற பயங்கர வழக்குகள். இதற்காக நான் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் செலவழித்த தொகை நான்கரைக் கோடி ரூபாய். ஆனாலும் எந்த விதத்திலும் நாங்கள் சோர்ந்தோ, அடிபணிந்தோ போகவில்லை”. வலியிலும் வணங்காமைதான் நக்கீரன் கோபாலின் தமிழ்த்தனம்.
 

தமிழ்நாட்டு இதழியல் வரலாற்றில் வெளிவந்த பத்திரிகைகள் சில ஆயிரங்களைத் தாண்டும். எத்துணை பத்திரிகைகள் கால்நூற்றாண்டுக்கு மேல் நிலைத்திருக்கின்றன என்று கணக்குப் பார்த்தால், அந்த நெருப்பாற்றில் கருகிப் போனவை எத்துணை என்ற கணக்குத் தெரியும்.
 

பூகம்பங்களும் எரிமலைகளும் சுனாமிகளும் தாக்கித் தகர்த்த பொழுதும், சாம்பலுக்குள்ளிலிருந்து ஜனிக்கும் ஃபீனிக்ஸ் பறவையாய் நக்கீரன் மீண்டும் மீண்டும் உயிர்த்து மேலெழுந்து பறந்திருக்கிறது.
 

நக்கீரன் என்ற சொல்லுக்கே ஒரு குறியீட்டுப் பொருள் உண்டு. உண்மை சொன்னால் சாமி எரிக்கும் அல்லது சமூகம் எரிக்கும். ஆனால், எரிக்கப்பட்டாலும் சாம்பலுக்குள்ளிருந்து உண்மை எழுந்து வரும். அப்படித்தான் ஆட்சியாளர்களால்,  அரசுகளால், சமூக விரோதிகளால், முதலாளித்துவத்தால் எத்தனையோ எதிர்ப்புகளை எதிர்கொண்ட பிறகும் நக்கீரன் உண்மையை இறுகப் பற்றிக்கொண்டு உயிரைக் காப்பாற்றி வருகிறது.
 

ஈழத்தமிழர்களின் இதயத் துடிப்பாய் இயங்கியவர் நக்கீரன் கோபால். உயிரைப் பணயம் வைத்துக் கன்னட ராஜ்குமாரை மீட்டெடுத்தவர் நக்கீரன் கோபால். கலைஞருக்குச் செல்லப் பிள்ளையாக இருந்தாலும் அவரையும் செல்லமாக விமர்சித்தவர் நக்கீரன் கோபால். செல்வி ஜெயலலிதா என்ற பேராளுமையை எதிர்கொண்டு மீண்டவர் நக்கீரன் கோபால்.
 

உலகமயமாதலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தவரும் அவரே. உழைக்கும் மக்களுக்கும் நடைபாதை வாசிகளுக்கும் பாதிக்கப்பட்ட பாமரர்களுக்கும் நீதிகேட்டு நிற்கும் பத்திரிகையாளரும் அவரே.
 

மீசையால் முரட்டுத் தோற்றத்தை உருவாக்கிக்கொண்டாலும், சபையில் நல்ல தமிழை ரசித்துக் கரவொலி செய்து கரகமாடும் குழந்தையும் அவரே.
 

பத்திரிகைத்துறையில் பல மாமனிதர்கள் தங்கள் முகங்காட்ட விரும்புவதில்லை. ஆனால், வாழும் பத்திரிகையாளர்களில் சமூகத்தின் முகத்தை அறிந்தவரும், தன் முகத்தை சமூகத்திற்கு அறியச்செய்தவரும் நக்கீரன் கோபால் என்றால் அது மிகையாகாது.
 

தன் பத்திரிகைக் குடும்பத்து உறவுகளுக்கு இவரைப்போல் உயிர் கொடுக்கும் சகோதரர் எவருமில்லை.
 

அவர் ஆரோக்கியத்தோடு வாழவேண்டும்; அவர் வாழ்வு நீளவேண்டும். ஊடகத்துறையில் உச்சங்களைத் தொடவேண்டும். விரைவில் நக்கீரன் தொலைக்காட்சி தொடங்கப்பெற வேண்டும்.
 

மீசைத் தமிழரை ஆசைத் தமிழால் வாழ்த்துகிறேன்.
 

 

 

 

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. 

Next Story

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் வைரமுத்து சந்திப்பு!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் இன்று (01.03.2024) கொண்டாடப்பட்டது. இதற்காகப் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தி.மு.க. தலைமை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அதே சமயம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் என். கண்ணையா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே... தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்” எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் இணைத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.