Skip to main content

"எனக்காக அஞ்சு லட்சம் தான் வாங்குனாரு; பிறகு அதுவும் வேண்டாம்னு சொல்லிட்டாரு..." - வைகோ நெகிழ்ச்சி

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

ghj


தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேசிய அரசியலில் எப்போதும் தவிர்க்க முடியாதவராகவே இருந்திருக்கிறார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியில் ஆரம்பித்து பல பிரதமர்களோடு நல்ல தொடர்பிலிருந்துள்ளார். குறிப்பாக வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களோடு நெருங்கிப் பழகியவர். நம்முடைய நக்கீரனில் சரித்திரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய கடந்தகால அரசியல் நினைவலைகளை பகிர்ந்து வரும் அவர், பேரறிவாளனுக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டவுடன் நடைபெற்ற சம்பவத்தை தனக்கே உரிய வார்த்தை நடையில்  அவர் விவரித்தார். 

 

இதுதொடர்பாக பேசிய அவர், " பேரறிவாளன் உட்பட மூனு பேரோட தூக்குத் தண்டனைய ரத்து பண்ணுறது சம்பந்தமா வாஜ்பாய போய் பார்த்தப்போ அவர் அத்வானிய பார்க்க சொல்லிட்டார். நான், நெடுமாறன், மணியரசன், இன்னும் சில பேர் போய் அவர சந்திச்சோம். அத்வானி, இதை நாங்க செஞ்சோம்னா காங்கிரஸ்காரன் எங்கள குறை சொல்லுவான். அதனால இந்த ஃபைல தூக்கி மூலைல போட்டுட்றோம். பேசாம கெடக்கட்டும்னு போட்டாரு. அதுனால தான் அத்தன வருசம் தாமதம் ஆச்சு. அதன் பிறகு அவங்கள எப்படியாவது விடுவிக்கனும்னு நான் போயி மன்மோகன் சிங்க பார்க்கிறேன். அவரு ப.சிதம்பரத்துக்கு போன் பண்ணி வைகோ வராரு முக்கியமான விசயமா. நீங்க பேசுங்கங்கிறார். ப.சிதம்பரம் அதைப்பத்தி ஒரு முடிவும் எடுக்க முடியலன்னு ரொம்ப மழுப்பலா பதில் சொன்னார். 

 

அவங்களோட தூக்க ரத்து பண்ணிடுவாங்கன்னு நான் நெனச்சிட்டு இருந்தேன். ஒரு நாலஞ்சு நாள் இருக்கும். ஈழத்தமிழர் மற்றும் சில பிரச்சினைக்காக மத்திய அரச எதிர்த்து போராட்டம் பண்ண ஒரு ஐந்நூறு பேர அழைச்சிக்கிட்டு நான் டெல்லிக்கு போயிருந்தேன். அப்போ இங்க இருந்து தியாகு போன்ல  கூப்பிட்டு டைம்ஸ் ஆப் இந்தியா பாத்திங்களா? மூனு பேருக்கும் தூக்கு உறுதி ஆயிடுச்சினு சொன்னார். நான் அப்படியே அங்கயே படியில தடுமாறி விழப் போனேன். கணேசமூர்த்தி வந்து என்ன பிடிச்சிக்கிட்டார். அந்த ஷாக்க என்னால தாங்கிக்க முடியல.

 

ராம்ஜெத்மலானி ஒருத்தரால தான் அவங்கள காப்பாத்த முடியும், அது வைகோவால தான் முடியும்னு எல்லாரும் சொல்றாங்க. நான் பேரறிவாளன் உட்பட மூனு பேரையும் பார்க்கிறதுக்கு வேலூர் போயிட்டு இருந்தேன். அப்போ ஜெத்மலானிக்கு போன் பண்ணி மூனு பேருக்கும் கேபிடல் பனிஷ்மெண்ட், ஆகஸ்ட் 9ம் தேதி தூக்குனு தீர்ப்பு கொடுத்துட்டாங்கனும், நீங்க வந்து தடுத்து நிறுத்தனும்னும் சொல்றேன். நெறைய கேஸ் இருக்கு என்னால வர முடியாதேங்கிறாரு, எனக்காக வாங்க, தமிழர்களுக்காக வாங்க. I’m your friend. For my sake you please come. அப்படிங்கிறேன். சரினு ஒத்துக்கிட்டு 30ம் தேதி கோர்ட்ல ஸ்டே வாங்குறாரு. 

 

காங்கிரஸ் அப்பீல் பண்ணி கேஸ் டெல்லிக்கு போச்சு. சுப்ரீம் கோர்ட்ல ஒவ்வொரு வாய்தாவுக்கும் பதினஞ்சுல இருந்து இருபது லட்சம் வாங்குறவரு ஜெத்மலானி. எனக்காக அஞ்சு லட்சம் தான் வாங்குனாரு. ஒரு ஆறு தடவ கொடுத்திருப்பேன். அதுக்கப்புறம் என் கைல இருந்து தான் கொடுக்குறேன்னு தெரிஞ்சி அதுவும் வேண்டாம்னு சொல்லிட்டாரு. அவருடைய வாதங்களால தான் மூனு பேரோட தூக்கு ரத்தாச்சு" என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.